I LOVE TAMIL


Tuesday, December 28, 2010

பசி போக்குவோம்!

பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை!

மார்கழி அஷ்டமியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் நடக்கும் படியளந்தருளிய லீலை நிகழ்ச்சி சிறப்பானது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களில் இருந்து மனித இனம் வரை, எல்லாருக்குமே ஆண்டவன் படியளக்கிறான். சிலருக்கு பெரும் பணத்தைக் கொடுத்திருக்கிறான். அது, அவர்களுக்காக மட்டுமல்ல, இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவட்டுமே என்பதற்கும்தான். பசியுள்ள ஒருவனிடம் ஆன்மிகத்தைப் போதித்தால், அவனது காதுகளில் அது ஏறாது. முதலில் சாப்பாடு... பின்பு அவனிடம் என்ன சொன்னாலும் கேட்பான். 

உயிர்கள் பசியின்றி இருக்க தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விழாவே இது.
ஒரு கதை மூலம் இதை விளக்கலாம்... ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி வேகம் கண்ணை மறைக்க, கல்லை விட்டெறிந்தான்; பழம் கீழே விழுந்தது. ஆர்வமாக பழத்தைச் சாப்பிட்டான் அவன். ஆனால், வீசி எறிந்த கல், சற்று தூரத்தில், தன் மனைவியருடன் மரத்தடியில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அரசனின் தலையில் விழுந்தது. நல்ல வேளையாக அரசர் கிரீடத்துடன் இருந்ததால் தப்பித்தார். அவர், அதை பெரிதுபடுத்தவும் இல்லை. ஆனால், அங்கே காவலுக்கு நின்றவர்கள், அரசரிடம் நற்பெயர் பெறுவதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். பழம் தின்று கொண்டிருந்த ஏழையைப் பிடித்து வந்து அமைச்சரிடம் நிறுத்தினர். அவர், அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இந்த தகவலை மன்னரிடம் ஓடோடி வந்து சொல்ல, மன்னர் அவனை தன் முன்னால் கொண்டு வரும்படி சொன்னார். அவனை இழுத்து வந்தனர். அவன் கல் வீசியதற்கான காரணம், பசி என்பதை புரிந்து கொண்டார். அவனை விடுவிக்கச் சொன்னார் அரசர். "அமைச்சரே... அறிவே இல்லாத இந்த மரம் கூட ஒரு கனியைக் கொடுத்து, இந்த மனிதனின் பசியைப் போக்கியிருக்கிறது. அறிவுள்ள ஜீவன்களான நாம், நம் நாட்டிலுள்ள இவனைப் போன்ற மக்களின் வறுமையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இவனை விடுதலை செய்யுங்கள். இனி, ஏழைகளே இந்நாட்டில் இருக்கக்கூடாது. அவர்களைக் கணக்கெடுத்து உரிய பணி கொடுத்து பசியை விரட்டுங்கள்...' என உத்தரவு போட்டார்.

பார்வதிதேவிக்கும், பரமேஸ்வரனுக்கும் ஒருமுறை வாக்கு வாதம் வந்தது. "நீங்கள் எல்லாருக்குமே படியளப்பதாக சொல்கிறீர்களே... இதோ... இந்த செப்புக்குள் ஒரு எறும்பை விடுகிறேன். இதற்கு எப்படி படியளக்கிறீர்கள் என பார்க்கலாம்...' என்றாள். சிவன், அந்த செப்பை திறந்து பார்க்கச் சொன்னார். செப்பின் ஓரத்தில் ஒரு அரிசித் துகள் கிடந்தது. அதை, எறும்பு வாயில் கவ்விக் கொண்டிருந்தது. இவ்வாறாக, உயிர்களின் பசி போக்குவதை இறைவன் தன் கடமையாகக் கொண்டுள்ளது போல, நாமும் பிறர் பசி போக்க வேண்டும் என்பதை உணர்த்த பவனி வருவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர். அந்த சப்பரத்தில் நெற்கதிர்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து சிந்தும் நெல்மணிகளை சிறு உயிர்கள் எடுத்துக் கொண்டு உயிர் வாழும். இந்த நன்னாளில், பசியில்லாத உலகம் அமைய அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டுவோம். *** 


நன்றி : www.dinamalar.com - 26-Dec-2010

Wednesday, December 8, 2010

Monday, December 6, 2010

உலக பொருளாதார நெருக்கடி- ஒரு பார்வை

 அமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, "டாலரில்' தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது.கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது. 

"டாட் காம் பபுள்' நெருக்கடி : கடந்த 1990களில், இணையதள நிறுவனங்கள் துவங்க ஆரம்பித்தன. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், "டாட் காம்' சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை.கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் என்பதன் மாயை வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம்.அமெரிக்காவில் 60ல் இருந்து 70 சதவீதம் பேர், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய ஆரம்பித்த பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, "பெடரல் ரிசர்வ்' வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 சதவீதம் இருந்தது.

வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன் : "டாட் காம் பபுள்' நெருக்கடி காலகட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்க ஆரம்பித்தனர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா. தகுதி பார்க்காமல் கொடுக்கப்பட்டதால் இந்தக் கடன், "சப் ப்ரைம்' கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வட்டி கட்டாமல் தப்பிக்க ஆரம்பித்தனர்.இன்னொரு திட்டமும் முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டுகளுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது.  இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர்.இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.

"சப் ப்ரைம்' நெருக்கடி : கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் "கடன் பத்திரங்களாக' மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்?கடனுக்கான வட்டி விகிதம் ஏற ஆரம்பித்தது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. "வீடு வேண்டாம்' என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது.ஆனால், வங்கிகள், பங்குச் சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் "கரன்சி' இல்லை; மாறாக, பத்திரம் தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது.  இதைத் தான், "சப் ப்ரைம்' நெருக்கடி என்றனர்.

சமச்சீரற்ற நிலை : அமெரிக்காவின் "செக்யூரிட்டைசேஷன்' என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, "ரேட்டிங் ஏஜன்சி' மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின.அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன.  மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது.இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது.  பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது.அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை "உலக சமச்சீரற்ற நிலை' என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.
அமெரிக்க நுகர்வு கலாசாரம் : இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வு தான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது? "வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள்.  அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்' என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை.இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது? கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், "குடும்பம்' என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது.அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்தது தான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர்.பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.

சேமிப்பின் அவசியம் : தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இது  பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது.சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது.அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்து தான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம்.இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, "ட்ரஸ்ட்' என்ற நூலில், "எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்' என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மனநிலை : அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா சேமிப்பு நாடு; சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் உள்ள நமது பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்புடையவை தான். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிப்பாகும்.அதேநேரம், நம்மூரில், கடன் வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு கடன் வாங்குவதை நம்மவர்கள் தவறு என்று சொல்லவில்லை. சக்திக்கு மீறி கடன் வாங்குவதைத் தான் நமது கலாசாரம் தவறு என்கிறது.ஆனால், அமெரிக்காவில் ஒருவன் துணிந்து, "நான் திவாலாகி விட்டேன்' என்று சொல்லி விட்டு, அவனே மறுபடியும் தொழில் துவங்க முடியும். இந்தியாவில் இது நடக்காது. ஒருவன் திவாலாகி விட்டான் என்றால் அவனால் மறுபடியும் தொழில் துவங்க முடியாது.அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் அதன் வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு சதவீதம் பேருக்குத் தான் பெரியளவில் பாதிப்பு இருக்கும். மற்றபடி 97 சதவீதம் பேருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.இந்தியாவின் மொத்த முதலீடு 38 சதவீதம்; சேமிப்பு 37 சதவீதம். 1 சதவீதம் வெளிநாட்டு முதலீடு. அந்த 1 சதவீதம் வராமல் போய்விட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நமது சேமிப்பு நம்மைக் காப்பாற்றும்.நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரும்பான்மையும் இங்கேயே நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. பின்பு அதுவே முதலீடாகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நமது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொருளாதார நிபுணர்கள், "இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது; நுகர்வு அதிகரிக்க வேண்டும்; அதனால் உற்பத்தி அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிக்கும்' என்றனர். ஆனால், அது நடக்கவில்லை.கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவியிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் துவங்க வேண்டும். சீனா நுகரத் துவங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் துவங்கும்.

ஐரோப்பிய நெருக்கடி : ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத் தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது "யூரோ' கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான "மார்க்'குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் "யூரோ' கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.ஒரு முன்னெச்சரிக்கை தான்கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான்.  முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப் போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது. 

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏன்? அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கியமான காரணங்களை முன்வைக்கின்றனர். அவை:
* தவறான பொருளாதாரக் கொள்கை. சேமிப்பை விட, முதலீடு மற்றும் செலவழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது அந்தக் கொள்கை. அங்கு ஒருவர், தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க வேண்டிய அவல நிலை இதனால் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் 17 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் (36,314 டாலர்) கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

* சந்தையை விட உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், உற்பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தையின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாதது.
ஊ இணையதள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட "டாட் காம் பபுள் நெருக்கடி!'
ஊ அமெரிக்காவில் வங்கிகள், கடன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என சங்கிலித் தொடராக முதலீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி விழுந்ததால் மற்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
*"சப் ப்ரைம்' நெருக்கடியால் வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களை வீழ்ச்சியடைய வைத்தது.
* கடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அங்கு கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்டியது. இந்தாண்டில் தான் அது 9 சதவீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.

வேறு காரணங்கள்:உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர்.

அவை:* வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் "உயிரி எரிபொருள்' (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.
*உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.
* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.
*உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதாரம்.


நிதிக் கொள்கை :உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சதவீதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு. ஆனால், அது நேர்மாறாகிப் போனது. 

நன்றி : www.dinamalar.com - டிசம்பர் 05,2010

 




 



Wednesday, October 27, 2010

Monday, September 6, 2010

விவசாயக் கடன்களில் விவசாயம் உள்ளதா?

ஆர்.எஸ். நாராயணன்

 பசுமைப்புரட்சி தொடங்கப்பட்ட காலத்தில் 1960-களிலிருந்து கிராமங்களில் கிராமிய விவசாயக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கி.பி. 2000-க்குப் பின் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கிகளும் பிணை அடிப்படையில் விவசாயக் கடன்களை வழங்குவதில் சற்று வேகம் காண்பித்தன. ஒவ்வோராண்டும் விவசாயக் கடன் ஒதுக்கீடு உயர்ந்து வருகிறது. 2010-11 பட்ஜெட்டில் விவசாயக் கடன்  ரூ.3,75,000 கோடி என்பதுகூட 2009-10 ஒதுக்கீட்டைவிட  ரூ.50,000 கோடி அதிகம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1990-லிருந்து 2008 வரை கிராமங்களில் விவசாயிகளின் கடன் நிலை பற்றிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்திலும், விதர்பாவிலும் பருத்தி விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களின் எதிரொலியாக இப்படிப்பட்ட சர்வேயை மத்திய அரசு எடுக்கப் பணித்தது. இதன் பெயர் "ஆல் இண்டியா டெப்ட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் சர்வே'. இந்த சர்வே வழங்கிய தகவலின்படி, 

1990-லிருந்து 2008 வரை விவசாயக் கடன் அதாவது ஒரு வட்டிக்கடன் வழங்குவதில் தேசிய வங்கிகளின் பங்களிப்பு குறைந்துவிட்டதால் தனியார்துறை ஃபைனான்சியர்களிடம் 3 வட்டி, 4 வட்டி, 5 வட்டி, 10 வட்டி போடும் கந்துவட்டிக்கு விவசாயிகள் கடன் வாங்கும் போக்கு அதிகம். அரசுத்துறை வங்கி 1992-ல் 64 சதவீதம் 1 வட்டிக்கடனாக வழங்கியது, 2008-ல் 57 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

ஆகவே, மொத்தக்கடன் வழங்கலில் தனியார் கந்துவட்டிக்கடன் 20 சதம் என்றால் எவ்வளவு லட்சம் கோடி இப்படிப்புரண்டு, வட்டிக்கு வட்டி என்று குட்டிபோட்டுப் பெருகும்  என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

1990-ம் ஆண்டிலிருந்து 2008 வரை தேசிய வங்கிகள் யார் யாருக்கு விவசாயக் கடன் வழங்கின? விவசாயக் கடன்களை வழங்குவது நகர வங்கிகளா? கிராம வங்கிகளா? அப்படியிருந்தால் அதன் பங்கு என்ன? போன்ற புள்ளிவிவரங்களை "ஷெட்யூல்டு கமர்சியல் பாங்க்ஸ் இன் இண்டியா' வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பல்லவி சவான் என்ற பத்திரிகையாளர் ஆராய்ந்து ஹிந்து நாளிதழில் (13-8-2010) வழங்கியுள்ள ஒரு கட்டுரையில், "விவசாயக் கடன்களில் விவசாயம் இல்லை' என்று தெரிவித்துள்ளார். 

விவசாயிகளைக் கந்து வட்டியாளர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றுதான் தேசிய வங்கிகள் மூலம் கிராமங்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இதன் பலனாக தேசிய வங்கிகளின் மொத்தக் கடன் வழங்கலில் கிராம-விவசாயக் கடன் 1990-2000 பத்தாண்டில் 2 சதவீதமாயிருந்த நிலை, 2001-2008-க்கு வந்தபோது 19 சதவீதமாக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக நபார்டு மூலம் கிராமியக் கூட்டுறவு வங்கி மற்றும் நிலவள வங்கி (ரிசர்வ் வங்கி மூலம் பெறப்படும் நிதி) எல்லாம் சேர்த்து கிராமிய - விவசாயக் கடனின் பங்கு இதே காலகட்டத்தில் 31 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.   

2004-ம் ஆண்டிலிருந்து 2008-க்கு வரும்போது கிராமிய - விவசாயக் கடன் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு வரும்போது விவசாயக் கடன் பல்லாயிரங்கோடி என்பது பல லட்சங்கோடிகளாக உயர்ந்துள்ளது. ஆனால், கடன் பெறும் தகுதி என்று வரும்போது விவசாயம் புறந்தள்ளப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளின் விவசாயக் கடன் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மறைமுகமாகவே விவசாயம் பயன் பெறும். மறைமுக விவசாய உதவி என்றால் விவசாய உற்பத்திக்கு வித்திடும் தொழில் நிறுவனங்கள், உரநிறுவனங்கள், விதைநிறுவனங்கள், பூச்சிமருந்து நிறுவனங்கள், விவசாய எந்திரங்களான டிராக்டர், புல்டோசர், குழாய், மோட்டார், பம்பு செட், ஆழ்துளைக் கிணறு தோண்டும் எந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் தனியார் நிதி அமைப்புகள் ஆகியவற்றுக்கான உதவி. சொல்லப்போனால் யார், யார் விவசாயக் கடன் பெறலாம் என்ற வரையறையில் விவசாயி நீங்கலாக விவசாயத்துடன் மறைமுகத் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத்தான் முன்னுரிமை!

பசுமைப்புரட்சிக் காலகட்டத்தில் பயிர்க்கடன் என்பது நெல், தானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்வோருக்கு மட்டுமே உண்டு. விவசாயக் கடன் பற்றிய புது வரையறையில் பயிர்க்கடன் இல்லை. வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பக்குவம் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விவசாயக் கடன் பெறுவதில் முன்னுரிமை உண்டு. நவீனப்படுத்தும் அரிசி ஆலை, கோதுமை ஆலை, சமையல் எண்ணெய் ஆலை பெறுவதும் விவசாயக் கடன். விவசாயக் கடன் பெறுவதற்கு கிராமம் அவசியமில்லை. ஏனெனில், விவசாயக் கடன்களில் பெரும்பகுதி பெரிய நகரங்களில் உள்ள தேசிய வங்கிகள் வழங்கியுள்ளனவாம். சென்னை, மும்பை போன்ற மெட்ரோபாலிட்டன் நகர்களிலும் விவசாயம் உண்டு. இதுகுறித்த புள்ளிவிவரங்களையும் வங்கி அமைப்புகளே வழங்கியுள்ளன. ""கிரீன் புராடக்ட்ஸ்'' ""அக்ரி புராடக்ட்ஸ்'' என்ற லேபிள்கள் போதுமானவை. ஏற்றுமதி செய்யும் பொருள்களாக இருக்க வேண்டும்.

பசுமைப்புரட்சி நிகழ்ந்து வந்த காலகட்டத்தில் விவசாயிகள் கிராமக் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் 12 சதவீத வட்டி (1 வட்டிக்கடன்) என்ற கணக்கில் கடன் பெற்றார்கள். அப்போது தரகர்கள் இல்லை. விலை இருக்காது. விளைச்சல் இருக்காது. வாங்கிய கடனைத் திருப்பிக்கட்ட முடியாது. ஆண்டுக்கணக்கில் வசூலாகாவிட்டால், வட்டிக்கும் வட்டி போடுவார்கள். மீண்டும் கடன் வாங்கினால் பழைய கடனை அடைத்துவிட்டு மிஞ்சுவது  ஒன்றுமில்லை என்றாலும் எப்போது விவசாயக் கடன்  ரத்தாகும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி ஓர் அறிவிப்பு வந்ததும், மீண்டும் கடன் வாங்குவது உண்டு.  இப்போது வாங்கிய பயிர்க்கடனை 6 மாதத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி இல்லை    என்ற சலுகை உண்டு. முன்புபோல் இப்போது பயிர்க்கடன் பெறுவது அவ்வளவு எளிதல்ல. தரகர் மூலமே பெறமுடியும். ஒரு வட்டிக்கடன் பெற 2 வட்டி செலவழிக்க வேண்டும். நிறைய அலைய வேண்டும். கிராமப்பகுதிகளில் விவசாயக் கடன் அதாவது பயிர்க்கடன் என்பது லேவாதேவி அதாவது ஃபைனான்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிராமங்களிலும் சிற்றூர்களிலும் விவசாயக்கடன், பணம் டெபாசிட் செய்யும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தக் குழுவும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற தொழிலாளர்களாக இருக்கலாம். அப்படி எதுவும் தொழில் செய்தால் அது விவசாயமாக இருக்காது. சிறுதொழில் வியாபாரமாகவோ சிறுதொழில் உற்பத்தியாகவோ இருக்கலாம். குழு அமைப்புகள் 1 வட்டிக்கடன் வாங்கி மறைமுகமாக கந்துவட்டிக்கு விடுவது உண்டு. அதற்கு ஆதாரம் இருக்காது. கிராமங்களில் உள்ள வங்கிகள் 1 வட்டிக்கடன் வழங்குவதற்கு ஆதாரங்கள் உண்டு. ஆனால், இன்னமும் மக்கள் 2 வட்டி, 3 வட்டி வழங்கும் கந்துவட்டிக்காரர்களை நாடுவது ஏன்?

ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கந்துவட்டி வழங்குவோர் பெருகி வருகின்றனர். இதுதான் கசப்பான உண்மை. 

உண்மையில் இத்தகைய சூழ்நிலையில்கூட, விவசாயம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வம் திக்குத் தெரியாத காட்டில் வாழும் அறியாமை நிரம்பிய விவசாயிகளிடம் உள்ளது. கந்து வட்டி வாங்கி விவசாயம் செய்யும் இவர்களுக்கு வங்கிக்கடன் வேண்டுமானால், தாதாவாக உள்ள தரகர்களைப் பிடிக்க வேண்டும். லேவாதேவி செய்யும் தாதாத் தரகர்கள் கட்சி செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கலாம்.   

கி.பி. 2000-த்திலிருந்து இருபத்தியொன்றாம் நூற்றாண்டு தொடங்குகிறது. இதை விவசாயிகளின் தற்கொலை நூற்றாண்டு எனலாம். முதலில் ஆந்திரப்பிரதேசம், பின்னர் மகாராஷ்டிரம், பஞ்சாப் மாநிலங்களில் பருத்தி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டனர்.  டிராக்டர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பால்மாடுகளுக்குத் தீவனம் இல்லாமல் மாடுகளுடன், மாடுகளை வளர்த்த மனிதர்களும் இறந்தனர். இப்போது ஆந்திர மாநிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டிக் கடனாகி, நீரும் கிட்டாமல், தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கூடி வருகிறதாம். கடந்த 10 ஆண்டுகளில் இப்படித் தற்கொலைச்சாவு, பட்டினிச்சாவின் எண்ணிக்கை 3 லட்சத்துக்குமேல் இருக்கலாம். இவர்களில் 2.9 லட்சம் விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் இம்சை தாங்காமல் இறந்துள்ளனர்.

இவர்களுக்குக் குறைந்த வட்டியில் பணம் வழங்குவோர் இல்லை. நகரத்து வங்கிகள் நகரங்களையே கிராமமாக எண்ணி விவசாயக்கடன் வழங்கும் "சமரசம் உலாவும்' இடமாகிவிட்டது. சிற்றூர்களில் ரியல் எஸ்டேட்டுடன் கந்து வட்டியும் செய்யும் கல் நெஞ்சங்களுக்கு மட்டுமே விவசாயக் கடன் கிட்டுவது எளிதாக உள்ளதால் "எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடாகிய வீட்டில் தொல்லையின்றித் தூங்கிவிட' முடிவுசெய்து அந்த விவசாயி தொங்கிவிட்டான். 64-வது ஆண்டு தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. தொங்குபவனைக் கொத்தக் கழுகுகள் காத்திருக்கின்றன.

 நன்றி: www.dinamani.com -   31 Aug 2010

   
 

Friday, August 27, 2010

தலையங்கம்: பாவம், கறவை மாடுகள்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது. 

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து. 

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது. 

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். 

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.  

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம். 

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய  5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்? 

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை. 

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.  

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை. 

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப்  பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும். 

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது. 

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது. 

 நன்றி: www.dinamani.com -   26 Aug 2010

Wednesday, August 18, 2010

OLD RICE



நன்றி: திரு. செந்தில் (இ-மெயில்) - 18-Aug-2010 

Tuesday, August 17, 2010

தலையங்கம்: நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...


சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு. 

திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது | 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய | 6,800 கோடி. 

இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு | 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது. 

மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை. 

ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு. 

இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள். 

நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது.  அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன? 

கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம். 

ஒரு டன் கரும்புக்கு மேலும் | 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை | 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும். 

விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன. 

மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.

"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்... 
 
 நன்றி: www.dinamani.com -   17 Aug 2010

Friday, August 13, 2010

சூரிய சக்தியில் இயங்கும் ஏடிஎம்

மும்பையில் ஒபரா ஹவுஸ் அருகில், இன்டஸ் இன்ட் வங்கியால் நிறுவப்பட்டுள்ள ஏடிஎம் மெஷின், இந்தியாவில் சூரிய ஒளியினால் இயங்கும் முதல் ஏடிஎம் மெஷினாகும். சூரிய ஒளி சக்தியில், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. இது தவிர மீதி நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் சூரிய ஒளி சக்திக்கு தானாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் பெற்றுள்ளது. சூரிய ஒளியினால் ஏடிஎம் மெஷின் இயங்கும் போது, ஒரு மணி நேரத்தில் 6 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஒரு ஆண்டில், 355 நாட்கள் முழுமையான சூரிய ஒளி கிடைக்கிறது. இதனால் 2 ஆயிரத்து 10 யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. 1.42 டன் கார்பன் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக ஏடிஎம் மெஷினை நிறுவுவதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் சூரிய ஒளி ஆற்றல் மூலமாக ஏடிஎம் மெஷினை நிறுவுவதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகிறது. சோலார் முறையில் இயங்கினால், 5 ஆண்டுக்குள் ஏடிஎம் நிறுவிய செலவுத்தொகையை பெற்று விடலாம்.

நன்றி: www.dinamalar.com -  13 Aug 2010

Monday, August 2, 2010

Central Govt. & Supreme Court



நன்றி: www.dinamalar.com -  01 Aug 2010 

உலக எண்கள் தமிழ் எண்களே!



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான  திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள்  கோரிக்கையின் வெற்றியே. 

ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர். 

 இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே! 

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. 

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன்.  "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது. 

""இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996). 

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை. 

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. 

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார்.

""அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார். 

 டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). 

அவர் எழுதுகிறார்: ""1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. 

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.  

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார்  (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358). 

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.  

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம். 

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.  

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே! 

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே! 

 நன்றி: www.dinamani.com -   02 Aug 2010


Saturday, July 31, 2010

வாசிப்போம்... சாதிப்போம்...!


நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின்.  

 நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.  

காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 

 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.  

இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். 

 ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி  அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.   

 நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.  

உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.  

நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். 

 ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன். 

அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை. 

 புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள். 

 இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது.  

புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.  

உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!  

 நன்றி: www.dinamani.com -   31 Jul 2010
 

தலையங்கம்: வயிற்றில் அடிக்கிறார்களே..

வெறும் ஆண்டு வருமானத்தை வைத்து ஒருவரை ஏழை என்று முடிவுகட்டும் நடைமுறை ஒருபக்கம் இருந்தாலும், பொதுவான வசதிகளை ஒருவர் பெற்றிருக்கிறாரா என்பதைப் பொறுத்து, அவர் ஏழை என்று கணிக்கும் வகைப்பாடும் நடைமுறையில் இருக்கிறது. இதனடிப்படையில் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 42 கோடி! இவர்களிடம் அதிகம் இல்லாதது சத்துணவு! சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவுப் பழக்கம் இல்லாமை அல்லது இயலாமை இவர்களது பொதுக்காரணி.  

ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் இத்தனை பேர் தவிக்கையில், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் விநியோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய்க் கிடக்கும் அரிசி, கோதுமை அளவு, ஜூலை 1-ம் தேதி கணக்கீட்டின்படி, மொத்தம் 11,708 டன் என்று தெரியவந்தால், இத்தகைய அக்கறையின்மையை என்னவென்று சொல்வது?

இதில் அதிகபட்சமாக, பஞ்சாபில் 7,066 டன், மேற்கு வங்கத்தில் 1,846 டன், பிகாரில் 485 டன், குஜராத்தில் 1,457 டன், மகாராஷ்டரத்தில் 278 டன் தானியம் வீணாகிப்போனது. இதில் மிகக் குறைவான அளவு தானியத்தை வீணடித்த மாநிலங்கள் இரண்டுதான். ஆந்திரம் 6 டன், தமிழ்நாடு 1 டன். இதற்காக நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம். 

இந்தியாவில் தானியங்களை விளைநிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் மையத்துக்கு தானியத்தைக் கொண்டுசெல்லும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருக்கின்றன. இதனால், விளையும் தானியங்களில் 20 விழுக்காடும், அழுகும் காய்கனிகளில் 30 சதவீதமும் வழியிலேயே வீணாகிப் போகின்றன என்கிறார் வேளாண்மை ஆர்வலர் மோகன் தாரியா. இந்த நிலைமைகளையும் தாண்டித்தான், உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகக் கிடங்குகளுக்கு வருகின்றன. அதையும் சரியாகப் பாதுகாக்காமல் வீணடித்தால் நெஞ்சு பொறுக்குதில்லை. 

இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் இந்திய உணவுக் கழக அதிகாரிகள்தான். தானியங்களை முறையாக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடுக்கி வைக்காமலும், திறந்தவெளியில் அடுக்கி வைத்தும் தானியங்களைப் பாழ்படுத்திய  இந்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? 

தானியங்களைப் பாதுகாக்கப் போதுமான கிடங்குகளை சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது யாருடைய குற்றம்? உலகத் தரத்திலான விமான நிலையங்கள், மோட்டார் வாகனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வளாகங்கள், சாலைகள் என்று பெருமை பேசும் நாம், உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாக்கவும் சேமிக்கவும் தரமான கிடங்குகளையும் குளிர்பதனக்கூடங்களையும் அமைக்காமல் இருக்கிறோமே, ஏன்? 

நாட்டில் ஓர் இடத்தில் மழை பொய்த்தாலும், இன்னொரு பகுதியின் விளைச்சலைக் கொண்டுபோய்ச் சேர்த்து, பஞ்சத்தைப் போக்கிவிட முடியும் என்பதால் இனி பஞ்சமே வராது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. இதைச் சாத்தியமாக்க உருவான இந்திய உணவுக் கழகம், தானியத்தை வீணடித்துக் கொண்டிருப்பது தொடர்பாக உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு தானியம் வீணாகிப் போனது என்பதை உணவுக் கழகத்தின் மூலம் அறியவந்த நீதிபதிகள் கொதிப்படைந்துவிட்டனர். "சாப்பிட வழியில்லாத ஏழைகள் வாழும் இந்த நாட்டில் ஒரேயொரு மணி தானியம் வீணாவதும்கூட குற்றமாகும்' என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தானியங்களைக் கெட்டுப்போகிற வரை வைத்திருக்காமல், தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய உணவுக் கழகத்தின் ஊழலும், சிதறிப்போகும் தானியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால், ஏன் அனைத்து நடைமுறையையும் கணினிமயமாக்குதல் கூடாது என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். 

இந்த தானியங்கள் எதற்காக பல கிடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டும்? உணவுக் கழக கிடங்கிலிருந்து நேரடியாக பொதுவிநியோக மையத்துக்கு அளிக்கும் முறையை உருவாக்கினால் என்ன என்றும்கூட நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இவ்வாறு பல கிடங்குகளுக்கு மாற்றுவதன் நோக்கமே அரசியல் பின்புலம் உள்ளவர்களின் லாரிகளுக்கு வாடகை கொடுப்பதற்கே என்பது ஊர் அறிந்த ரகசியம். 

சேமித்து வைக்க இடம் போதவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், தனியார் இடங்களை வாடகைக்கு அமர்த்தவும் இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் செய்வதில்லை. தானிய மூட்டைகளில் பொத்தல் போட்டு ஒவ்வொன்றிலும் கொஞ்சம் தானியத்தைப் பிரித்தெடுத்து, விற்றுக் காசு பார்க்கும் கூட்டம் உணவுக் கழகத்தில் இருப்பதால், தானியம் கெட்டுப்போனால்தான் இவற்றையெல்லாம் மூடி மறைக்க முடியும். 

இந்தியாவில் பல கோடி ஏழைகளின் வீட்டுக்குப் போக வேண்டிய தானியத்தை தங்கள் சுயநலத்துக்காக ஏமாற்றி வெளியே கொண்டுபோய் விற்கிறோம் என்றோ, இவை கெட்டுப்போய், நியாயவிலைக்கடைகள் மூலம் கிடைக்கும் நேரத்தில் உண்ணவும் தகுதியில்லாததாக மாறுகிறது என்கின்ற எண்ணமோ இல்லாத அளவுக்கு இவர்கள் மனம் ஊழலாலும் அதிகார மமதையாலும் மரத்துப்போய்விட்டது.   

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?- என்கிறான் மகாகவி பாரதி. இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தின் எச்சம்தானே!

 நன்றி: www.dinamani.com -   31 Jul 2010

Tuesday, July 27, 2010

தலையங்கம்: பயமல்ல... நிஜம்!

பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?

இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்? 

இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. 

சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார். 

இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது. 

இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது. 

மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை. 

புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக  நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது. 

சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே. 

"எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி- 

உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா? 

நன்றி: www.dinamani.com -   27 Jul 2010


Monday, July 26, 2010

தகுதிச் சுற்றிலேயே தள்ளாட்டம்!


உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தை ஒரு மாத காலம் ஈர்த்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 4.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறிய நாடான ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

1920-ம் ஆண்டு கால்பந்து விளையாட ஆரம்பித்த ஸ்பெயின், 1934-ம் ஆண்டு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. அதன்பிறகு 10 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற ஸ்பெயினால் கோப்பையை வெல்லமுடியவில்லை.  

இருப்பினும் தொடர்ந்து முயற்சித்த ஸ்பெயின், 2010 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனது. உலகக் கோப்பையில் பங்கேற்க ஆரம்பித்து 75 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்று நீண்டகாலக் கனவை நனவாக்கியுள்ளது. 

உலகக் கோப்பை போட்டியில் முதல் ஆட்டத்தை தோல்வியில் துவங்கினாலும், இறுதி ஆட்டத்தை வெற்றியில் முடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின். முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் தோற்றபோது ஸ்பெயின் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானார் கேப்டனும், கோல்கீப்பருமான இகர் காஸில்லஸ்.   

அதன்பிறகு நடைபெற்ற எல்லா ஆட்டங்களிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது ஸ்பெயின். பெரிய அளவில் கோல்களை அடிக்காவிட்டாலும், எதிரணிகளை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது தான் ஸ்பெயினுடைய வெற்றியின் ரகசியம். 

உலகக் கோப்பையில் லீக் சுற்றில் சிலிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றிபெற்றது ஸ்பெயின். முதலில் விமர்சனத்துக்குள்ளான கேப்டன் காஸில்லஸ் கோப்பையைக் கைப்பற்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரின் கடும் போராட்டத்துக்குக் கிடைத்ததுதான் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருது.   

உலகக் கோப்பையில் சாம்பியனாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்பெயினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்காமல் இருக்க முடியாது. ஸ்பெயினை பாராட்டும் அதேநேரத்தில் கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் நிலையை நினைத்தால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழியில்லை. 

உலகின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் நாடுகள் எல்லாம் உலகக் கோப்பை கால்பந்தில் ஜொலிக்கின்றன. ஆனால் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் இந்தியாவோ தகுதிச்சுற்றிலேயே தள்ளாடுகிறது. கால்பந்து விளையாட ஆரம்பித்து 60 ஆண்டுகளைக் கடந்தபோதும் ஒருமுறைகூட உலகக் கோப்பையில் பங்கேற்றதில்லை என்பது வேதனைக்குரியது.  

1948-ம் ஆண்டு முதல் கால்பந்து விளையாடிவரும் இந்திய அணி, 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் முதன்முறையாக விளையாடத் தகுதிபெற்றது. ஆனால் காலணி (ஷூ) இல்லாமல் விளையாடுவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) தடைவிதித்ததாலும், பிரேசிலுக்கு செல்வதற்கான பயணச் செலவுகள் அதிகம் என்பதாலும் இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. 

1954-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாட பிஃபா தடை விதித்தது. அதன்பிறகு 1958 முதல் 1982 வரை இந்தியா போட்டிகளில் பங்கேற்கவில்லை. 1986 முதல் 2010 வரை 24 ஆண்டுகளாகப் பங்கேற்று வரும் இந்திய கால்பந்து அணியால் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறமுடியவில்லை.  

2010 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 205 நாடுகள் பங்கேற்றன. ஆசியக் கண்டத்திலிருந்து இந்தியா உள்பட 43 நாடுகள் பங்கேற்றன. 

உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்ற 32 அணிகளில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவை ஜப்பான், வடகொரியா, தென்கொரியா அணிகள் மட்டுமே.  

இந்திய கால்பந்து அணியில் இப்போதைய கேப்டன் பாய்ச்சுங் பூட்டியாவைத் தவிர மற்ற வீரர்கள் யார் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. உலகக் கோப்பையில்தான் இப்படி என்றால் ஆசியக் கோப்பையிலோ அதைவிட மோசம். 

1960 முதல் பங்கேற்று வரும் இந்திய அணி, 1964, 1984-ம் ஆண்டுகளில் மட்டுமே விளையாடத் தகுதிபெற்றது. 1964-ல் இரண்டாம் இடத்தைப்பெற்ற இந்திய அணி, 1984-ல் முதல் சுற்றிலேயே வெளியேறியது.  

உலகின் குட்டி நாடுகள் எல்லாம் உலகக்கோப்பையில் ஜொலிக்கின்றன. இந்தியாவோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வீரர்களை உருவாக்கத் தரமான ஆடுகளங்கள், பயிற்சியாளர்கள் அவசியம். ஆனால் அவை இரண்டுமே இந்தியாவில் இல்லை என்பது மிகப்பெரிய குறை. 

நம்முடைய விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களோ விளையாட்டைப் பற்றியோ, வீரர்களைப் பற்றியோ, மைதானங்கள் பற்றியோ கண்டுகொண்டதாகவோ, கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளப்  போராடும் விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களுக்கு விளையாட்டைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஏது?

விளையாட்டு அமைப்புகளும், பயிற்சியாளர்களும் கவனம் செலுத்தாத வரையில் கால்பந்து விளையாட்டில் கோப்பை என்பது இந்தியாவுக்குக் கானல் நீர்தான். 

  நன்றி: www.dinamani.com -   22 Jul 2010

Monday, July 19, 2010

விவசாய அழிவுக்கே விரிவாக்கத் திட்டம்

ஆர்.எஸ். நாராயணன்

இந்தியாவின் ஒட்டுமொத்த வருமான மதிப்பு உயர்கிறது. ஆனால், ஆண்டுக்காண்டு விவசாயம் வழங்கும் வருமான மதிப்பு இறங்கிக் கொண்டே போகிறது. இன்றல்ல, நேற்றல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பே விவசாய வருமான மதிப்பு இறங்கிவிட்டது.

ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பிக்கும்போது நமது நிதி அமைச்சர்கள் இதை ஒரு புதிய விஷயமாக ஓராண்டுக்கு முன் நிகழ்ந்ததாக முகமன் கூறி, இனி விவசாய வருமானத்தை உயர்த்த இந்தத் துறையில் இப்படி இப்படிப் பணம் ஒதுக்குவதாகச் சொல்வதுண்டு.

விவசாயத்தைப் பொறுத்தவரை பட்ஜெட் கூட்டம் என்பது ஒரு திதி. அப்பா சிரார்த்தத்தை மத்திய அரசு செய்யும். அம்மாக்களின் சிரார்த்தத்தை மாநில அரசுகள் செய்யும். விவசாய வளர்ச்சி என்பது இவ்வாறு விவசாய நினைவாஞ்சலிகளாக மாறிவிட்டது.  2010-2011 பட்ஜெட்டில் விவசாய உற்பத்திக்கு வழக்கம்போல் முதலிடம் உண்டு.

 நிதியமைச்சரின் கூற்றுப்படி, ""பசுமைப்புரட்சி ஆழமாக வேர்விடாத ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமைப்புரட்சியை உருவாக்க ரூ. 400 கோடி ஒதுக்கப்படுகிறது. பருப்பு உற்பத்தியைப் பெருக்கவும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை உயர்த்தவும் ரூ. 300 கோடி. ரூ. 3,75,000 கோடி விவசாயக் கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மண்வள மீட்பு, மண் பாதுகாப்பு, பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பான வள மீட்புப் பண்ணை அமைப்புக்கு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு ரூ. 200 கோடி''.

2010 - 2011 -ல், இறந்துவிட்ட விவசாயத்துக்குரிய திதி நாளில் மதிப்புக்குரிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்படி வேதமந்திரங்களை மக்களவையில் ஓதியுள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் வீரபாண்டியார் தேவாரமாகவோ, திருவாசகமாகவோ பாடினார். சம்ஸ்கிருதத்தில் பாடினால் என்ன? தமிழில் பாடினால் என்ன? ஆண்டுதோறும் விவசாயத்துக்கு சங்கு ஊதும் நாடகம் தொடர்கிறது.

பசுமைப்புரட்சியின் எதிர்விளைவால் இழக்கப்பட்ட மண்வளப் பாதுகாப்பு என்ற பெயரில் பஞ்சாப், ஹரியாணாவுக்கு வழங்கப்படும் நிதி ரூ. 200 கோடி. பசுமைப்புரட்சியைப் புகுத்தி வடகிழக்குப் பகுதியில் மண்வளத்தை அழிக்க நிதி உதவி ரூ. 400 கோடி!  அதாவது, ஒரிசா, பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் புதிய பசுமைப்புரட்சி என்றால் மேலும் ரசாயன உரம், பி.ட்டி விதை விநியோகம், உயிர்க்கொல்லி புகுத்தப்படும். அப்பகுதிகளில்தான் பாரம்பரியங்கள் சற்று எஞ்சியுள்ளன. குறிப்பாகப் பல்லுயிர்ப்பெருக்க வளர்ச்சிக்காக அனைத்துலக நிதியில் இயங்கும் இங்குள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் தென்கிழக்குப்பகுதி கிராமங்களிலிருந்துதான் பாரம்பரிய விதைகளை வாங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. இனி இதற்கும் ஆபத்து இருக்கிறது. மண்வளத்தைக் காப்பாற்ற ரூ. 200 கோடி. மண்வளத்தை அழிக்க ரூ. 400 கோடி. விவசாயத்துக்கு திவசம் செய்யும் கடமை அமைச்சர்களுக்கு உள்ளபோது, அவர்களிடமிருந்து இப்படித்தான் எதிர்பார்க்க முடியும்.

ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு வரை விரிந்து பரந்துள்ள பீடபூமிப்பகுதிகளில் பருப்பும் எண்ணெய் வித்தும் உற்பத்தி உயர ரூ. 300 கோடி.

இந்த ரூ. 300 கோடியை 60 ஆயிரத்தால் வகுக்க வேண்டும். ஒரு கிராமத்துக்கு 5 லட்சம்  என்று வகுத்து 60,000 பயறு - பருப்பு - எண்ணெய் வித்து கிராமங்கள் உருவாகப் போகின்றன. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்? 2,000 முதல் 3,000 கிராமம் பயன் பெறலாம். எல்லாம் திட்டப்படி செயல்பட வேண்டும். செயல்திட்டம் தயாரானதாகத் தெரியவில்லை. சாதாரணமாக மத்திய அரசு வழங்கும் பணத்தை மாநிலம் வேறு செலவுக்குப் பயன்படுத்தலாம்.

விவசாயிகளுக்குக் கடன் ரூ. 3,75,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் ஒரு புதிய முதலீடு அல்ல. பெரும்பாலும் புக் அட்ஜஸ்ட்மெண்ட்தான். கடந்த ஆண்டு கடனை அடைக்கவே சரியாக இருக்கும். இது ஒரு வட்டிக்கடன். (மாதம் 1 சதவீதம்) நம் மக்கள் 5 வட்டி, 10 வட்டி என்று கடன் வாங்கியதை 1 வட்டியாக மாற்றிக்கொள்ள உதவும்.

தேச வருமானத்தில் விவசாய வருமானத்தின் பங்கு மிகவும் குறைந்துவிட்டது என்று குறைப்படும் திட்ட நிபுணர்களும், ஆட்சியாளர்களும் எந்த அளவுக்கு இத்துறைக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது என்று கணக்குப் பார்த்தால் உண்மை தெரியும். தொழில்துறை, சாலை மேம்பாடு என்று எடுத்துக்கொண்டால் ஆயிரங்கோடி, லட்சங்கோடி என்று பணம் செலவழிக்கப்படுகிறது.

விவசாயம் என்றால் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி என்ற அளவில்தான் பணம் ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பணமும் உருப்படியாக உற்பத்திக்கு உதவுவதாக இல்லை. அமைச்சர், கட்சித் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? யாரோ செலவழிப்பதற்கு யாரோ திட்டம் போடுவதால் பட்ஜெட் அறிவிப்பு பற்றி சீரியஸôக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நல்ல திட்டங்கள் விவசாயத்தில் மட்டுமல்ல; நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, நீர்வடிப்பகுதி மேம்பாடு என்ற திட்டங்களுக்கும் மாவட்டந்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.

உண்மையில், அப்படிப் புரளும் பணம் அதற்குரிய பணிகளுக்குச் செலவிடப்பட்டிருந்தால், நாடு செழித்திருக்கும். அப்பணிகளுக்கு அப்பணங்களைச் செலவு செய்ய மாவட்டங்களும் வட்டங்களும் தனிரூட் போட்டு கபளீகரம் செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவார்கள். திறந்த மனமுள்ள ஊழலுக்கு இடம் கொடுக்காத  நல்ல அதிகாரிகளும் அறிவார்கள்.

அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. ஆகவே, உள்ளூரில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களை மானாவாரி பூமியில் விளைவிக்க வேண்டும் என்பது நல்ல கொள்கை. மானாவாரி பூமியில் நெல், கோதுமை, புஞ்சைத் தானியங்களையும் நன்கு திட்டமிட்டுப் பயிரிடலாம்.

மானாவாரியில் கிடைக்கும் நீரை உகந்த அளவில் பயன்படுத்த வேண்டுமே தவிர, மாபெரும் அணைக்கட்டுத் திட்டமெல்லாம் போட்டு மண்வளத்தைக் கெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஸ்ப்ரிங்க்ளர் அமைக்கலாம். ரைன்கன் அமைக்கவும் வழி செய்யலாம். முழு மானியம் வழங்கினால் ஸ்ப்ரிங்க்ளர், ரைன்கன் மூலம் உற்பத்தியை உயர்த்தலாம்.

பருப்புவகைப் பயிர்களையும் நேரடி விதைப்பாக நெல்லையும், பலவிதமான புஞ்சைத் தானியங்களையும் மானாவாரியில் பயிரிட்டு உற்பத்தியை உயர்த்தப் பல்லாயிரம் கோடி ரூபாய் விவசாயத்துக்கு ஒதுக்கிச் சரியான முறையில் செலவிட வேண்டும்.

அரிசி, கோதுமை, பருப்பு விலை உயர்ந்த அளவில் எண்ணெய் வித்துகளின் விலை உயரவில்லை. நிலக்கடலைப்பருப்பு, தேங்காய் விலைகள் மந்தமாயுள்ளன. தேங்காய் விலை 30 ஆண்டுக்கு முன் விற்ற விலைதான் இன்றும். திண்டுக்கல் அய்யம்பாளையம், சோழவந்தான் பகுதிகளில் விவசாயிகளுக்கு சராசரி ரூ. 2.50 என்ற விலைக்குத்தான் உரிக்காத தேங்காய்கள் இறக்கியவுடன் கிட்டுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் தேங்காயில் லாபம் எடுத்துத் தங்கள் குழந்தைகளை நகரங்களில் நல்ல படிப்புக்குச் செலவு செய்தார்கள். இன்று தென்னந்தோப்புகளையே விற்றுத்தான் படிப்புச் செலவும், மருத்துவச் செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பொதுவாக பருப்புகளாகட்டும் எண்ணெய்வித்துகளாகட்டும் அங்காடிகளில் அவற்றுக்குரிய லாபமான விலை கிடைத்தால் விவசாயிகளுக்கு எந்த உதவியும் தேவையில்லை. எவ்வளவுதான் அரசு திட்டங்கள் போட்டு பருப்பு - எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தி உயர்வுக்கு என்று பணம் செலவழித்தாலும்கூட உற்பத்தி உயராது. அங்காடியில் நல்ல விலைக்கு விவசாயிகளின் சரக்கு விலை போனால்தான் அந்த விவசாயி தாக்குப்பிடிப்பான்.

பணவீக்கத்தால் விலை உயர்கிறது. பணவீக்கம் என்பது நுகர்வோருக்கு மட்டும் பிரச்னை இல்லை. விவசாயிகளுக்கும் பிரச்னைதான்.

கடந்த முப்பது ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி உயரவும் சமையல் எண்ணெய்க்குரிய எண்ணெய் வித்து உற்பத்தி உயரவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏன் எந்தப் பயனும் இல்லாமல் போனது? மக்களை வாழ வைக்க வேண்டிய விவசாயம் நிலை தடுமாறிச் செல்கிறது.

மண்ணை விஷமாக்காமல் வளப்படுத்தி நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய விவசாயமே நோய்க்குறிகளுடன் காட்சியளிக்கிறது. விவசாயத்தை மேலும் நோயாக்க பசுமைப்புரட்சி கிழக்கு இந்தியாவுக்குப் புறப்படுகிறதாம். இது மேலும் அழிவுக்கு வழிகாட்டுவதாயுள்ளது.

இந்தியா முழுவதுமே மண் விஷமாகிவிட்டது. பஞ்சாப் - ஹரியாணாவில் மட்டுமே ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கும் பணி நிகழ்கிறதாம்! எல்லா இந்திய மாநிலங்களிலும் மண்வளப் பாதுகாப்புக்குரிய இயற்கை இடுபொருள் பயன்பாடுகளுக்கும், இயற்கைப் பூச்சி விரட்டி உற்பத்திப் பயன்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு மானியம் வழங்காமல் ரசாயன உரங்களுக்கும் விஷமான பூச்சி மருந்துக்கும் வழங்கப்படும் மானியங்கள் இறுதியில் விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடும் ஆபத்து உள்ளது.

நன்றி: www.dinamani.com - 15 Jul 2010