I LOVE TAMIL


Monday, December 29, 2008

மக்கள் சக்தி

மக்கள் சக்தி

மக்கள் சக்தி மக்கள் சக்தி என்கிறார்களே, அது உண்மையாகவே எப்படிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திவிட்டனர் திருவண்ணாமலை மக்கள்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை எனப்படும் இரண்டு மலைகளையும் இரும்புத் தாது எடுப்பதற்காக வெடிவைத்து தகர்க்கும் திட்ட அனுமதிக்காக டிசம்பர் 27-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில்தான் இந்த மக்கள் சக்தி வெளிப்பட்டது.

மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த மலைகள் உள்ளன. இந்த இரு மலைகளிலும் 41 சதவீதம் அளவுக்கு இரும்புத் தாது இருப்பது உண்மையே. தமிழ்நாடு இரும்புத் தாது கனிமக் கழகம், தொழில்வளர்ச்சிக் கழகம், ஜே.எஸ். டபிள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த இரு மலைகளையும் தகர்த்து இரும்புத் தாது பெறும் திட்டத்துக்கு அரசுக்கு கருத்துரு கொடுத்துள்ளன.

இந்த இரு மலைகளில் வேடியப்பன் மலையும் இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. மலையில் உள்ள வேடியப்பன் கோயிலின் மூலிகைத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தவிர, மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையை ஆன்மிக உணர்வுடன் மாதம்தோறும் சுமார் 5 லட்சம் பேர் கிரிவலம் வருகின்றனர்.

கிரிவலம் வருபவர்களின் வசதிக்காக மலையையொட்டி இன்னொரு சுற்றுப்பாதை அமைத்தால், கிரிவலப் பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டபோது, "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்று அனுமதி மறுத்த வனத்துறைதான் இப்போது இந்த இரு மலைகளிலும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும் 2 லட்சம் மரங்களை வெட்டவும் அனுமதிக்கிறது. இது எப்படி?

இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் 9.2 கோடி டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும்; மலையை தொடர்ந்து வெடிகள் வைத்து தகர்ப்பதும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களைக் கொண்டு செல்ல தொடர்ந்து லாரிகள் இயக்கப்படுவதும் திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை மோசமானதாக்கிவிடும் என்பது நிச்சயம்.

தமிழக மக்களின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவண்ணாமலை கோயிலை "பாரம்பரிய நகரமாக' அறிவிக்கச் செய்து, அந்த நகரத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த நகரின் சூழலை அடியோடு அழிக்கத் துணை நிற்பது எதனாலோ?

திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுமார் 800 பேர் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில் அங்கே இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்-எம்பி, எம்எல்ஏ-க்கள்- யாருமே இல்லை. திமுக பிரதிநிதிகள் கட்சிப் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பாமக-1, காங்கிரஸ்-3, அதிமுக-1 எம்எல்ஏ-க்களும் இந்தக் கருத்துக்கேட்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த மாவட்ட மண்ணின் மைந்தரான உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு (தண்டராம்பட்டு), முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திருவண்ணாமலை) திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு தெரியாமல் இந்தத் திட்டம் கருத்துக்கேட்பு வரை வந்துவிட்டது என்றால், யாரால் நம்ப முடியும்? அவர்கள் நினைத்திருந்தால் அரசுத் துறை அளவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?

""இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன'' என்று ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலர் சமாதானம் செய்தபோது ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: ""நீங்க அம்பாசமுத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா?''

அவள் ரத்தம் கொதிக்கிறது; ஏனென்றால், அவளால் வேறு நகரத்துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது; தன் பிள்ளைக்கு பெரியபடிப்பு கொடுத்து, வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ "செட்டில்' ஆகிவிட முடியாது; அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப் போகிறவள் என்பதால்தான் அந்தத் துடிப்பு.


Thanks to www.Dinamani.com on 29.12.2008 - தலையங்கம்

Saturday, December 20, 2008

வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!

மு. முரளீதரன்

""அன்றாட வாழ்வில், நாம் காண்போர் அனைவருமே மகிழ்வுடன் வாழ்கிறார்களா?'' என்று திடீரென்று எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டது! ஒவ்வொருவரின் முகத்திலும், ஏதோ ஒரு கவலை தெரிகிறது! நேற்றைய விஷயங்கள், இன்றைய நிகழ்வுகள் பற்றித்தான் நம்மவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்களே தவிர, "நாளைக்கு என்ன செய்வது'? என்ற எதிர்காலச் சிந்தனை பெரும்பாலோர்க்கு இல்லை! சிலரிடம் உண்டு! ஏனெனில், "இன்று நல்லபடியாக நாள் முடிந்தால் போதும்'! என்ற எண்ணமே மேலோங்குகிறது! அவ்வளவு இடர்ப்பாடுகள்!

நான் அண்மையில் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஓர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியிலிருக்கும் போதே, முதல் தேதி சம்பளம் பெறும் நாளில் இருக்கும் முகமலர்ச்சி, மாதக் கடைசியான முப்பதாம் தேதியிலும் மாறாது! "இது எப்படி அவருக்குச் சாத்தியமாகிறது?' என்று நெடுநாள்களாக அவரைக் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது!

அவர் சொன்னார். ""நாம் படிக்கும் நீதி நூல்களும், நம்மைச் சுற்றி வாழ்வோரின் செயல்பாடுகளும் நம்மை மிகவும் எச்சரிக்கின்றன. ஆனால், நாம்தான் அதைக் கண்டுகொண்டு, நம் அன்றாட வாழ்வோடு பொருத்திக் கொள்வதில்லை! நாமும் சிந்தித்து, நம் குடும்பத்தினரையும் சிந்திக்கச் செய்துவிட்டால், அமல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்! இதுவே சத்தியம்!

ஊரைத் திருத்தப் புறப்படுவதற்கு முன்பு, உன்னை நீ திருத்திக் கொண்டாலே போதும்! பிறருக்கு உபதேசிக்க உனக்கொரு தகுதி வந்தாலும்கூட, யாராவது கேட்டாலொழிய நீயாகச் சென்று ஆலோசனை தரவேண்டியிராது'' - என்றதும், நான் என்னுள்ளே மெதுவாக ஒரு மாற்றம் தோன்றுவதை உணர்ந்தேன்!

வேண்டாத விஷயங்களிலும்கூட, நாமே முந்திக்கொண்டு, பிறர்க்கு அறிவுரை கூறுவோர் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? வீண் பகட்டாக வாழ்ந்து, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல், ""வாய்தா'' வாங்கிக் கொண்டு, ஒரு கடனை வாங்கி, மற்றொரு கடனை அடைத்து, எந்தக் கடனிலிருந்தும் மீளாமல், விழிகள் பிதுங்கி, மொழிகள் பதுங்கி, அவதிப்படுகிறோமே, இதற்கு மாற்றாக நல்வழி ஏதுமில்லையா? நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ""இல்லறத்தில் துறவறம்'' என்று வாழ்ந்து பாருங்கள்; எந்தக் கவலையும் யாருக்கும் எப்போதும் இல்லை! உங்கள் அவசியமான தேவைகளுக்காக மட்டும் செலவிடுங்கள். அனாவசியமான ஆசைக்காக உங்களை அடிமையாக்கிக் கொள்ளாதீர்கள். ""இவை இல்லாமலும்கூட நம்மால் வாழ இயலும்'' என்ற மனப்பக்குவம் நமக்கு வளர்ந்துவிட்டால், நமது வருவாய்க்குள்ளே வாழ முடியும். சிக்கனமாய் வாழ்வதால், சிறுதொகை மீதமாகும். அதைப் பெருந்தொகையாக மாற்றுவதே சேமிப்பு'' என்றார்.

எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை இவ்வளவு அனாயசமாகச் சொல்கிறாரே! என்று வியந்தேன்! என் நண்பர் தொடர்ந்தார். ""வங்கியில் Term Deposit என்று குறுகியகால வைப்பும்; Fixed Deposit என்று நீண்டகால வைப்பும் உள்ளன. அதைப்போல நம்மிடம் "நேரமேலாண்மை' என்ற TIME DEPOSITm, ‘Financial Discipline என்ற "பண ஒழுங்கும்' இருக்க வேண்டும். இதுவே மனிதனின் TD, FD ஆகும்!

""உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்வது காலத்தினை நாம் மதிப்பதாகும். உரியவற்றுக்கு மட்டுமே செலவிடுவது பணத்தை நாம் மதிப்பதாகும். இவை இரண்டும்தான் நம் "நாநயத்திற்கு உதவும் நாணயங்கள்'' என்றதும், எனக்கு ஆயிரம் வாட்ஸ் பல்ப் ""பளிச்'' என்று என் உள்ளத்தில் ஒளியேற்றியதைப் போல உணர்ந்தேன்! சிலரின் வாக்கு, இருள் நீக்கும் ஒளிவிளக்கு!

"நமக்கு உபதேசிப்பதுபோல, வாழ்ந்து காட்டுவார் எவருமில்லையே!' என்று இதுவரை தவறாக எண்ணினேன்! ஆனால் அவரைச் சந்தித்த பின்பு, ""நாமே ஏன் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டக்கூடாது?'' என்ற திடமான மன உறுதி எனக்கு ஏற்பட்டது! சிந்தனையும் செயலும் இரட்டைத் தண்டவாளங்கள் அல்லவா!

Thanks - www.dinamani.com - Monday June 5 2006 00:00 IST

Sugarcane - Issue




Thanks - www.dinamalar.com - 19.12.2008

Monday, December 8, 2008

Petrol Price





Source : www.dinamalar.com - 07.12.2008

மழை இனிது! மனிதன்..?

மழை இனிது! மனிதன்..?

அண்மையில் பெய்த பலத்த மழையினால் சென்னை மாநகரமே நாறிக் கொண்டிருக்கிறது. காரணம் - மழை அல்ல; அது கலந்த மண்ணும் அல்ல. மனிதர்தம் வாழ்க்கை முறைதான் இந்த நாற்றத்துக்கும், அதைத் தொடரும் நோய்களுக்கும் காரணம்.

சென்னை மாநகர் மட்டுமன்றி, புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ள எல்லா நகரங்களிலும் மழைநீர் வடிவதற்கு முன்பே நாற்றமெடுத்து கிருமிகளை உற்பத்தி செய்வது ஏன் என்றால், குடியிருப்புகளின் அனைத்து மலஜலக் கழிவுகளும் புதை சாக்கடையில் கலக்கப்படுவதுதான்.

ஒரு நகரவாசி குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுதற்குப் பயன்படுத்தும் தண்ணீர் புதை சாக்கடையில் கலப்பதால் தீங்கு ஏற்படுவதில்லை. இதில் கழிவறைக் கழிவுகளைச் சேர்ப்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது.

மாநகர, நகரக் கட்டடங்களில் உள்ள கழிப்பறைகள் இரண்டு வகைதான். ஒன்று, நிரம்பிய கழிவுத் தொட்டியை (செப்டிக் டேங்க்) மோட்டார் வைத்து இறைத்து புதை சாக்கடையில் சேர்த்துவிடுவது. இரண்டாவது, நேரடியாக புதை சாக்கடையில் கலக்கச் செய்வது. பலத்த மழையின்போது மழைவெள்ளமும் புதை சாக்கடையும் கலந்து நகரம் முழுவதும் திறந்தவெளி செப்டிக் டேங்க்-ஆக மாறிவிடுகிறது.

வீடுதோறும் கழிவறைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் நிறைவேற்றியபோது, புதை சாக்கடைகள் இல்லாத சிறுநகரங்களில் ஒரு நல்ல, எளிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வீட்டின் கழிவறைக்கு இரண்டு கழிவுத்தொட்டிகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. ஆறு அடி உயரம், ஒரு மீட்டர் விட்டமுள்ள இரண்டு உறைகிணறுகள்தான் இந்தத் தொட்டிகள். மலஜலத்தால் ஒரு தொட்டி நிரம்பியவுடன் அதற்கான வழியை மூடிவிட்டு அடுத்த தொட்டிக்குள் கழிவுகள் சேரும்படி செய்வதும், நிரம்பிய தொட்டியானது இரண்டு, மூன்று மாதங்களில் காய்ந்து உரமாக மாறியதும் அதை விவசாயத்துக்கு விற்றுவிடுவதும்தான் அந்த எளிய தொழில்நுட்பம். இப்போதும்கூட, சாக்கடைவசதி இல்லாத கிராமங்களில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம்தான் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

ஆனால் நகரவாசிகள்தான் எப்போதுமே "ஸ்பெஷல்' ஆயிற்றே. அவர்களுக்கு இத்தகைய தொழில்நுட்பத்தை அரசும் உள்ளாட்சிகளும் அறிமுகம் செய்யக்கூட முயற்சிக்கவில்லை.

ஓர் ஆண்டு காலத்தில் ஒரு மனிதனின் மலஜலக் கழிவுகளிலிருந்து 4.56 கிலோ நைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாஷியம் கிடைக்கின்றன. இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஓர் ஆண்டுக்கு 60 லட்சம் டன் உரம் (நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம்) கிடைக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் உரத்தின் அளவே 20 லட்சம் டன்தான். எவ்வளவு வீணடிக்கிறோம் என்பது இப்போது புரியும்.

மனிதனின் நாற்றமெடுத்த உடல் இயந்திரத்தைக்கூட சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில்தான் இயற்கை படைத்திருக்கிறது. ஆனால் மனிதன்தான் தன்னைப் படைத்த இயற்கையை சுயநலத்தாலும் வன்மத்தாலும் நாசப்படுத்துகிறான்.

நிலத்தடி நீர் கீழே இறங்கிக்கொண்டே செல்லும் ஆபத்து தலைக்கு மேலாக வந்தபோதுதான், அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம் என்ற விதிமுறையை அரசு கொண்டுவந்தது. அதேபோன்று கழிவுத் தொட்டிகளிலும் அரசு விதிமுறைகளை புகுத்த வேண்டும்.

நகரங்கள், மாநகரங்களில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் உள்ள கழிப்பறைக் கழிவுகள் புதை சாக்கடையில் கலக்கும்படி செய்யக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கழிவுத் தொட்டிகள் கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க ஒரேயொரு அரசாணை போதுமானது. குடியிருப்பு, அடுக்ககம், அலுவலகம் எதுவானாலும் அங்குள்ள கழிப்பறை வசதிகளுக்கு ஏற்ப கழிவுத் தொட்டிகளின் அளவை அரசு தீர்மானிக்க வேண்டும். நிரம்பும் கழிவுகள் காய்ந்ததும் விவசாய உரமாக விற்பனை செய்வது எளிது.

மாநகரத்தில் இதை நடைமுறைப்படுத்துவதால் யாருக்கும் தீங்கு இல்லை; மாநகர சுற்றுச்சூழல் கெடாது; நாற்றமின்றி மழைநீர் வடியும்; தேங்கினாலும் உடனே கிருமிகள் உற்பத்தியாகாது; நோய்கள் பரவாது; மாநகரிலும் மழை இனிதாகவே இருக்கும்.

Source: www.dinamani.com - Monday December 8 2008

Saturday, November 29, 2008

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

ஏராளமான மருத்துவ குணங்கள் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. வைட்டமின்-சி சத்து நிறைந்திருக்கும் எலுமிச்சம் பழம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த அருமருந்தாகிறது. கால்சியம், இருப்புச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. எலுமிச்சையின் கொழுந்து, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, மரப்பட்டை என அனைத்தும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் லெமன் பெக்டின் என்னும் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்தவும், புண்களை ஆற்றவும் உதவுகிறது. இனி எலுமிச்சை பல்வேறு நோய்களுக்கு எப்படி மருந்தாகிறது என்பதை காணலாம்.

சாப்பிட்டபின் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள், வாயு கோளாறு போன்ற தொல்லைகள் நீங்க வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுத்து நீருடன் கலந்து, சிறிது உப்பையும் சேர்த்து பருகினால் வாந்தி உடனே நிற்கும். பித்தம் தணியும். உடலுக்கும் நல்லது.

சிறிதளவு சீரகத்தை அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் குடித்து வந்தால், நன்றாக பசி எடுக்கும்.

சிலருக்கு வாயில் தொடர்ந்து கசப்பு சுவை இருந்து கொண்டே இருக்கும். எதையும் ருசித்து சாப்பிட முடியாது. இந்த தொல்லை போக, காலையில் பல்துலக்கிய பின்பு எலுமிச்சம் பழச்சாற்றை வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பின்னர் துப்பிவிடலாம். இப்படி செய்து வந்தால் வாய் கசப்பு மாறும்.

மூட்டுவலி, கால்வலிக்கு எலுமிச்சை இலையை அரைத்து பத்து போட்டால் வலி குறையும்.

Source: www.dailythanthi.com - இளைஞர் மலர் - 29.11.2008

விளையாட்டு பொம்மைகள்

விளையாட்டு பொம்மைகள்

மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளை (20 மைக்ரான் அளவு) பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளதால், அனைவரும் தடிமனான பிளாஸ்டிக் பைகளுக்கு மாறினோமே தவிர, பிளாஸ்டிக் தீங்கானது என்பதை உணர்ந்து செயல்படவில்லை. இதே உணர்வற்ற தன்மைதான் குழந்தைகளுக்கான பொம்மைகள் தேர்வு செய்வதிலும்!.

இந்தியாவைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு எந்த வகையான பொம்மைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இதுவரை அமலில் இல்லை என்பதே அதற்குச் சான்று.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பொம்மைகளில் சில ரசாயனப் பொருள்கள் கலந்திருந்தால் அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. இருந்தும்கூட, நடைமுறையில் அந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக அங்குள்ள அமைப்புகள் குறை கூறுகின்றன. அந்நாட்டில் பொம்மை தொடர்பான விபத்துகளில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 80,000 என்கிற செய்தியைப் பார்க்கும்போது, இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தும் ஆர்வம்கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் குழந்தைகளின் முதல் உயிர்த்துடிப்பான விளையாட்டுப் பொம்மைகள் - சொன்னால் வேடிக்கையாக இருக்கும் - தாத்தா பாட்டிதான். தாத்தா பாட்டிகளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் தாய் தந்தையருடன் பழகும் விதத்தையும் எளிதாக வேறுபடுத்திவிட முடியும். இருந்தாலும் குழந்தைகளுக்கென தனியாக, வண்ணங்கள் தீட்டப்படாத மரப்பாச்சி பொம்மைகள், மரத்தால் செய்யப்பட்ட யானை மற்றும் விலங்கு உருவங்கள், மரச் சொப்புகள், பனைவோலையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பைகள், இப்படியாகத்தான் விளையாட்டுப் பொருளாக கொடுக்கப்பட்டன. அதுவும்கூட வயதுக்கு ஏற்ப வேறு பொம்மைகளும், நடைவண்டிகளுமாக அவர்களது விளையாட்டுப் பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால், தற்போது இவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு ரிமோட் கார், பல்டி அடிக்கும் யந்திர மனிதன், ஜாய் ஸ்டிக், செல்போன், ஸ்பைடர்மேன், ஏகே 47 துப்பாக்கி என வாங்கித் தரப்படுகின்றன. இவை அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்கள். உடைந்தால் குழந்தையை காயப்படுத்தும் தன்மை உள்ளவை. இவற்றில் வளைந்து கொடுக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்துமே அதன் ரசாயனத் தன்மை காரணமாக குழந்தையின் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை.

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மீது பூசப்படும் வண்ணங்களில் காரீயம் ( லெட்) அதிக அளவு இருப்பதாகக் கூறி, அமெரிக்காவில் கோடிக் கணக்கில் பொம்மைகளை அதைத் தயாரித்த நிறுவனங்களே திரும்பப் பெறும்படி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைவருமே தங்கள் பொம்மைகளை வாயில் வைத்து கடிக்காமல் விளையாடுவதே இல்லை என்பதால் செயற்கை வண்ணங்கள் வழியாக குழந்தைகளுக்கு காரீயம் உள்ளுக்குச் சென்று, நுரையீரல் தொடர்பான நோய்கள், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் புற்றுநோய்களுக்கு இடம்தருகின்றன

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு எந்தெந்த பொம்மைகளை வாங்கித் தருவது, அவர்களை எந்தப் பொருள்களுடன் மட்டும் விளையாட வைப்பது என்ற ஒரு வாரப் பயிற்சியை தாய்மார்களுக்கு அளித்த பிறகு, அவர்தம் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடி காயமடைந்து மருத்துவமனைக்கு வருவது இல்லாமல் ஆகிவிட்டது என்ற புள்ளிவிவரம் அண்மையில் வெளியானது. அத்தகைய பயிற்சிகள்கூட இந்தியாவில் கிடையாது.

குழந்தைகள் நுரையீரல் பாதிப்பினால் இளமையிலேயே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாவதும், மருத்துவச் செலவுகளும் தவிர்க்கப்பட வேண்டுமானால், பொம்மைகள் விஷயத்திலும் கவனமாக இருந்தால் சாத்தியமாகும். தற்போது குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் அவர்களை கருணையோடு தொடர்பில்லாத இயந்திரத்தனமான மனிதர்களாக மாற்றுகின்றன என்பதுதான் உளவியல் மருத்துவர்களின் கணிப்பு.

குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் நகைகள், உடைகள், பொம்மைகள், அதன் மேல் பூசப்படும் வண்ணங்கள், குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு, சாக்லெட், ஐஸ் கிரீம் ஆகியவற்றில் கலக்கப்படும் வண்ணங்கள் ஆகியவற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ரசாயனங்கள் என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும். இன்னமும் நம் குழந்தைகளுக்கு எது நன்மை என்று தெரியாத விளையாட்டுப் பொம்மைகளாக பெற்றோர் இருத்தல் கூடாது.

சீனாவில் பால்பவுடரில் கலப்படம் என்றதும், தமிழ்நாடு முழுவதிலும் எல்லா கடைகளிலும் விற்கப்படும் குழந்தை உணவுப் பொருள்களை அதிகாரிகள் சோதிப்பது தீவிரமாக நடைபெறுகிறது.

கவிஞர் கண்ணதாசன் பாடியதைப் போல, ""பட்டபின் அறிவதே பழக்கமென்று ஆன பின்பு, கெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும். பட்டுப் பின் தேறல்தானே "பட்டணத்தார்' வாழ்க்கை!''.

Source: www.dinamani.com - Friday November 28 2008