I LOVE TAMIL


Friday, June 26, 2009

`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்


`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்
வெள்ளி, 26 ஜூன் 2009( 12:17 IST )
சென்னையைச் சேர்ந்த சன் ஸ்டார் டிரேடிங் நிறுவனம், பிரிட்டன் நாட்டின்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `பயோபின்' எனும் மக்கிப்போகும்தன்மையுடைய பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தவகை பைகள் அல்லது கவர்களால், சுற்றுச்சூழல் மாசு படுவதுபெருமளவுக்xகுத் தவிர்க்கப்படுவதாக நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ்கேதான், சி.எல். முத்தையா ஆகியோர் தெரிவித்தனர்.



இந்தியாவின் தற்போதைய முக்கியப் பிரச்சினையான `புவி வெப்பமடைதலை' ஓரளவுக்கு தவிர்க்க இந்த வகை பைகள் உதவும் என்று தெரிவித்த அவர்கள், வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் எதிர்கால சந்ததியினரை பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்றனர்.

இந்தவகை பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படுவதாக ராஜேஷ் குறிப்பிட்டார்.

மக்கும் தன்மைக்கான (ASTM 5208) ஏஎஸ்டிஎம் 5208, 5510, 5988-96, 6954-04 சான்றிதழ்களையும் இந்த பைகள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் `சிம்பொனி என்விரான்மென்ட் இங்' நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட d2W தொழில்நுட்பத்தில் `பயோபின்' பைகள் தயாரிக்கப்படுவதாக முத்தையா தெரிவித்தார்.

பல்வேறு அளவுகளில் இந்த வகை பைகள் கிடைப்பதாகவும், வழக்கமான பிளாஸ்டிக் பைகளைப் போன்றே தோற்றமளித்த போதிலும் சில மாதங்களில் மக்கும் தன்மை கொண்டவை என்பதோடு, பிளாஸ்டிக் பைகளுக்கே உரிய அனைத்து அம்சங்களும் கொண்டவை என்றார் அவர்.

மேலும் முழுக்க, முழுக்க மறுசுழற்சிக்கு ஏற்றவை. இவற்றை மறுசுழற்சி செய்யும்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

பாலி எத்திலின் அல்லது பாலி புரோப்பிலின் முறையில் இவை தயாரிக்கப்படுவதாகவும் இயக்குனர்கள் கூறினர்.


இந்த வகை பைகளை மக்கச் செய்வதால் கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் மற்றும் கழிவுகளாக மாறி விடும் என்றும், கழிவுகளும் மிகவும் குறைந்த அளவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், கழிவுகளின் தன்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பயோபின் பைகளை ஐஎஸ்ஓ 9001 -2000 தரச்சான்று பெற்ற சிம்பொனி பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகிறது.

நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி. நிர்மல் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பைகளை அறிமுகப்படுத்தியமைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

எக்ஸ்னோரா எப்போதுமே பசுமையை நோக்கியே செயல்பட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். பசுமைப் புரட்சியை நோக்கிய மற்றொரு மைல்கல்லாக `பயோ பின்' பைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ப்ரிஸம் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யன் பட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி : http://tamil.webdunia.com/newsworld/finance/news/0906/25/1090625091_1.htm

Thursday, June 11, 2009

பேராபத்தை எதிர்நோக்கும் பொதிகை!

பேராபத்தை எதிர்நோக்கும் பொதிகை!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
First Published : 10 Jun 2009 01:24:58 AM IST

பொதிகை மலையை செம்மலை, குடைமலை என்றும் அழைப்பர். சீன யாத்ரிகர் யுவான் சுவாங் இம்மலையிலுள்ள சந்தன மரங்களின் சிறப்புகளைப் பற்றியும், தலாமி - பொதிகைத் தென்றலைப் பற்றியும் போற்றியுள்ளனர். நற்றிணையும், பட்டினப்பாலையும் மலை மேகங்கள் தவழும் உயரத்தைக் கொண்டதாகவும், விண்முட்டும் சிகரங்களை உடையதாகவும் பொதிகை மலை திகழ்கிறது எனப் பகர்கின்றன.
அருணகிரிநாதரும், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியாரும் இம்மலையின் சிறப்பைப் பற்றி மெய்மறந்து பாடியுள்ளனர். பொதிகைக் காட்டில் மேய்கின்ற கழுதைகூட இசை ரசனையை வெளிப்படுத்தும் என்று பாரதி கூறியுள்ளார். கடந்த காலத்தில் வரலாற்றில் சொல்லப்பட்ட கொற்கை துறைமுகம், சிறப்புப் பெற்ற பழைய காயல் மாதிரி பொதிகை மலையும் தன் சிறப்பை இழந்துவிடக் கூடுமோ என்கிற ஐயம் சமீபகாலமாக ஏற்படுகிறது.

ஓங்கி உயர்ந்த மலைகள், பச்சை பசேலென அடர்ந்த காடு, ஓசையில்லாமல் நடமாடும் வனவிலங்குகள், அற்புதமாக ரீங்காரமிடும் பறவைகள், தரையை நோக்கிப் பாயும் குளிர்ச்சியான அருவிகள், சலசலக்கும் பொருநை ஆற்றின் நதி மூலம் போன்ற காட்சிகள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சம் சமீபகாலமாக நம்முன் எழுகிறது.

சிரபுஞ்சிக்கு அடுத்து 4,300 மில்லி மீட்டர் மழை இங்குதான் பெய்கிறது. இதனால்தான் தாமிரபரணி ஜீவநதியாக ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உருவாகி அதே மாவட்டத்தில் புன்னக்காயலில் கடலில் சேர்கிறது. 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள இங்குள்ள பசுமை மாறா காடுகள் கடந்த 30 ஆண்டுகளில் வெட்டப்பட்டு, மத்திய அரசு அமைத்த அகஸ்தியர் தேசிய பூங்காவும்கூட அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது. வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் - 1972, வனப் பாதுகாப்புச் சட்டம் - 1980, பயோ டைவர்சிட்டி மசோதா - 2005 எனப் பல சட்டபூர்வமான நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டும் வனச் செல்வங்களை நம்மால் பாதுகாக்க இயலவில்லை.

பொதிகை மலை வழியாக தமிழகத்திலிருந்து திருவனந்தபுரம் செல்ல மலை வழிச் சாலை அமைக்க 2003-ல் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல், வனம், விலங்குகள் போன்றவை பாதிக்கப்படும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பாபநாசம் - காரையாறு அணை, கன்னிக்கட்டி வழியாக திருவனந்தபுரம் செல்லும் தூரம் 122 கிலோமீட்டர் ஆகும். சுமார் 7 மணி நேரம் ஆகும். இரண்டாவது கியரில்தான் செல்ல முடியும். இம்மலையில் 5,000 அடி உயரம் உள்ள பள்ளத்தாக்குகள் உள்ளன.

காரையாறு மற்றும் கன்னிக்கட்டியிலிருந்து சிறிது தொலைவில் கேரள எல்லை வருகிறது. அப்பகுதி கரடுமுரடாக இருப்பதைத் திருத்த வேண்டுமென்றால் மரங்களை வெட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 60 அடி பள்ளத்தில் ஓடும் பேயாறு பகுதியில் போக்குவரத்துப் பாதை அமைக்கவே முடியாது. இவற்றையெல்லாம் சிந்திக்காமல் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே நாகர்கோவில் வழியாக 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவனந்தபுரத்தை அடைய வசதியாகவும், எளிதாகவும் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த காட்டுச் செல்வத்தை அழித்துத்தான் பாதை அமைக்க வேண்டுமா என்பதுதான் நமது கேள்வி. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டை - ஆரியங்காவு - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியும் திருவனந்தபுரத்தை அடையலாம்.

பொதிகை மலைக்கு மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அகத்தியர் தங்கிய இப் பொதிகை மலை உச்சி. அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் 42 கிலோமீட்டர் செங்குத்தான மலையை ஏறினால் பொதிகையின் கொடுமுடியை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து 6,125 அடி உயரத்தில் அங்குள்ள பூங்குளம் என்ற இடத்திலிருந்துதான் தன்னிகரில்லாத தாமிரபரணி புறப்படுகிறது. தென்றலும், தமிழும் தவழும் இந்த உச்சி இன்றைக்கு பல சீரழிவுகளுக்கு உள்ளாகிவிட்டது.

சித்ரா பௌர்ணமி அன்று பயணிகள் இங்கே வருவது உண்டு. 1970-ல் அகத்தியருக்கு இங்கே கோவில் கட்டப்பட்டது. அப்பொழுது அதிகமான மக்கள் நடமாட்டம் அங்கே இல்லாமல் இருந்தது. வனவிலங்குகள் குறிப்பாக புலிகள் அதிகமாக நடமாடும் பகுதியாகும் இது. பல சித்தர்களும் உலவுவதாக நம்பிக்கையும் உண்டு.

1980 வரை குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் சித்ரா பௌர்ணமிக்கு இங்கே சென்று பிரார்த்தனை செய்தனர். பசும்பொன் தேவர் 1953-ல் ஒருநாள் இரவு முழுதும் தனியே அமர்ந்து இந்த இடத்தில் தியானம் செய்ததும் உண்டு. ஆனால் இப்பொழுது இந்த இடம் சித்ரா பௌர்ணமியன்று கிட்டத்தட்ட 2,000 பேர் செல்கின்ற யாத்ரீகர் தலமாக ஆகியுள்ளது.

3 நாள்கள் தங்கும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அச்சமயம், பிளாஸ்டிக் பைகள் குப்பை குப்பையாக அங்கும் இங்கும் வீசி எறியப்படுவதைப் பார்க்கலாம். இதனால் வனவிலங்குகள் கலைந்து ஓடும் நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சித்ரா பௌர்ணமி அன்று பயணிகள் தங்கும் 3 நாள்களுக்கான வசதிகளும், காடு வழியே செல்லாமல் அதிர்மலை எஸ்டேட் வழியாகச் செல்லக்கூடிய வகையில் பாதைகள் அமைத்தால் பொதிகை மலையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கலாம்.

சொரிமுத்து அய்யனார் கோயில் இங்குள்ள சிறப்பாகும். சொரிமுத்து அய்யனார் தன்னுடைய மனைவிகளான பூரணா, புஷ்பகலா ஆகியோருடன் இங்கே எழுந்தருளியுள்ளார். இக்கோயில் சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. பத்மநாபபுரம் மன்னன் மார்த்தாண்ட வர்மனை பதவியிலிருந்து இறக்குவதற்கு சூழ்ச்சி நடந்துபோது, அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பியோடிய மார்த்தாண்ட வர்மன் சொரிமுத்து அய்யனார் கோயிலில் மறைந்து வாழ்ந்து வந்தான்.

சிங்கம்பட்டி பாளையக்காரர் அவருக்கு உதவி செய்து வந்தார். தன்னுடைய குதிரைப் படையை அனுப்பியது மட்டுமல்லாமல் தன்னுடைய மகனையும் சிங்கம்பட்டி பாளையக்காரர் அனுப்பி வைத்தார். அந்த இளவரசர் போரில் இறந்தார். இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மன், சிங்கம்பட்டி பாளையக்காரர்களுக்கு பொதிகை மலை வட்டாரத்தை ஒட்டியுள்ள 74,000 ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கினார். அன்றிலிருந்து சிங்கம்பட்டி பாளையக்காரர்கள் இக்கோயிலில் பூசைகள் நடத்தி வருகின்றனர். இதற்கும் ஆடி அமாவாசை திருவிழாவன்று பயணிகள் கட்டுக்கடங்காமல் வருவது உண்டு.
இங்குள்ள இஞ்சிக்குளியில் வாழும், காணி மக்கள் என்ற பழங்குடியினர் ""நாங்கள் காலையில் எழுந்தால் சிங்கம், புலி, கரடி ஆகியவற்றின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். எங்கள் வேலையை நாங்கள் செய்வோம். எங்கள் பக்கத்திலேயே அந்த விலங்குகள் வந்து செல்லும். விலங்குகளுக்கும் இந்தக் காட்டில் யார் வாழ்கிறார்கள் என்று அறியும் சக்தி உள்ளது. எங்களால் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என்று அந்தப் பழங்குடியினர் சொல்லும்போது மானிடத்திற்கும் விலங்கினத்திற்கும் இடையே நிலவும் ஒருமைப்பாட்டின் பெருமையைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கையின் செல்வங்களுக்கும் ஆபத்து என்ற நிலைதான் உள்ளது. எந்த மாவட்டத்திற்கும் இல்லாதவாறு தமிழர்கள் பிரித்து வைத்த ஐவகை நிலங்கள் ஒருசேர அமைந்ததுதான் நெல்லை மாவட்டம். ஒருகாலத்தில் ராஜபாளையம் - சாத்தூர் - சாயல்குடி வடக்கு எல்லையாகவும், தெற்கு எல்லையாக வள்ளியூர் - மூன்றடைப்பு, மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்கே வைப்பாறு, திருச்செந்தூர் மற்றும் உவரி என்ற வங்கக் கடற்கரைப் பகுதியாகவும் அமைந்த வீரபூமிதான் அன்றைய திருநெல்வேலி.
தெற்குப் பகுதியிலுள்ள மூன்றடைப்புக்கும் கூந்தன்குளத்திற்கும் ரஷியா, சைபீரியா, மத்திய ஆசியா, ஜெர்மனி, மங்கோலியா போன்ற பல நாடுகளில் உள்ள 55 வகையான வெளிநாட்டுப் பறவைகள் நவம்பர் மாதம் வந்து ஜூலை மாதம் வரை தங்கி கூடு கட்டி குஞ்சு பொறித்து, தாயும் சேயும் தங்களின் சொந்த நாடுகளுக்குச் செல்வதுண்டு. இந்த இயற்கைக் குணம் தொடர்ந்து கண்முன் தெரிந்தாலும் பறவைகள் வருகை குறைந்து வருகின்ற நிலையும் உள்ளது. இதற்கு இயற்கையை நாம் போற்றாததும் ஒரு காரணமாகும்.
அதுபோலவே கிழக்கு எல்லையில் தங்களுக்குத் தேவையான மீன்கள் இயற்கையின் மாற்றத்தால் கிடைக்கவில்லை என்ற மீனவர்களின் வேதனைக் குரலும் கேட்கிறது. குமரி முனையில் சுனாமிக்குப்பின் கடற்கரை எல்லையை மீறி கடல் உள்ளே வருகிறது. ஆனால் திருச்செந்தூரில் மாறுபட்ட நிலையில் கடல் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கின்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன.
இம்மாவட்டத்தின் வடபகுதியில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள கரிசல் பூமியில் வெயிலும் வறட்சியும்தான் இயற்கை தந்த சீதனங்கள். இதையெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்கின்றவர்கள் குடிக்கத் தண்ணீருக்கு பல மைல்கள் போக வேண்டும். அதுதான் பாலச்சந்தரின் தண்ணீர்! தண்ணீர் பூமி!!
இருக்கின்ற நீரையும் பாதிக்கக்கூடிய அளவில் விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் கீழநம்பியாபுரம், அம்மன் கோவில்பட்டி ஆற்றங்கரை, விரிசம்பட்டி, தோணித்துறை, களியாவூர், வைப்பாறு மற்றும் தாமிரபரணியில் கன்சாபுரம், கருங்குளம், கொங்கராயன்குறிச்சி, முக்காணி போன்ற தாமிரபரணி நதிப் பாதையில் 3 அடிக்கு மேலாக குழிதோண்டி மணல் எடுப்பதால் தண்ணீர் கிடைக்காத நிலை. மணல் கொள்ளையால் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளுக்குப் பாதுகாப்பில்லை. மயிலாப்பூர் அணைக்கட்டு பெரும் பாதிப்பில் உள்ளது. அதுபோல திருவைகுண்டத்தில் உள்ள பாலமும் அழிவு நிலையில் உள்ளது.
அதுமட்டுமா? பனங்கற்கண்டையும், நுங்கையும், பதநீரையும், குடிசைகள் அமைக்க உதவும் ஓலைகளையும் தருகின்ற பனைகள் ஒரு காலத்தில் நெல்லை மாவட்ட மக்களோடு பின்னிப் பிணைந்திருந்தன. தூத்துக்குடி, திருந்செந்தூரிலிருந்து தொடங்கி மேற்கே செங்கோட்டை, புளியறை, அச்சன்கோவில் வரை பரவியிருந்த 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பனை மரங்கள் வெட்டப்பட்டன. கம்பீரமாகக் காட்சி அளிக்கும் பனை மரங்களை இன்றைக்கு காணவில்லை. ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய "புத்தம் வீடு' என்ற புதினத்தில்தான் அக்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் அமைந்த பனைத் தொழில் கலாசாரத்தை அறிய முடிகிறது.
இன்றைக்கு கல்குவாரி என்று எடுத்துக்கொண்டு ஒருகாலத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்களும் அழிக்கப்படுகின்ற நிலை இருக்கிறது. தீர்த்தங்கரர்கள் அமைத்த கழுகுமலை குடைவரைக் கோயில் போன்று குடைவரை கல் சிற்பங்கள் கூடிய அமைப்புகள் பல இடங்களில் உள்ளன. அய்யனார்குளம், அலங்காரப்பேரி போன்ற 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான கோயில்கள் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் வேதனையைத் தருகிறது.
1957-ல் அமைக்கப்பட்ட மணிமுத்தாறு அணையின் முன்பு அற்புதமான பூங்காக்கள் 1960-களில் பார்க்கும்பொழுது பிரமிக்கச் செய்தன. அந்த பூங்காக்கள் யாவும் இன்றைக்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்கள்போல் காணும்போது கண்ணீர் வருகிறது.
இப்படிப்பட்ட பல இயற்கைச் செல்வங்கள், எழில் தோற்றங்கள் யாவும் பாழ்படுகின்றன என்பதை நினைத்தால் பாரதி பிறந்த மண்ணில் சிறுமையைக் கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற ஆத்திரம்தான் நமக்கு வருகிறது.
தமிழகத்தின் செயற்கை முலாம் பூசிக் கொள்ளாத தென்றல் தவழும் பொதிகை மலைச் சாரலையும், தமிழ் வளர்த்த நெல்லையையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்கும் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. மலையிலுள்ள மரங்களை அழித்துச் சாலைகள் போட்டு, வாகனங்கள் விரையும்போது, அந்தச் சத்தத்தில் வனவிலங்குகள் அழிந்துவிடுமே என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைப் பற்றி யாரும் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.
உலகத்தில் தமிழர்களின் நாகரிகம்தான் மூத்த நாகரிகம் என்பதைப் பறைசாற்றுகிற ஆதிச்சநல்லூர் அமைந்த மண் நெல்லை. நாட்டின் விடுதலைக்குப் புரட்சி, அகிம்சை மூலம் விடுதலை பெற களம் அமைத்ததும் நெல்லைதான். பூலித்தேவன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், வாஞ்சிநாதன் போன்ற பல விடுதலை வீரர்கள், தமிழ் வளர்த்த அறிஞர்கள், தமிழகத்தின் அனைத்து அசைவுகளிலும் பெரும் பங்காற்றிய பெருந்தகைகளை அளித்த நெல்லை மண்ணின் பூர்வ அடையாளத்திற்கும், அதன் இயற்கைத் தன்மைக்கும் எந்தக் கோளாறும் வராமல் பாதுகாப்பது நெல்லைக்காரர்களது மட்டுமல்ல, ஆட்சியாளர்களது கடமையும்கூட!

Thanks to : www.dinamani.com

Tuesday, June 9, 2009

சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்



சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்


சென்னையில் தொடங்கியது


சென்னை, ஜூன்.9&
சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது.
சர்வதேச பயிற்சி முகாம்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையம் சார்பில், ஆண்டு தோறும் கைப்பந்து மேம்பாட்டுக்காக பல்வேறு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
புனேயில் அடுத்த மாதம் (ஜூலை) 31&ந் தேதி முதல் ஆகஸ்டு 9&ந் தேதி வரை நடைபெறும் உலக ஜூனியர் கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் செயல்படும் விதத்தை உடனடியாக நிபுணர்களை கொண்டு துல்லியமாக சேகரித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து வீரர்களை தர வரிசைப்படுத்தும் முறையை சிறப்பாக செய்யும் நோக்கில், சர்வதேச கைப்பந்து தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாம் சென்னையில் நடத்தப்படுகிறது.
12&ந் தேதி வரை...
இந்த பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. வருகிற 12&ந் தேதி வரை நடைபெறும் இதில் 3 வீராங்கனைகள் உள்பட 33 பேர் கலந்து கொண்டுள்ளர்.
பயிற்சி முகாம் தொடக்க விழாவில் முகாம் இயக்குனர் தாமஸ் குரோப்கா (போலந்து) கலந்து கொண்டு பேசினார். இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.முருகன் வரவேற்றார். தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை தலைவர் தமிழ்செல்வன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க பொருளாளர் பென்னி கூஞ்ச் நன்றி கூறினார்.

Thanks to - www.dailythanthi.com - 09.06.2009
http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx#