I LOVE TAMIL


Saturday, January 30, 2010

முயன்றுதான் பார்ப்போமே!

வாக்களிக்கத் தகுதியுடைய அனைவரும் பொதுத் தேர்தலின்போது கட்டாயமாக வாக்களிக்கும்படி செய்வது இந்தியாவில் சாத்தியமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றம் மட்டுமே விவாதித்து, ஆலோசனை நடத்தி, அமல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குஜராத் மாநிலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று இந்தியா முழுவதும் பொதுத்தேர்தலிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்கும் கடமையை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதுதான், இந்தியாவில் இது சாத்தியமில்லை என்ற பதிலை நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்தியாவில் வாக்குப்பதிவு சராசரியாக 60 சதவீதமாகத்தான் இருக்கிறது. இதில் ஆளும்கட்சி அல்லது அக்கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்குகளையும் எதிர்க்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் பிரித்துப் பார்த்தால், ஆளும் கட்சிக்கு ஆதரவான நபர்கள்- வாக்களித்த மற்றும் வாக்களிக்கத் தவறிய மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்காகவே இருக்கின்றனர்.

மூன்றில் ஒரு பங்கு மக்களின் விருப்பம் எப்படி ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்க முடியும். மக்களாட்சியில் மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாவிட்டால் அது எந்த அளவுக்கு மக்களாட்சியாக இருக்க முடியும்? தேர்தலின்போது வாக்களிக்காமல், ஆனால் அதேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விமர்சனம் செய்து கொண்டிருப்பது அர்த்தமற்ற புலம்பலாகத்தான் இருக்க முடியும். மக்களாட்சியில் மக்கள் அனைவருடைய பங்கேற்பும் இருப்பதும் அவசியம்.

உலக அளவில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கியுள்ள நாடுகள் 32 உள்ளன. அவற்றில்  ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெரு, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை. ஆனால் இவை மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகள். இங்கு 18 வயது முதல் 70 வரையிலான அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். உடல்நலம் குறைவு காரணமாக வாக்களிக்கவில்லை என்றால் மருத்துவச் சான்றிதழும், ஊருக்கு வெளியே வரமுடியாத தொலைவில் இருந்தால், அப்பகுதியின் காவல்நிலையச் சான்றிதழையும் காட்டி, விதிவிலக்கின் பயனைப் பெறலாம். இல்லாவிட்டால் அபராதம் செலுத்தியாக வேண்டும். பெரு நாட்டில் இதற்கான அபராதமாக அரசு நிறுவனத்தின் மூலம் அத்தகையோர் பெற்றுவரும் குடிமைப்பொருள் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமைபோல, வாக்களிப்பதும் அல்லது அதைத் தவிர்ப்பதும் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை. ஐனநாயகத்தில் மக்களின் விருப்பமும் அரசின் கட்டாயப்படுத்தலும் நேர் எதிரானவை என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியென்று தெரியவில்லை.

 வாக்களிக்க விரும்பவில்லை என்றாலும் அதை வாக்குச்சாவடிக்கு வந்து 49 ஓ மூலம் பதிவு செய்ய சட்டப்படி வழிவகை இருக்கும்போது, வாக்குச் சாவடிக்கு வராமலேயே இருப்பது ஒரு குடிமகனின் உரிமை என்று சொல்வது சரியாக இருக்க முடியுமா?

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். ஏனென்றால் இந்த அட்டைக்குப் பயன்பாடு இருக்கிறது. பல்வேறு ஆவணங்களுக்கு இந்த வாக்காளர் அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆனால் தேர்தலின்போது வாக்களிக்கும் கடமை மட்டும் தேவையற்றதாகக் கருதப்படுகிறது.

தொடர்ந்து சில மாதங்களுக்குக் குடிமைப் பொருள் வாங்காத குடும்ப அட்டைகளை போலியாகக் கருதி, ரத்து செய்ய அரசினால் முடியும் என்றால், வாக்களிக்காதவர்களின் பெயர்களையும் இதேபோன்று பட்டியலிலிருந்து நீக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?

வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யவும், அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கவும் இந்திய அரசு எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கிறது என்பதைப் பார்க்கும்போது, வாக்களிப்பதைக் கட்டாயமாக்கினால் என்ன என்ற எண்ணம் எவருக்குமே தோன்றுவது இயல்பு.

அண்மைக்காலங்களில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்ததற்குக் காரணம், வாக்குச்சாவடிக்கு வராவிட்டால் -கொடுத்தவர்களுக்கு- பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சம்தான் என்பதைப் பார்க்கும்போது, வாக்களிப்பது கட்டாயம் என்று செய்தால், அபராதம் அல்லது அரசு சலுகை மறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இருந்தால் அனைவரும் வாக்களிப்பார்கள் என்பது நிச்சயம்.

மக்கள் அனைவருடைய பங்கேற்பும் இல்லாமல் நல்லாட்சி என்பது சாத்தியமில்லை. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் அதை வாக்குச் சாவடிக்கு வந்து பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவது இன்றைய காலத்தின் தேவையும்கூட.

நன்றி: www.dinamani.com - தலையங்கம் - 30.Jan.2010


Wednesday, January 20, 2010

காரட்

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து
கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
இலகுவில் எல்லோருக்கும் எந்த நாட்டிலும் கிடைப்பதும் மருத்துவத்திலும் மந்திரச்சாறு எனப் போற்றப்படும் காரட்டின் தாவரப் பெயர் “டக்கஸ் காரோட்டா” ஆகும். இதன் பிறப்பிடம் மத்திய ஆசியா ஆகும். ஆனாலும் இது தற்போது உலகெங்கும் கிடைக்கக்கூடிய ஒரு குளிர் காலப் பயிர் ஆகும்.

காரட்டில் அதிகளவு இருப்பது பீட்டா காரோட்டின் என்னும் மஞ்சள் நிறப்பொருள்தான். இதிலிருந்துான் உடலுக்குத் தேவையானதும் மிகவும் முக்கியமானதுமான வைட்டமின் ‘ஏ’ உருவாகிறது. நமது ஈரல்தான் பீட்டா காரோட்டினை வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றுகிறது. மீதமுள்ள பீட்டா கரோட்டின் ஈரலிலேயே பாதுகாக்கப்படுகிறது.
100 கிராம் காரட்டில் இருக்கும் சத்துக்கள்
ஈரப்பதம் - 85%
புரோட்டீன் - 0.9%
கொழுப்பு - 0.2%
தாது உப்புக்கள் - 1.2%
நார்ச்சத்து - 2%
காபோகைட்ரேட் - 10.6%
கால்சியம் - 80 மி.கி.
பொஸ்பரஸ் - 530 மி.கி.
இரும்பு - 2.2 மி.கி.
கரோட்டின் - 1890 மி.கி.
தயமின் - 0.04 மி.கி.
ரிப்போபிலோவின் - 0.02 மி.கி.
நயாசின் - 0.06 மி.கி.
வைட்டமின் சி - 3 மி.கி.
கலோரி - 48 மி.கி.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு அற்புதமான காயகறி காரட் ஆகும். இதைப் பச்சையாக தோலுடன் உண்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் இதன் தோலில் தான் அதிகளவு தாது உப்புகள் காணப்படுகின்றன. காரட் ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். காரட்டில் காணப்படும் ஆல்காலின் பொருட்களினால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் அமில கார அளவை சமநிலைப்படுத்தும் தன்மையும் இதற்கு இருப்பதால் புற்றுநோயையும் இரத்த தமனிகளில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதன் சாறு குழந்தைகள் முதல் முதியோர்வரை பயன்படுத்தக்கூடிய ஆரோக்கிய பானம் ஆகும். அதுமட்டுமல்ல இதனைப் பருகுவதால் கண்பார்வை மேம்படும். சளித்தொந்தரவுகள் குறையும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க காரட்டை பச்சையாக உண்ண நல்ல பலன் கிடைக்கும்.
காரட்டை பச்சையாகச் சாப்பிடும் போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது. இது அமெரிக்க ஈஸ்டேர்ன் ரீஜனல் ரிசர்ச் சென்டர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பிலிப் பிலிஃபர் மற்றும் டாக்டர் ஹேக் லாண்ட் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி காரட்டில் கொழுப்பைக் கரைக்கும் பெக்டின் இருப்பதால் தினமும் 2 காரட் சாப்பிடும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் கொழுப்பில் 10 முதல் 20 சதவிகிதம் குறைகிறது எனவும் இதனால் இரத்த அழுத்தம் சமநிலைக்கு வருகிறது எனவும் டாக்டர் வெப்பர் என்பவர் தனது ஆதாரபூர்வமான ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார்.
ஹார்வார்ட்டு மருத்துவ பல்கலைக் கழகத்தில் 8 வருடங்களாக 90,000 பெண்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த உண்மை இது. மாதத்தில் ஒருமுறை காரட் சாப்பிடுபவர்களிலும் பார்க்க வாரத்திற்கு ஐந்து முறை அல்லது அதற்கு மேலும் காராட் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வரும் அபாயம் மூன்றில் இரண்டு விகிதம் குறைவாக கண்டறிந்தார்கள்.
காரட்டை பச்சையாக மென்று தின்னும் போது அது பால் ஈறுகளிலுள்ள கிருமிகளை கொல்வதுடன் பற்களுக்கிடையேயுள்ள உணவுத் துகள்களையும் வெளிக்கொணர்ந்து பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை தவிர்த்துப் பாதுகாத்து நமது பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
காரட் சாப்பிடும் போது அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதால் உணவு விரைவில் செரிக்கப்படுகிறது.இதற்குக் காரணம் உணவு சமிபாடடையச் செய்யும் நொதியங்கள் தூண்டப்படுவதால் அஜீரணக் கோளாறு, கேஸ்டிரிக் அல்சர், குடல நோய்கள், அப்பண்டிக்ஸ் பெப்டிக் அல்சர் என்பவை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் அட்ரீனலின் சுரப்பியின் பணியை ஊக்குவிப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது.

நன்றி: http://www.tamilvanan.com/content/2010/01/15/carrot-2/

Saturday, January 16, 2010

நீதிக்குத் தலைவணங்கு

பொங்கல் நாளில், கேட்டாலே மனதுக்கு இனிமை தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகமும் அரசு அதிகார அமைப்புதான். எனவே அந்த அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான்' என்று ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு தனிச்சலுகை பெற்றிருப்போர் யாருமில்லை என்பதும் இன்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்புக்காக சுபாஷ் சி. அகர்வால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். "மற்ற நீதிபதிகளுக்கு என்னென்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்புதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் உள்ளது. பணி விதிமுறைகளுக்கு உள்பட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கடமை, தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் உள்ளது' என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதைத் தலைமை நீதிபதி அலுவலகத்தால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததைப் போலவே, தற்போது உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம். நீதிக்குத் தலைவணங்க நீதியே தயங்குகிறது. 

ஓர் அமைச்சர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்றால் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டியது நீதித்துறைதான். ஆனால் அந்த வழக்கை நடத்தும் நீதிபதி, அந்த அமைச்சர் சட்டவிரோதமாகத் தரும்  நிலபுலன்களை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் மறைக்கப்பட்ட ஓர் அநியாயம், நீதிமன்றத்திலும் அம்பலப்படாமல் போகும்.  மக்கள் கண்முன்பாக வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அந்த வழக்குகளிலிருந்து  விடுவிக்கப்படுவார்கள். அவர்களது ஊழல் சொத்துக்கு நியாயப் பூச்சு கிடைத்துவிடும்.

ஆகையால்தான், அரசியல் மற்றும் அரசுத் துறையில் ஊழல் இருந்தாலும், அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதித்துறை மந்தணங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான், நீதிபதிகள் சொத்துவிவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கின் நோக்கம். மேல்முறையீடுகளை கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாக இருக்க முடியும்.

ஒரு முக்கிய பதவியில் இருப்பவரோ, பொதுவாழ்க்கையில் இருப்பவரோ, ஏன் அரசு ஊழியரோ ஆண்டுதோறும் தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை வெளியிட்டால்தான் அவரது வருமானத்துக்குள் அவர் வாழ்ந்திருக்கிறாரா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க முடியும்.

இந்தச் சொத்துகளைத் தங்கள் உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிப் போடுவார் என்ற வாதம் உண்மைதான். அப்படியான புகார்கள் எழும்போது, அந்த நபரின் தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் அரசு ஆய்வு செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். மேலும், தங்கள் பெயரில் இல்லாத சொத்துகளைத் தராமல் ஏமாற்றுவது எளிது என்பதால், இதில் மிகச் சிலர் தவிர பெரும்பாலானோர் பினாமி பெயரில் சொத்து வாங்குவதில் ஈடுபட மாட்டார்கள். லஞ்சப் பணத்தை வெளிப்படையாகச் செலவிட முடியாது என்ற  நிலைமை ஏற்படும்போதுதான் லஞ்சத்தின் கோர நகங்கள் கூர்மழுங்கும்.

தலைமை நீதிபதி அலுவலகம் இந்தத் தீர்ப்பை எந்த மனக்கசப்பும், முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்கும்போதுதான், இந்தச் சட்டத்தின் அடிநாதம் ஒவ்வொரு அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வரை ஒலிக்கும். அர்த்தமுள்ளதாக மாறும். 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்கூட நிறைய மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அவர்கள் நல்ல நீதிபதிகளைத் தேடிப்போய் தேர்வு செய்வதில்லை என்பதாலும், தங்கள் முன் இருக்கும் நீதிபதிகளில் சிலரைப் பரிசீலிக்கிறார்கள் என்பதாலும்தான் இன்றைய நீதித்துறையின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. 

நீதிபதிகளின் குழு பரிசீலனை செய்வதற்கான பல நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஒரு நீதித்துறை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்து நீதிபதிகளை நியமிக்கக் குறைந்தது 40 பேரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும்கூட, நீதித்துறை தலைவணங்கி ஏற்க வேண்டும். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து உடையவராகத் தலைமை நீதிபதியே இருக்கிறார். இவ்வாறு நீதிபதிகள் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்தால் அவர்கள் தொழில்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பது அவரது கருத்து. 

கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவது சேவை என்றாலும்கூட, பணியை முடித்து வெளியேறும்போது வேஷ்டியை உதறிக் காட்டுவது தனது நேர்மையை சந்தேகிப்பதாக ஒருவர் கருதினால், அந்தச் சோதனைக்கு உடன்பட மறுத்தால், அல்லது தங்கள் வாதத்தை நியாயப்படுத்தினால் அதுவே அத்தகையோருக்கு களங்கமாக அமைந்துவிடும். அதைப் போன்றதுதான், நீதிபதிகள் தங்கள் சொத்துகளைக் காட்ட வேண்டியதில்லை என்கிற வறட்டு கெüரவப் பிரச்னையும் நீதித்துறை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நீதித்துறை புரிந்துகொள்வது அவசியம்.

நன்றி: www.dinamani.com - 16-01-2010 (தலையங்கம்) 

உயிரி பன்மிய ஆண்டில் ஈர நிலங்கள் பாதுகாப்பு



உலகின் மிக முக்கிய வளமையங்களில் ஒன்று ஈர நிலங்கள் ஆகும். பயோ டைவர்சிட்டி எனப்படும் உயிரி பன்மியம் பெருக ஈர நிலங்களே காரணம். இந்த ஆண்டு உயிரி பன்மிய ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளதால் உயிரி பன்மியத்தின் அடிப்படை ஆதாரமான ஈர நிலங்களில் கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்கள் தண்ணீர் பரவி நிற்கும் ஆழமற்ற நிலப்பகுதியாகும். இந்த ஈர நிலங்களில் தான் அதிக எண்ணிக்கையில் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன அதிகம் உள்ளன. கடல்களை விட ஈர நிலங்களில் தான் அதிகளவில் மீன்கள் உள்ளன. ராஜஸ்தானில் சாம்பார், ஆந்திராவின் கொல்லேரு, கேரளாவின் அஷ்டமுடி, காஷ்மீரில் ஊலர் ஏரிகள் ஈர நிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கோடியக்கரை ஈர நிலங்களின் பட்டியலில் உள்ளது. ஈர நிலங்கள் குறித்த ராம்சார் சர்வதேச அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள புதிய ஈரநிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

நன்றி : www.dinamalar.com - 16-01-2010

Monday, January 11, 2010

புற்றுநோயை கட்டுப்படுத்தும் உணவு



ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் இயல்பை நார்ச்சத்து உணவுகள் பெற்றுள்ளன. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோயைக் குறைக்கும் இயல்பையும் நார்ச் சத்து உணவுகள் பெற்றுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவில் ஆயிரம் கலோரித்திறனுக்கு குறைந்தது 5 கிராம் அளவாவது நார்ச்சத்து இடம் பெற்றால் இந்தப் புற்றுநோய் 20 சதவீதம் வரை குறைகிறது. ஓட்ஸ், அவித்த உருளைக்கிழங்கை உணவில் சேர்த்தால் தேவையான நார்ச்சத்தின் அளவைப் பெறலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், முள்ளங்கி, அவரை, கொத்தவரை, புடலங்காய், பச்சைப்பயறு, ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய் போன்றவை கூடுதலாக நார்ச்சத்து இருக்கும் உணவுப் பொருட்களாகும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நார்ச்சத்தினை உருளைக் கிழங்கில் பெறுவதை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டும்.


நன்றி : www.dinamalar.com - 11-01-2010