I LOVE TAMIL


Tuesday, December 20, 2016

சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!

சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!

By ஆர்.ஜி.ஜெகதீஷ்  |   Published on : 20th December 2016 01:06 PM  |   அ+அ அ-   |  

tree


சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கணக்கிட்டுள்ளனர்.
ஆனால், பல்வேறு காரணங்களால் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால், சென்னையில் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வர்தா புயலுக்கு முன்பாக 3.75 மரங்கள் இருந்ததாகவும், வர்தா புயல் தாக்கத்துக்கு பின் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே உள்ளதாகவும் தனியார் தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சென்னை மாநகரில் சுவாசக் கோளாறுகள், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கண் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜி.பி.எஸ். கணக்கெடுப்பு: இந்தியாவின் அனைத்து முக்கிய மாநகரங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மரங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வை "ட்ரீ பேங்க்' தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து அண்மையில் மேற்கொண்டன.
மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநகரிலும் எத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிடவும், குறைவாக உள்ள மாநகரங்களில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது.
அதாவது, சென்னை மாநகரில் 65 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இத்தனை மக்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தமான காற்று கிடைக்க, 15 லட்சம் மரங்கள் இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்ததற்கான காரணம் என்ன? பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 10 லட்சம் மரங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மேம்பாலப் பணி, மெட்ரோ ரயில் பணி, சாலை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாகவும், அண்மையில் தாக்கிய வர்தா புயலின் காரணமாகவும் இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே சென்னை மாநகரில் எஞ்சியிருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரங்கசாமி கூறியது:
ஒரு மரம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வாழ் நாளுக்குத் தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. அதாவது, ஒரு மரம் 118 கிலோ அளவிலான பிராண வாயுவை நாள்தோறும் வெளியிடுகிறது.
சென்னையைப் பொருத்தவரை இப்போது 20 வகையான மரங்கள் உள்ளன. பல்வேறு நகரமயமாக்கல் பணிகளுக்காக வெட்டப்பட்டதன் காரணமாக, 19,865 கிலோ ஆக்ஸிஜனை நாம் இழக்க வேண்டியச் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், 104 பேர் தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான ஆக்ஸிஜனை இழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றார் அவர்.
மரக் கழிவுகளை அப்புறப்படுத்த ஒரு வாரமாகும்..!

சென்னையில் வர்தா புயலால் விழுந்த மரங்களையும், அதன் குப்பைகளையும் அகற்ற இன்னும் ஒரு வாரமாகும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி வர்தா புயலால் விழுந்த 17,133 மரங்களில் இதுவரை 12,135 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சியின் 19,411 பணியாளர்கள், பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,200 பணியாளர்கள் என மொத்தம் 22,611 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 743 லாரிகள், 416 ஜே.சி.பி. வாகனங்கள், 560 மர அறுவை இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வீடுகள், தனியார் அலுவலகங்கள், பண்ணைகளில் விழுந்திருப்பவை கணக்கில் வராது. மேலும், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தனியாரும் ஈடுபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள 54 இடங்களில் கொட்டலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் மரங்களின் வகைகள்!
1. தென்னைமரம்
2. புளிய மரம்
3. மா
4. வேலி காத்தான்
5. சீமை வேலிகாத்தான்
6. செம்மயிற்கொன்றை (குல்மொஹர்)
7. மழை மரம்
8. வேம்பு
9. சாம்பல்
10. செப்புநெற்று
11. இந்தியக் கடற்கரை மரம்
12. கருவேலம்
13. மஸ்து மரம்
14. வளைகுடா மரம்
15. எலுமிச்சை
16. கொய்யா
17. அரசு
18. ஆல்
ஏற்ற மரங்கள் எவை?

வர்தா புயலின் தாக்குதலில் சென்னையில் வளர்க்கப்பட்ட பலவிதமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் பல மரங்கள் சென்னை மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத மரங்களாகும். இந்தக் கடும் புயலிலும் நம்நாட்டு மரங்கள் இன்னும் கம்பீரத்துடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன. நிழல் எனும் தன்னார்வ மரம் வளர்ப்பு நிறுவனம் சென்னை மாநகர் கடலோரப் பகுதி என்பதால் அதற்கேற்ப 16 விதமான மரங்களை பட்டியலிட்டுள்ளது.
அவை வருமாறு:
1. புன்னை
2. புங்கை
3. பூவரச மரம்
4. புரசை மரம்
5. நுணா
6. நாட்டு பாதாம்
7. வேப்ப மரம்
8. காட்டு பூவரசம்
9. வால்சுரா
10. சமுத்திரப்பழம்
11. வன்னி
12. குட்டிப்பலா
13. துரிஞ்சி
14. வேப்பாலை
15. வென்னாங்கு அல்லது தடா
16. கல்யாண முருங்கை ஆகியவையாகும்.




Thanks: www.dinamani.com - 20.12.2016

Monday, December 5, 2016

மண்ணானாலும் நாம் பாதுகாப்போம்!

1982லிருந்து 2007 வரை 14 மில்லியன் ஏக்கர் விதைநிலம் 'நாட்டின் வளர்ச்சி' என்னும் பார்வையில் தொலைந்து போனது. வளமான மண் அதிகளவு நீரினை சேமித்து வைக்கும்.

ஒரு ஏக்கரில் உள்ள 6 இன்ச் அளவு மண்ணில் உள்ள ஒரு சதவீத கரிம தாதுக்கள், ஒரு லட்சம் லிட்டர் அளவு நீரினை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நாம் நமது பூமிக்கு அதிகளவு தீங்கு விளைவித்து விட்டோம். அதை சரிசெய்யும் நிலையில் இப்போது உள்ளோம். ஒரு நாடு தனது மண் வளத்தை அழித்து விட்டால், அது அந்த நாட்டினையே அழிப்பதற்கு சமம் என்று சொன்ன அமெரிக்காவின் 32வது அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூற்று இப்பொழுது உண்மையாகிறது.

புயல் மற்றும் வெள்ளத்திற்கு காரணமான மண் அரிப்பு தடுக்கப்படவேண்டும் என அவர் தன் நாட்டின் அனைத்து கவர்னர்களுக்கும் 1937 பிப்., 26ம் நாள் கடிதம் எழுதினார். மண்ணே ஊட்டச்சத்து 95 சதவீத உணவானது நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவின் ஊட்டச்சத்து மதிப்பு, மண்ணின் வளத்தை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

மண் மாதிரியில் சராசரியாக 45 சதவீதம் தாது உப்புகளும், 25 சதவீதம் நீர், 25 சதவீதம் காற்று மற்றும் 5 சதவீதம் கரிமப் பொருட்களும் உள்ளன. மண்ணில் உள்ள ஒவ்வொரு கிராம் கரிமக் கார்பனானது, 8 கிராம் நீரினை தன்னகத்தே தேக்கி வைக்கும் திறன் உள்ளது. உலகினுடைய 10 சதவீத கார்பன் வெளியேற்றத்தை மண் தன்னிடையே தக்க வைத்துள்ளது.

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் பிற உயிரிகளின் கூட்டு முயற்சியினால் மண் வளப்படுத்தப்படுகிறது.உயிரிகளினால் நீர் மண்ணில் செல்வதற்கும், தாது மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கும் பயன்படுகிறது. பூஞ்சை, பாக்டீரியா மற்றும் மண்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை வேதிமாற்றத்தினால் ஊட்டச்சத்து பொருட்களாக மறுசுழற்சி செய்து மண்ணிற்கு கொண்டுவருகிறது.

பருப்பே மண்வள ஆதாரம்

உலக மண் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், இந்த ஆண்டு, மண் மற்றும் பருப்பு வகைகள் கூட்டால் மண் அரிப்பை தடுக்கலாம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. ஆதலால் பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம், மண்ணின் வளத்தை நாம் திரும்பப் பெறலாம் எனவும் மண் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பருப்பு வகைகள், உலர் விதைகள், உலர்ந்த பீன்ஸ் பருப்பு மற்றும்பட்டாணி பெரும்பாலும் அறியப்படும் மற்றும் பயன்படுத்தும் பருப்பு வகைகள் ஆகும்.

இந்த பருப்பு வகைகள், அதிக சத்துக்கள் நிரம்பிய மற்றும் ஒரு உயர் புரதம் அடங்கிய அத்தியாவசிய பயிர்கள். இறைச்சி மற்றும் பால் உணவை உண்ணாத பிரதேசங்களில், மனிதனுக்கு தேவையான புரதத்தினை கொடுக்கக்கூடியது. பருப்பு வகைகளில் கொழுப்பு குறைந்த மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும்.

இந்த குணங்களினால்தான் நீரிழிவு மற்றும் இருதய மேலாண்மைக்கு இந்த பருப்பு வகைகள் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. பயறு வகைகள் உடல் பருமனை குறைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிலம் வளமாகும்

விவசாயிகளுக்கும் பருப்பு வகைகள் ஒரு முக்கியமான பயறு வகையாகும். ஏனெனில் அவைகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஏற்றது. விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குகிறது. பருப்பு வகைகள் இழைச்சத்து பண்புகளை, மண்ணில் நிலைநிறுத்தி, விவசாய நிலத்தை வளப்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க
செய்கிறது.

இதனை ஊடுபயிராக பயன்படுத்துவதால், விவசாயிகள் விவசாய பல்லுயிர் மற்றும் மண் பல்
லுயிர்களை ஊக்குவிக்க முடியும். பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.பருப்பு வகைகள் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதிலும், செயற்கையான உரங்களை நம்பி
யிருக்க வேண்டிய நிலையை குறைப்பதிலும் மிகப் பெரிய பங்காற்றுகிறது.

இந்த செயற்கை உரங்கள் உற்பத்தி சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். எனினும் பருப்பு வகைகள் இயற்கையாக மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது மற்றும் மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தினை விடுவித்து செயற்கை உரப்பயன்பாட்டினை குறைக்கிறது.

உணவு, வெப்ப அச்சுறுத்தல்

மண் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உணவு உற்பத்திக்கும், வெப்பநிலை மாற்றத்திற்கும் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பு கூற்றின்படி, பூமியின் மண் கிட்டத்தட்ட 33 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கிறது. 40 சதவீதம் மண் சிதைந்த பகுதியானது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பிரதேசங்கள் ஆகும்.

அதே நேரத்தில் நமது பூமியின் மக்கட்தொகையானது இப்போதுள்ள 7 பில்லியன்களிலிருந்து, 9 பில்லியன்களாக 2050ல் உயரும் போது 70 சதவீதம் உணவு உற்பத்தி தேவைப்படுகிறது. இதற்கான தீர்வாக மக்களின் பிரதான உணவாகவும், குறிப்பிடத்தக்க சத்து நிறைந்ததாகவும் பயறு வகைகள் உள்ளன.

பல்வேறு வழிகளில் மண்ணின் வளத்தினை மேம்படுத்தி, மண் உயிர்மத்தினையும், மண் அமைப்பினையும் மண்ணில் வாழும் பல்லுயிர்களையும் பாதுகாக்கிறது.வளமான மண் மற்றும் பயறு வகைகள் மூலம் மட்டும்தான் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2030 குறிக்கோளான, உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு கொடுப்பதை செயல்படுத்தமுடியும்.

காலம் சென்ற தாய்லாந்து அரசர் பூமிபோல் அடல்தேஜ், என்ற மண் விஞ்ஞானியின் நினைவாக தான் அவரது பிறந்த தினம் உலக மண் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் நிலையான மண் மேலாண்மைக்காக போராடினார். இந்த உலக மண் நாள், சர்வதேச அளவில், மனித வாழ்க்கைக்கு முக்கியப் பங்காற்றும் முகமாக, மண்ணினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

'வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்'
என்ற அவ்வையார் கூற்றுப்படி, விவசாய நிலத்திற்கு தேவையான மண்ணை பாதுகாக்க, இந்நாளில் உறுதியேற்போம்.

- பேராசிரியர் எம். ராஜேஷ்
மதுரை. 94433 94233

Thanks - www.dinamalar.com - 05.12.2016