I LOVE TAMIL


Monday, May 31, 2010

தலையங்கம்: அகல வேண்டும், அக்கறையின்மை...

விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததற்குக் காரணம் ..எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது மட்டுமல்ல, தெருவில் இறங்கிப் போராடுவதற்குக்கூடத் திராணியற்ற நிலையில் விலைவாசியால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர வகுப்பினர் இருப்பதுதான்.

கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகக் காணப்படும் பொருளாதார மந்த நிலைமை, உலகளாவிய அளவில் உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்புக்கு உதவியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளாக விவசாய வளர்ச்சியில் காட்டப்படும் அக்கறையின்மைதான் இப்போது காணப்படும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் என்று தோன்றுகிறது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை, வளரும் பொருளாதாரங்களில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், அடுத்த பத்தாண்டுகளில் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படுவதற்கான எல்லா காரணிகளும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறது. நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் கீழே, அதாவது சுமார் ஐம்பது ரூபாய்கூட வருமானம் இல்லாத 80 கோடிப் பேர் உலகில் வாழ்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதில் 20 கோடிப் பேர் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்.

கடந்த மூன்றாண்டுகளாக ஜுர வேகத்தில் ஏறி இப்போது பழைய நிலைமைக்குத் திரும்பாமல் இருக்கும் விலைவாசியால் இந்தியாவில் வாழும் சுமார் 60 விழுக்காடு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் குறிப்பொன்று கூறுகிறது. கடந்த நாடாளுமன்றத் தொடரில் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். சராசரி இந்தியன் தனது மாத வருமானத்தில் ஏறத்தாழ 60 விழுக்காட்டைத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைக்காகச் செலவழிப்பதாக இன்னொரு குறிப்பு தெரிவிக்கிறது.

முற்றிலும் விவசாயம் சார்ந்த நாடான இந்தியா, உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதற்கு, பெருகி வரும் நமது மக்கள்தொகை ஒரு முக்கியமான காரணி என்பதை மறுக்க இயலாது. அதேநேரத்தில், மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தொலைநோக்குப் பார்வையுடன் கணக்கிட்டு உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க ஊக்குவிக்காதது யார் குற்றம்?

கடந்த பத்து ஆண்டுகளாக நமது மத்திய, மாநில அரசுகள் தொழில்வளத்தைப் பெருக்குவதிலும், கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும், இலவச அறிவிப்புகளின் மூலம் மக்களை மகிழ்விப்பதிலும் காட்டிய அளவு அக்கறையை உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதில் காட்டவில்லை என்பதுதான் உண்மை. 9 சதவிகித வளர்ச்சி, 10 சதவிகித வளர்ச்சி என்று ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் காட்டிய முனைப்பை, விவசாயத்தில் காட்டாமல் போனதன் விளைவு, நமது விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவிகிதமாகப் பல ஆண்டுகளாய் தொடர்ந்து வருகிறது. இப்போதுதான் விழித்துக் கொண்டு விவசாய வளர்ச்சிக்கு என்ன செய்வது என்பதையே நமது மத்திய அரசு யோசிக்கத் தொடங்குகிறது.

விவசாய வளர்ச்சியில் முழு அக்கறை காட்டாமல் மானியங்களை மட்டுமே அள்ளி வழங்குவது என்கிற தவறான பொருளாதாரக் கொள்கை பயன் அளிக்காததில் வியப்பில்லை. கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு ஆசுவாசம்  அளித்ததே தவிர, உற்பத்திப் பெருக்கத்துக்கோ, சந்தையில் விற்பனை விலை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளவோ  பயன்பட்டதா என்றால் இல்லை.

போதாக்குறைக்கு, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், முறையாகத் திட்டமிடப்படாமல், எல்லோருக்கும் பணப்பட்டுவாடா செய்யும் திட்டமாகிவிட்டதால், விவசாயத் தொழிலாளர்களை உழைக்காமல் சோம்பேறிகளாக்கி, உற்பத்தியைப் பல இடங்களில் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. வறட்சியான பகுதிகளில் மட்டுமே அமல்படுத்த வேண்டிய திட்டத்தை, வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய திட்டத்தை, விவசாய சாகுபடியைப் பாதிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.

விவசாயம் சார்ந்த இந்தியா போன்ற பொருளாதாரங்கள் ஒரேயடியாக விவசாயத்தைக் கைவிட்டு, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகத் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க முற்பட்டால், விவசாயமும் நலிந்து, ஏற்றுமதியும் வெற்றி பெறாமல் போய்விடும் என்பது கூடவா பொருளாதார மேதைகளால் நடத்தப்படும் நமது மத்திய அரசுக்குத் தெரியவில்லை? வேடிக்கையாக இருக்கிறது.

விவசாயிகள் உணவு உற்பத்திப் பெருக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட உதவும் வகையில் நமது அரசு ஊக்கமளித்தால் ஒழிய இந்த நிலைமைக்கு விடிவுகாலம் இல்லை என்றே தோன்றுகிறது. தொழில்துறை வளர்ச்சியில் காட்டும் ஆர்வத்தை விவசாய வளர்ச்சியில் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் செய்யாமல் போனால், உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

100 கோடி மக்கள் வாழும் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை இறக்குமதி மூலம் ஈடுகட்ட முடியாது. பஞ்சமும் பட்டினியும் விபரீதங்களுக்கு வழிகோலும் என்று அரசை எச்சரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
        
 நன்றி: www.dinamani.com  31-MAY-2010 

Wednesday, May 19, 2010

தலையங்கம்: சிங்கப்பூர் சொல்லும் பாடம்!

கடந்த வாரம் வெள்ளி,​​ சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் டின்டேல் பல்கலைக்கழகமும்,​​ நமது ஊர் கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் ​ நடத்தின.​ இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கத் தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.​ கருத்தரங்கின் விவாதப் பொருள் "வாழ்வியலில் இலக்கியம்'.

வந்திருந்த தமிழறிஞர்களான பேராசிரியர்கள் பலர்,​​ இலக்கியம் மிகவும் நீர்த்துப்போய்,​​ புதினங்கள்,​​ சிறுகதைகள்,​​ மரபுக் கவிதைகள்,​​ எல்லாமே சிதைந்து நீர்த்துப் போய்விட்டதாக வருத்தப்பட்டனர்.​ சிறுகதைகள் என்பது ஒரு பக்கக் கதைகள் என்றாகி,​​ போஸ்ட் கார்ட் கதைகள்,​​ ஸ்டாம்புக் கதைகள் என்றாகிவிட்டது என்று ஆதங்கப்பட்டனர் பலர்.​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ பெருவாரியான தமிழறிஞர்களின் மனவேதனை தமிழ் படிப்பதே பயனற்ற ஒன்று என்கிற எண்ணப் போக்கு பெற்றோர்களுக்கும்,​​ மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதாக இருந்தது.​ ​

பன்னாட்டுக் கருத்தரங்குக்கு வெளிநாட்டில் கூடியிருந்த தமிழறிஞர்கள்,​​ பெருவாரியான தமிழகத்தின் மூத்த தலைமுறையினர் தங்களது மனதிற்குள் வெம்பி வெதும்பும் பிரச்னையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.​ "தமிழ் படிப்பதால் வேலை கிடைக்குமா?',​ "தமிழ் படிக்காவிட்டாலோ,​​ தமிழ் மொழி இல்லாமல் போனாலோ என்ன குடியா முழுகிவிடும்?',​ "மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவிதானே தவிர,​​ அதற்குமேல் முக்கியத்துவம் தரப்படும் அம்சமாக நாங்கள் கருதவில்லை' என்றும் பலர் குரலெழுப்பி வேதனைத் தீயில் நெய் வார்க்கவும் முற்படுகின்றனர்.

மேலே சொன்ன கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் அனைவருமே தாங்களோ,​​ தங்களது குழந்தைகளோ படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவிலோ,​​ வேறு வெளிநாடுகளிலோ வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் என்பதுதான் உண்மை.​ இவர்கள் தெரிந்து கொள்ள மறுக்கும் ஒரு முக்கியமான விஷயம்,​​ மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும்,​​ அப்படி அடையாளம் இல்லாமல் இருப்பவன் ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டும்கெட்டான் நிலையில் தத்தளிக்க நேரிடும் என்பதையும்!

பன்னாட்டுக் கருத்தரங்கில் மேலே சொன்ன சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,​​ வெளியே சிங்கப்பூர் தெருக்களில் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்து,​​ சிங்கப்பூர் அரசு மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தும் விட்டிருப்பது பலருக்கும் தெரியாது.​ சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் நெக் எங்க் ஹென் ஒரு பத்திரிகைப் பேட்டியில்,​​ அடிப்படைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று வாய்தவறி உளறி மாட்டிக்கொண்டு,​​ கடைசியில் வெகுண்டெழுந்த சீன மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன்,​​ தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் எள்ளளவும் குறைக்கப்படாது என்று பிரதமர் லீ சீன் லூங்கே உறுதி அளிக்க வேண்டி வந்திருக்கிறது.

சிங்கப்பூர் நகரிலுள்ள "ஹுங்க் லிம் பார்க்' என்கிற இடத்தில் பேச்சாளர் மூலை என்றொரு இடம் இருக்கிறது.​ இங்கே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைப் பேசலாம்.​ வழக்கத்துக்கு விரோதமாக இந்தப் பூங்காவில் சீனர்கள் குவிந்து விட்டனர்.​ அரசின் முடிவுக்கு எதிராகப் பெற்றோர்கள் குரலெழுப்பி தங்களது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.​ இங்கே கூடிய சீனர்கள் வயதான கிழவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்.​ கோட்டும் சூட்டும் அணிந்த இளைஞர்கள்தான் பெருவாரியானவர்கள்.​ இவர்கள் அனைவருமே நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள்.​ படித்தவர்கள்.

சீனர்கள் மட்டுமல்ல,​​ மலாயர்களும் சரி,​​ தங்களது தாய்மொழிக்குப் பாடத்திட்டத்தில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.​ இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்தவர்கள் நமது இந்தியர்கள் மட்டுமே என்பதுதான் வருத்தமான ஒன்று.

சீனர்களைப் பொறுத்தவரை,​​ அவர்களுக்கு மொழி,​​ அதிலும் குறிப்பாகத் தாய்மொழிப் பற்று என்பது மிகவும் முக்கியமானது.​ தாய்மொழியில் எழுதவும்,​​ பேசவும் தெரியாத சீனர்கள் இருக்கவே மாட்டார்கள்.​ நாகரிகத்தின் அடையாளமாக,​​ சீனமொழியில் எழுதத் தெரிவது கருதப்படுகிறது.​ ஆங்கிலம் படிப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம் சீன மொழியில் எழுதவும்,​​ பேசவும்,​​ படிக்கவும் தரப்படுகிறது.​ உலகம் முழுவதும் எங்கெல்லாம் சீனர்கள் வாழ்கிறார்களோ,​​ அங்கெல்லாம் சீனமொழியைக் கற்றுத்தரப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு,​​ அதற்கு சீன அரசு மானியம் வழங்கி உதவுகிறது.

பலருக்கும் தெரியாத இன்னோர் உண்மை என்ன தெரியுமா?​ சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும்,​​ பிரதமர் வென் ஜியாபோவும் அமெரிக்கக் கல்வி கற்றவர்கள்.​ நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள்.​ ஆனால் அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு சீன மொழியில்தான் பேசுவார்களே தவிர ஆங்கிலத்தில் அல்ல.​ அவர்கள் மட்டுமல்ல,​​ ஜப்பான் பிரதமர்,​​ ஜெர்மானிய அதிபர்,​​ ரஷிய அதிபர்,​​ பிரெஞ்சு அதிபர் என்று ஆங்கிலம் தாய்மொழியல்லாத நாடுகளின் தலைவர்கள் பலர் அவரவர் மொழியில் மட்டுமேதான் கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறார்கள்.

சிங்கப்பூருக்கே வருவோம்.​ சீனர்களும் மலாயர்களும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்லர்.​ ஆங்கிலம் படிக்க வேண்டும்,​​ உலகத்தவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது.​ அதேசமயம் தங்களது தாய்மொழி முக்கியத்துவம் இழந்துவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.​ தங்கள் குழந்தைகள் தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர,​​ தாய்மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.​ கண்டிப்பாக வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுவதை பழக்கப்படுத்துகிறார்கள்.

நம்மைப் போலவே இருமொழிக் கொள்கை உள்ள சிங்கப்பூரில்,​​ எட்டாம் வகுப்புவரை கட்டாயமாகத் தாய்மொழிப் பயிற்சி வேண்டும் என்று குரலெழுப்பியது பெற்றோர்கள்.​ இங்கே தமிழகத்தின் சிபிஎஸ்இயோ,​​ மெட்ரிகுலேஷனோ,​​ மாநிலக் கல்வி முறையோ தாய்மொழியில் கட்டாயப் புலமை வேண்டும் என்று குரலெழுப்புவது இருக்கட்டும்.​ குழந்தைகள் தமிழில் பேசுவதே கௌரவக் குறைவு,​​ அவமானம் என்று கருதும் பெற்றோர்கள் அல்லவா அதிகம்.

பேச்சு வழக்கு ஒழிந்து விட்டால்,​​ எழுத்துக்கு ஏது இடம்?​ எழுத்து இல்லாமல் எங்கே இலக்கியம்?​ இலக்கியமே இல்லை எனும்போது வாழ்வியலில் இலக்கியம் கேலிப்பொருளாகி விடுமே...​ நமது அன்னிய மோகம்,​​ சிங்கப்பூர் சீனர் மற்றும் மலாயர்களைப் பார்த்து மொழிஅடையாளத்தின் இன்றியமையாமையைக் கற்றுக் கொடுக்கக் கூடாதா?

தமிழைக் காப்பாற்ற சிங்கப்பூரை உதாரணம் காட்ட வேண்டி இருக்கிறது...​ ஹும்...

நன்றி: www.dinamani.com  19-MAY-2010 
            

Monday, May 10, 2010

ஏரிப்படுகையா, ரியல் எஸ்டேட்டா?


முன்னொரு காலத்தில் மும்பை நகர் ஓர் அழகிய மாங்குரோவ் வனமாக விளங்கியதாம். மும்பையின் வரலாறைத் தக்க ஆவணங்களை அடிப்படையாக வைத்து எழுதிய ஜகதீஷ்காந்தி, ஒரு வரலாற்று ஆய்வாளர் மட்டுமல்ல; மும்பை மெட்ரோபாலிட்டன் ரீஜன் டெவலப்மெண்டை எதிர்த்து ஒரு பொது நடவடிக்கை தொடுத்தவர். ஆங்காங்கே பல்வேறு தடுப்புகளால் காணாமல் போயிருந்த மைத்தி நதியை மீட்டவர். அத்தோடு, மும்பையில் வெள்ளநீர் விரைவில் வடிவதற்கும் அவர் வழி செய்தார். இந்த விஷயம் மாநகர்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மாளிகைகள் எழுப்பும் ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் மாநில அரசுகளுக்கும் ரயில்வே நிர்வாகத்துக்கும் பாடமாக விளங்கும்.

மராட்டிய மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மும்பையில் பிரிட்டிஷார் ஆட்சியின்போது கூட வனப்பகுதிகள் பாதிக்கப்படவில்லையாம். மலபார்ஹில்ஸ், கம்பாலிஹில்ஸ், சீவரி வனங்கள் நன்கு நிர்வகிக்கப்பட்டனவாம். மைத்தி ஆறு அதன் போக்கில் விடப்பட்டிருந்தது. மைத்தி நதியின் போக்கு மெட்ரோ பாலிட்டன் ரயில்வே ஆக்கிரமிப்பு காரணமாகத்  தடைப்பட்டதால் நகரில் பெருமழை பெய்தபோது வெள்ளம் சூழ்ந்தது.

மைத்தி நதியின்  தடைகளை எவ்வாறு ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ஜகதீஷ் காந்தி யதேச்சையாகக் கண்டுபிடித்தார். 26-7-2005-ல் மும்பையில் வரலாறு காணாத மழை. மும்பை நகர் மிதந்தபோது இடையில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பல்லாயிரம் மக்களில் இவரும் ஒருவர்.

சயான் ரயில்வே நிலைய மேம்பாலத்தில் இரவைக் கழித்துவிட்டுக் காலை 4 மணி சுமாருக்கு ரயில்வே பிளாட்பார்முக்கு வந்தால் பிளாட்பாரமே கண்டுபிடிக்க முடியாதபடி நீரில் மூழ்கியிருந்தது. இந்த லட்சணத்தில் மும்பையில் அண்டர் கிரவுண்ட் ரயில் விடும் திட்டம் உள்ளதை நினைத்துப் பதைத்துப் போனார். அப்பர் கிரவுண்ட் ரயில்வேயிலேயே பிளாட்பாரமே மூழ்கிவிட்டது. அண்டர் கிரவுண்ட் என்றால் வெள்ளத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி அல்லவா ஏற்படும் என்று சிந்தித்தார். அப்போது அவருக்கு, வேறு ஏதோ குறை இதில் உள்ளதென்று பொறி தட்டியது.

மறுநாள் வெள்ளத்துக்குக் காரணம் மைத்தி நதி என்று அதிகாரிகள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து பழைய தஸ்தாவேஜுகளைக் கொண்டு மைத்தி நதியின் போக்கைக் கண்டுபிடித்தார். இந்திய ரயில்வேயின் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்தார். பிரிட்டிஷார் காலத்து ரயில்வே பாலங்களில் இடைவெளி 600 - 700 மீட்டர் வரை விடப்பட்டு வெள்ளநீர் ஸ்டேஷனுக்குள் வராமல் மைத்தி நதி அதன்போக்கில் விடப்பட்டிருந்தது. ஆனால் இன்றுள்ள இந்திய அரசாட்சியில் ரயில்பால இடைவெளி 40 மீட்டராகக் குறைக்கப்பட்டு மைத்தி தடைப்பட்ட விவரம் அவருக்குப் புரிந்தது. வரலாறு - நில அளவை ஆவணங்களுடன் நீதிமன்றத்தை நாடி வெற்றியும் பெற்றுள்ளார் . ரயில்வே மட்டுமல்ல, விமான நிலையமும் மைத்தியை ஆக்கிரமித்துப் பல இடங்களில் நதியின் போக்கைத் திருப்பியுள்ளதையும் காந்தி குறிப்பிடத் தவறவில்லை. மும்பையில் மைத்தி நதி ஆக்கிரமிப்பு சந்திசிரித்த பின்பு இப்போது ஓரளவு நதியின் போக்கு சரிசெய்யப்பட்டுள்ளது. இங்கு சென்னை மட்டும் ஆக்கிரமிப்புக்கு விதிவிலக்கா - என்ன?

மும்பையைப் போலவே சென்னை நகரமானது பிரிட்டிஷ் ஆட்சியின்போது எழில்மிகு நகரமாயிருந்தது. நுங்கம்பாக்கம் ஏரி, கோடம்பாக்கம் ஏரி, மேற்கு மாம்பலம் ஏரி ஆகியவை இருந்தன. அடையாறு சுத்தமாயிருந்தது. கூவம் நதியில் வண்ணாந்துறை இருந்தது. சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு பகுதிகளில் ஏராளமாக மரங்கள் இருந்து, அடையாறின் இருமருங்கும் இயற்கையால் சூழப்பட்டிருந்தது. படகு சவாரி நிகழ்ந்தது. வடசென்னையை எடுத்துக்கொண்டால் பக்கிங்காம் கால்வாயை ஒரு குட்டி தேம்ஸ் நதிபோல் பிரிட்டிஷ் அரசு உருவாக்கி படகு வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து சரக்கு வணிகம் நிகழ்ந்தது. அன்று பூங்கா நகரில் மிகப் பெரிய பூங்கா இருந்தது. பூங்காவை ஒட்டி நீச்சல் குளம், உயிரியல் பூங்கா வனம் ஆகியவை பழைய மூர்மார்க்கெட்டின் பின் பகுதி சென்னை நகரின் எழிலைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

இப்படியெல்லாம் இயற்கையின் சூழலில் சென்னை மாநகரம் இருந்ததை இன்றுள்ள தலைமுறை அறிய வாய்ப்பில்லை. அந்த அளவில் சென்னையிலும் மெட்ரோபாலிட்டன் இருப்புப்பாதை அமைப்புகளும் சென்ட்ரல் ரயில்வேயின் விஸ்தரிப்பு மாளிகைகளும் வனங்களைத் தின்றுவிட்டன. தினமும் டன் கணக்கில் ஆக்சிஜன் உற்பத்திக் கணக்கு நின்றுபோய் இன்று தினமும் அங்கு டன் கணக்கில் கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தி மட்டுமே உள்ளது.

இந்தியா விடுதலையாவதற்கு முன்பு - 1946-47-ம் ஆண்டு நிலஅளவைப் பதிவுகளில் உள்ள கணக்குப்படி விளங்கிய அரசுக்குச் சொந்தமான ஏரிநிலம், ஆயக்கட்டுப் பகுதி, நீர்வரத்துக் கால்வாய்கள் புறம்போக்கு நத்தம் ஆகியவற்றை இன்று 2010-ல் உள்ள கணக்கோடு ஒப்பிட்டால் ஏரிப்படுகைகள் எப்படி ரியல் எஸ்டேட் ஆயிற்று என்பது விளங்கும். 

இந்திய விடுதலைக்குப் பின்பு நீர்நிலைப் பகுதிகள் புறம்போக்காயிருந்தன. பின்னர் பட்டாநிலமாக மாறியுள்ளன. காந்திகிராமம், சின்னாளப்பட்டி போன்ற சிறு ஊர்களில்கூட ஏரிப்படுகைகள் மீது திருமகள் காலனி, திரு.வி.க. காலனி, அந்த நகர், இந்த நகர் என்றெல்லாம் புதிய பெயர் சூட்டப்பட்டு மரங்களும், ஏரிகளும் இருந்த இடத்தில் கட்டடங்கள் தோன்றியுள்ளன.

சென்னை நகரின் புறநகர்ப்பகுதி, இந்த விஷயத்தில் முதல் பரிசு பெறும் தகுதி உள்ளது. முன்பெல்லாம் மாம்பலத்துக்குத் தெற்கேயும், பெரம்பூருக்குத் தெற்கேயும் உள்ள ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன் உள்ள இடங்களிலும் ஏரிகள் இருந்தன. பழவன்தாங்கல் என்ற பெயரில் தாங்கல் என்பது ஏரிக்குள்ள மறுபெயர். பழவன்தாங்கல் ஏரியால் நெல் விளைந்த பூமி இது. 

அங்கும் ஏரிகள் உண்டு. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற எல்லா ஊர்களிலும் ஏரிகள் உண்டு. இப்போது ஏரிகள் இல்லை. ஏரிகள் மீது கட்டடங்கள் வந்துள்ளன. வடிகால்கள் தூர்ந்துவிட்டன. மழைநீர் வடியாமல் இன்றும் சென்னை புறநகர்ப் பகுதியில் பெருமழை பெய்தால் வெள்ளம் சூழ்ந்து ஓடாமல் நிற்பதைப் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் ஆண்ட காலகட்டத்திலும் பின்னர் 1946-47 காலகட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளங்கள் இருந்தன. ஒருசில கிராமங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏரிகள் இருந்தன. சிறிய ஏரிகள், சிறிய குளம், குட்டைகள் காலப்போக்கில் வறண்டும் தூர்ந்தும் போனதால் புறம்போக்கு நிலமாக மாறியது.

பல லட்சக்கணக்கான நீர்நிலைகள் மீது இன்று குடியிருப்புகளும் கட்டடங்களும் எழும்பியுள்ளன. சென்னை மட்டுமல்ல; வளர்ந்துவரும் சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி என்ற எல்லா மாவட்டத் தலைநகரங்கள் மட்டுமல்ல; வட்ட, வட்டாரங்களிலும் அதேநிலை. தமிழ்நாட்டில் விவசாயம் செய்தவர்களில் பலர் நிலத்தை விற்றுவிட்டு நிலத்தரகர்களாக மாறிவிட்டார்கள். நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டால் மிகவும் கௌரவமாக ""ஐயா, ரியல் எஸ்டேட்?'' செய்கிறேன் என்பார். "தரகு' என்றால் அவ்வளவு கௌரவமாக இல்லையே!

விவசாயத்தை ஊக்குவிக்கும் அளவில் விளைபொருள்களுக்கு விலை இல்லை. ஏற்றுமதி நோக்கில் விவசாயம் திசை திரும்பிவிட்டது. விவசாயத்துக்குத்தான் மதிப்பு இல்லை. விவசாய நிலத்துக்குரிய மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு ஏறிவிட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மானாவாரி நிலம் மிகவும் வறண்ட பூமி ரூ. 26,000-க்கு விற்ற நிலை மாறி 5 லட்சம், 6 லட்சம் என்று ஏக்கர் விலை உயர்ந்து வருகிறது.

அன்று 5 லட்சம் விற்ற நிலம் இன்று 20 லட்சம், 30 லட்சம் என்று விலைபோகிறது. வறண்ட ஏரிப்படுகையுடன் ஒட்டிய மானாவாரியில் - குறிப்பாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பருத்தி, துவரை, உளுந்து, பயறு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி என்று பயிர் செய்வார்கள்.

சுமார் 40 ஆண்டுகள் கழித்து முன்பு பருத்தியும், பருப்பும், புஞ்சைதானியங்களும் பயிரான அதே நிலங்களில் இன்று கட்டடங்கள் வந்துவிட்டன. சில ஊர்களில் விளைநிலங்கள்   புதிய பேருந்து நிலையமாகியுள்ளது. மிச்சம்மீதியுள்ள நிலங்களில் பசுமையைக் காணோம். அங்கு கல் ஊன்றப்பட்டு ""ப்ளாட் ஃபார் சேல்'' ஆகிவிட்டது.

ஏரிப்படுகை மனைக்கட்டாகும் நிலையை என் சொந்த அனுபவமே எடுத்துக்காட்டும். இரண்டாண்டுகளாகப் போராடி ஒரு குளத்தை மீட்டுள்ளேன். திண்டுக்கல்லில் இருந்து  ஆத்தூர் செல்லும் வழியில் 13-வது கி.மீ. தூரத்தில் சீவல்சருகு கிராமத்தில் நான் புதிதாக  நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறேன். எனது நிலத்துக்கு மேற்கே டொம்பன்குளம் என்ற குளம் உள்ளது. எனது நிலம் டொம்பன்குள நீர்ப்பாசனத்துக்கு உள்பட்டது என்று சான்று உள்ளது. ஆனால், டொம்பன்குளம் நிரம்பி 20, 30 ஆண்டாகிறது. நீர்வரத்துப் பகுதியில் ஆக்கிரமிப்புள்ளது.

சமீபத்தில் குடிசை போட்டுக் கட்சிக் கொடியையும் நட்டுள்ளனர். 100 ஏக்கர் நிலத்தில் உள்ள இக்குளம் எவ்வளவு மழை வந்தாலும் நிரம்பாது. மழை வெள்ளத்தை குடவனாறுக்குத் திருப்பி விட்டுவிடுவார்கள். நான் இரண்டாண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியும் பலன் இல்லை.

கடைசிபட்சமாக, முதலமைச்சருக்கு மனுச் செய்ததில் பலன் கிட்டியது. எனது கோரிக்கை ஏற்கப்பட்டு டொம்பன்குளத்தை நிரப்ப 5 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட்டார அலுவலர் முதலமைச்சருக்கு எழுதி எனக்கும் ஒரு நகல் அனுப்பியுள்ளார். பொதுவாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உள்ளூர் மக்கள் பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. விவசாயம் செய்யும் ஆர்வமே இல்லாததும் ஒரு காரணம்.

நஞ்சை நிலங்களை எடுத்துக்கொண்டால், நெல், கரும்பு, வாழை பயிரிட்ட இடங்களில் இப்போது மூங்கில், தேக்கு, மலைவேம்பு, முகிழ் மரம் என்று மரசாகுபடி நிகழ்கிறது. ஏன் என்று கேட்டால், விறகு 1 டன் விற்றால் ரூ. 2,000 கிடைக்கிறது.

லாபகரமான விவசாயம் மரசாகுபடி என்று பலர் முடிவுக்கு வந்துவிட்டதால் இனி எதிர்காலத்தில் கோதுமை, அரிசியை மறந்துவிட்டு மரத்தைப் பொடியாக்கி மரக்கூழ் குடித்துப் பசியாறும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

நன்றி: www.dinamani.com - 10-MAY-2010