I LOVE TAMIL


Saturday, July 31, 2010

வாசிப்போம்... சாதிப்போம்...!


நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின்.  

 நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.  

காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 

 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.  

இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். 

 ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி  அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.   

 நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.  

உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.  

நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். 

 ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன். 

அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை. 

 புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள். 

 இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது.  

புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.  

உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!  

 நன்றி: www.dinamani.com -   31 Jul 2010
 

தலையங்கம்: வயிற்றில் அடிக்கிறார்களே..

வெறும் ஆண்டு வருமானத்தை வைத்து ஒருவரை ஏழை என்று முடிவுகட்டும் நடைமுறை ஒருபக்கம் இருந்தாலும், பொதுவான வசதிகளை ஒருவர் பெற்றிருக்கிறாரா என்பதைப் பொறுத்து, அவர் ஏழை என்று கணிக்கும் வகைப்பாடும் நடைமுறையில் இருக்கிறது. இதனடிப்படையில் இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 42 கோடி! இவர்களிடம் அதிகம் இல்லாதது சத்துணவு! சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவுப் பழக்கம் இல்லாமை அல்லது இயலாமை இவர்களது பொதுக்காரணி.  

ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் இத்தனை பேர் தவிக்கையில், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் விநியோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய்க் கிடக்கும் அரிசி, கோதுமை அளவு, ஜூலை 1-ம் தேதி கணக்கீட்டின்படி, மொத்தம் 11,708 டன் என்று தெரியவந்தால், இத்தகைய அக்கறையின்மையை என்னவென்று சொல்வது?

இதில் அதிகபட்சமாக, பஞ்சாபில் 7,066 டன், மேற்கு வங்கத்தில் 1,846 டன், பிகாரில் 485 டன், குஜராத்தில் 1,457 டன், மகாராஷ்டரத்தில் 278 டன் தானியம் வீணாகிப்போனது. இதில் மிகக் குறைவான அளவு தானியத்தை வீணடித்த மாநிலங்கள் இரண்டுதான். ஆந்திரம் 6 டன், தமிழ்நாடு 1 டன். இதற்காக நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம். 

இந்தியாவில் தானியங்களை விளைநிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் மையத்துக்கு தானியத்தைக் கொண்டுசெல்லும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருக்கின்றன. இதனால், விளையும் தானியங்களில் 20 விழுக்காடும், அழுகும் காய்கனிகளில் 30 சதவீதமும் வழியிலேயே வீணாகிப் போகின்றன என்கிறார் வேளாண்மை ஆர்வலர் மோகன் தாரியா. இந்த நிலைமைகளையும் தாண்டித்தான், உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகக் கிடங்குகளுக்கு வருகின்றன. அதையும் சரியாகப் பாதுகாக்காமல் வீணடித்தால் நெஞ்சு பொறுக்குதில்லை. 

இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் இந்திய உணவுக் கழக அதிகாரிகள்தான். தானியங்களை முறையாக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடுக்கி வைக்காமலும், திறந்தவெளியில் அடுக்கி வைத்தும் தானியங்களைப் பாழ்படுத்திய  இந்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? 

தானியங்களைப் பாதுகாக்கப் போதுமான கிடங்குகளை சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது யாருடைய குற்றம்? உலகத் தரத்திலான விமான நிலையங்கள், மோட்டார் வாகனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வளாகங்கள், சாலைகள் என்று பெருமை பேசும் நாம், உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாக்கவும் சேமிக்கவும் தரமான கிடங்குகளையும் குளிர்பதனக்கூடங்களையும் அமைக்காமல் இருக்கிறோமே, ஏன்? 

நாட்டில் ஓர் இடத்தில் மழை பொய்த்தாலும், இன்னொரு பகுதியின் விளைச்சலைக் கொண்டுபோய்ச் சேர்த்து, பஞ்சத்தைப் போக்கிவிட முடியும் என்பதால் இனி பஞ்சமே வராது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. இதைச் சாத்தியமாக்க உருவான இந்திய உணவுக் கழகம், தானியத்தை வீணடித்துக் கொண்டிருப்பது தொடர்பாக உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு தானியம் வீணாகிப் போனது என்பதை உணவுக் கழகத்தின் மூலம் அறியவந்த நீதிபதிகள் கொதிப்படைந்துவிட்டனர். "சாப்பிட வழியில்லாத ஏழைகள் வாழும் இந்த நாட்டில் ஒரேயொரு மணி தானியம் வீணாவதும்கூட குற்றமாகும்' என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தானியங்களைக் கெட்டுப்போகிற வரை வைத்திருக்காமல், தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய உணவுக் கழகத்தின் ஊழலும், சிதறிப்போகும் தானியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால், ஏன் அனைத்து நடைமுறையையும் கணினிமயமாக்குதல் கூடாது என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். 

இந்த தானியங்கள் எதற்காக பல கிடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டும்? உணவுக் கழக கிடங்கிலிருந்து நேரடியாக பொதுவிநியோக மையத்துக்கு அளிக்கும் முறையை உருவாக்கினால் என்ன என்றும்கூட நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இவ்வாறு பல கிடங்குகளுக்கு மாற்றுவதன் நோக்கமே அரசியல் பின்புலம் உள்ளவர்களின் லாரிகளுக்கு வாடகை கொடுப்பதற்கே என்பது ஊர் அறிந்த ரகசியம். 

சேமித்து வைக்க இடம் போதவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், தனியார் இடங்களை வாடகைக்கு அமர்த்தவும் இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் செய்வதில்லை. தானிய மூட்டைகளில் பொத்தல் போட்டு ஒவ்வொன்றிலும் கொஞ்சம் தானியத்தைப் பிரித்தெடுத்து, விற்றுக் காசு பார்க்கும் கூட்டம் உணவுக் கழகத்தில் இருப்பதால், தானியம் கெட்டுப்போனால்தான் இவற்றையெல்லாம் மூடி மறைக்க முடியும். 

இந்தியாவில் பல கோடி ஏழைகளின் வீட்டுக்குப் போக வேண்டிய தானியத்தை தங்கள் சுயநலத்துக்காக ஏமாற்றி வெளியே கொண்டுபோய் விற்கிறோம் என்றோ, இவை கெட்டுப்போய், நியாயவிலைக்கடைகள் மூலம் கிடைக்கும் நேரத்தில் உண்ணவும் தகுதியில்லாததாக மாறுகிறது என்கின்ற எண்ணமோ இல்லாத அளவுக்கு இவர்கள் மனம் ஊழலாலும் அதிகார மமதையாலும் மரத்துப்போய்விட்டது.   

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?- என்கிறான் மகாகவி பாரதி. இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தின் எச்சம்தானே!

 நன்றி: www.dinamani.com -   31 Jul 2010

Tuesday, July 27, 2010

தலையங்கம்: பயமல்ல... நிஜம்!

பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?

இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்? 

இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. 

சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார். 

இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது. 

இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது. 

மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை. 

புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக  நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது. 

சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே. 

"எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி- 

உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா? 

நன்றி: www.dinamani.com -   27 Jul 2010


Monday, July 26, 2010

தகுதிச் சுற்றிலேயே தள்ளாட்டம்!


உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தை ஒரு மாத காலம் ஈர்த்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 4.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறிய நாடான ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

1920-ம் ஆண்டு கால்பந்து விளையாட ஆரம்பித்த ஸ்பெயின், 1934-ம் ஆண்டு முதன்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. அதன்பிறகு 10 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற ஸ்பெயினால் கோப்பையை வெல்லமுடியவில்லை.  

இருப்பினும் தொடர்ந்து முயற்சித்த ஸ்பெயின், 2010 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனது. உலகக் கோப்பையில் பங்கேற்க ஆரம்பித்து 75 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்று நீண்டகாலக் கனவை நனவாக்கியுள்ளது. 

உலகக் கோப்பை போட்டியில் முதல் ஆட்டத்தை தோல்வியில் துவங்கினாலும், இறுதி ஆட்டத்தை வெற்றியில் முடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின். முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் தோற்றபோது ஸ்பெயின் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானார் கேப்டனும், கோல்கீப்பருமான இகர் காஸில்லஸ்.   

அதன்பிறகு நடைபெற்ற எல்லா ஆட்டங்களிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது ஸ்பெயின். பெரிய அளவில் கோல்களை அடிக்காவிட்டாலும், எதிரணிகளை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது தான் ஸ்பெயினுடைய வெற்றியின் ரகசியம். 

உலகக் கோப்பையில் லீக் சுற்றில் சிலிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றிபெற்றது ஸ்பெயின். முதலில் விமர்சனத்துக்குள்ளான கேப்டன் காஸில்லஸ் கோப்பையைக் கைப்பற்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரின் கடும் போராட்டத்துக்குக் கிடைத்ததுதான் சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருது.   

உலகக் கோப்பையில் சாம்பியனாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்பெயினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிக்காமல் இருக்க முடியாது. ஸ்பெயினை பாராட்டும் அதேநேரத்தில் கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் நிலையை நினைத்தால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழியில்லை. 

உலகின் மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் நாடுகள் எல்லாம் உலகக் கோப்பை கால்பந்தில் ஜொலிக்கின்றன. ஆனால் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் இந்தியாவோ தகுதிச்சுற்றிலேயே தள்ளாடுகிறது. கால்பந்து விளையாட ஆரம்பித்து 60 ஆண்டுகளைக் கடந்தபோதும் ஒருமுறைகூட உலகக் கோப்பையில் பங்கேற்றதில்லை என்பது வேதனைக்குரியது.  

1948-ம் ஆண்டு முதல் கால்பந்து விளையாடிவரும் இந்திய அணி, 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் முதன்முறையாக விளையாடத் தகுதிபெற்றது. ஆனால் காலணி (ஷூ) இல்லாமல் விளையாடுவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) தடைவிதித்ததாலும், பிரேசிலுக்கு செல்வதற்கான பயணச் செலவுகள் அதிகம் என்பதாலும் இந்தியா உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. 

1954-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாட பிஃபா தடை விதித்தது. அதன்பிறகு 1958 முதல் 1982 வரை இந்தியா போட்டிகளில் பங்கேற்கவில்லை. 1986 முதல் 2010 வரை 24 ஆண்டுகளாகப் பங்கேற்று வரும் இந்திய கால்பந்து அணியால் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறமுடியவில்லை.  

2010 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் உலகின் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 205 நாடுகள் பங்கேற்றன. ஆசியக் கண்டத்திலிருந்து இந்தியா உள்பட 43 நாடுகள் பங்கேற்றன. 

உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்ற 32 அணிகளில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவை ஜப்பான், வடகொரியா, தென்கொரியா அணிகள் மட்டுமே.  

இந்திய கால்பந்து அணியில் இப்போதைய கேப்டன் பாய்ச்சுங் பூட்டியாவைத் தவிர மற்ற வீரர்கள் யார் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. உலகக் கோப்பையில்தான் இப்படி என்றால் ஆசியக் கோப்பையிலோ அதைவிட மோசம். 

1960 முதல் பங்கேற்று வரும் இந்திய அணி, 1964, 1984-ம் ஆண்டுகளில் மட்டுமே விளையாடத் தகுதிபெற்றது. 1964-ல் இரண்டாம் இடத்தைப்பெற்ற இந்திய அணி, 1984-ல் முதல் சுற்றிலேயே வெளியேறியது.  

உலகின் குட்டி நாடுகள் எல்லாம் உலகக்கோப்பையில் ஜொலிக்கின்றன. இந்தியாவோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வீரர்களை உருவாக்கத் தரமான ஆடுகளங்கள், பயிற்சியாளர்கள் அவசியம். ஆனால் அவை இரண்டுமே இந்தியாவில் இல்லை என்பது மிகப்பெரிய குறை. 

நம்முடைய விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களோ விளையாட்டைப் பற்றியோ, வீரர்களைப் பற்றியோ, மைதானங்கள் பற்றியோ கண்டுகொண்டதாகவோ, கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளப்  போராடும் விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களுக்கு விளையாட்டைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஏது?

விளையாட்டு அமைப்புகளும், பயிற்சியாளர்களும் கவனம் செலுத்தாத வரையில் கால்பந்து விளையாட்டில் கோப்பை என்பது இந்தியாவுக்குக் கானல் நீர்தான். 

  நன்றி: www.dinamani.com -   22 Jul 2010

Monday, July 19, 2010

விவசாய அழிவுக்கே விரிவாக்கத் திட்டம்

ஆர்.எஸ். நாராயணன்

இந்தியாவின் ஒட்டுமொத்த வருமான மதிப்பு உயர்கிறது. ஆனால், ஆண்டுக்காண்டு விவசாயம் வழங்கும் வருமான மதிப்பு இறங்கிக் கொண்டே போகிறது. இன்றல்ல, நேற்றல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பே விவசாய வருமான மதிப்பு இறங்கிவிட்டது.

ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பிக்கும்போது நமது நிதி அமைச்சர்கள் இதை ஒரு புதிய விஷயமாக ஓராண்டுக்கு முன் நிகழ்ந்ததாக முகமன் கூறி, இனி விவசாய வருமானத்தை உயர்த்த இந்தத் துறையில் இப்படி இப்படிப் பணம் ஒதுக்குவதாகச் சொல்வதுண்டு.

விவசாயத்தைப் பொறுத்தவரை பட்ஜெட் கூட்டம் என்பது ஒரு திதி. அப்பா சிரார்த்தத்தை மத்திய அரசு செய்யும். அம்மாக்களின் சிரார்த்தத்தை மாநில அரசுகள் செய்யும். விவசாய வளர்ச்சி என்பது இவ்வாறு விவசாய நினைவாஞ்சலிகளாக மாறிவிட்டது.  2010-2011 பட்ஜெட்டில் விவசாய உற்பத்திக்கு வழக்கம்போல் முதலிடம் உண்டு.

 நிதியமைச்சரின் கூற்றுப்படி, ""பசுமைப்புரட்சி ஆழமாக வேர்விடாத ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமைப்புரட்சியை உருவாக்க ரூ. 400 கோடி ஒதுக்கப்படுகிறது. பருப்பு உற்பத்தியைப் பெருக்கவும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை உயர்த்தவும் ரூ. 300 கோடி. ரூ. 3,75,000 கோடி விவசாயக் கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    மண்வள மீட்பு, மண் பாதுகாப்பு, பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பான வள மீட்புப் பண்ணை அமைப்புக்கு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு ரூ. 200 கோடி''.

2010 - 2011 -ல், இறந்துவிட்ட விவசாயத்துக்குரிய திதி நாளில் மதிப்புக்குரிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்படி வேதமந்திரங்களை மக்களவையில் ஓதியுள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் வீரபாண்டியார் தேவாரமாகவோ, திருவாசகமாகவோ பாடினார். சம்ஸ்கிருதத்தில் பாடினால் என்ன? தமிழில் பாடினால் என்ன? ஆண்டுதோறும் விவசாயத்துக்கு சங்கு ஊதும் நாடகம் தொடர்கிறது.

பசுமைப்புரட்சியின் எதிர்விளைவால் இழக்கப்பட்ட மண்வளப் பாதுகாப்பு என்ற பெயரில் பஞ்சாப், ஹரியாணாவுக்கு வழங்கப்படும் நிதி ரூ. 200 கோடி. பசுமைப்புரட்சியைப் புகுத்தி வடகிழக்குப் பகுதியில் மண்வளத்தை அழிக்க நிதி உதவி ரூ. 400 கோடி!  அதாவது, ஒரிசா, பிகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் புதிய பசுமைப்புரட்சி என்றால் மேலும் ரசாயன உரம், பி.ட்டி விதை விநியோகம், உயிர்க்கொல்லி புகுத்தப்படும். அப்பகுதிகளில்தான் பாரம்பரியங்கள் சற்று எஞ்சியுள்ளன. குறிப்பாகப் பல்லுயிர்ப்பெருக்க வளர்ச்சிக்காக அனைத்துலக நிதியில் இயங்கும் இங்குள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் தென்கிழக்குப்பகுதி கிராமங்களிலிருந்துதான் பாரம்பரிய விதைகளை வாங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. இனி இதற்கும் ஆபத்து இருக்கிறது. மண்வளத்தைக் காப்பாற்ற ரூ. 200 கோடி. மண்வளத்தை அழிக்க ரூ. 400 கோடி. விவசாயத்துக்கு திவசம் செய்யும் கடமை அமைச்சர்களுக்கு உள்ளபோது, அவர்களிடமிருந்து இப்படித்தான் எதிர்பார்க்க முடியும்.

ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு வரை விரிந்து பரந்துள்ள பீடபூமிப்பகுதிகளில் பருப்பும் எண்ணெய் வித்தும் உற்பத்தி உயர ரூ. 300 கோடி.

இந்த ரூ. 300 கோடியை 60 ஆயிரத்தால் வகுக்க வேண்டும். ஒரு கிராமத்துக்கு 5 லட்சம்  என்று வகுத்து 60,000 பயறு - பருப்பு - எண்ணெய் வித்து கிராமங்கள் உருவாகப் போகின்றன. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்? 2,000 முதல் 3,000 கிராமம் பயன் பெறலாம். எல்லாம் திட்டப்படி செயல்பட வேண்டும். செயல்திட்டம் தயாரானதாகத் தெரியவில்லை. சாதாரணமாக மத்திய அரசு வழங்கும் பணத்தை மாநிலம் வேறு செலவுக்குப் பயன்படுத்தலாம்.

விவசாயிகளுக்குக் கடன் ரூ. 3,75,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் ஒரு புதிய முதலீடு அல்ல. பெரும்பாலும் புக் அட்ஜஸ்ட்மெண்ட்தான். கடந்த ஆண்டு கடனை அடைக்கவே சரியாக இருக்கும். இது ஒரு வட்டிக்கடன். (மாதம் 1 சதவீதம்) நம் மக்கள் 5 வட்டி, 10 வட்டி என்று கடன் வாங்கியதை 1 வட்டியாக மாற்றிக்கொள்ள உதவும்.

தேச வருமானத்தில் விவசாய வருமானத்தின் பங்கு மிகவும் குறைந்துவிட்டது என்று குறைப்படும் திட்ட நிபுணர்களும், ஆட்சியாளர்களும் எந்த அளவுக்கு இத்துறைக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது என்று கணக்குப் பார்த்தால் உண்மை தெரியும். தொழில்துறை, சாலை மேம்பாடு என்று எடுத்துக்கொண்டால் ஆயிரங்கோடி, லட்சங்கோடி என்று பணம் செலவழிக்கப்படுகிறது.

விவசாயம் என்றால் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி என்ற அளவில்தான் பணம் ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பணமும் உருப்படியாக உற்பத்திக்கு உதவுவதாக இல்லை. அமைச்சர், கட்சித் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? யாரோ செலவழிப்பதற்கு யாரோ திட்டம் போடுவதால் பட்ஜெட் அறிவிப்பு பற்றி சீரியஸôக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நல்ல திட்டங்கள் விவசாயத்தில் மட்டுமல்ல; நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, நீர்வடிப்பகுதி மேம்பாடு என்ற திட்டங்களுக்கும் மாவட்டந்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.

உண்மையில், அப்படிப் புரளும் பணம் அதற்குரிய பணிகளுக்குச் செலவிடப்பட்டிருந்தால், நாடு செழித்திருக்கும். அப்பணிகளுக்கு அப்பணங்களைச் செலவு செய்ய மாவட்டங்களும் வட்டங்களும் தனிரூட் போட்டு கபளீகரம் செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவார்கள். திறந்த மனமுள்ள ஊழலுக்கு இடம் கொடுக்காத  நல்ல அதிகாரிகளும் அறிவார்கள்.

அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. ஆகவே, உள்ளூரில் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களை மானாவாரி பூமியில் விளைவிக்க வேண்டும் என்பது நல்ல கொள்கை. மானாவாரி பூமியில் நெல், கோதுமை, புஞ்சைத் தானியங்களையும் நன்கு திட்டமிட்டுப் பயிரிடலாம்.

மானாவாரியில் கிடைக்கும் நீரை உகந்த அளவில் பயன்படுத்த வேண்டுமே தவிர, மாபெரும் அணைக்கட்டுத் திட்டமெல்லாம் போட்டு மண்வளத்தைக் கெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஸ்ப்ரிங்க்ளர் அமைக்கலாம். ரைன்கன் அமைக்கவும் வழி செய்யலாம். முழு மானியம் வழங்கினால் ஸ்ப்ரிங்க்ளர், ரைன்கன் மூலம் உற்பத்தியை உயர்த்தலாம்.

பருப்புவகைப் பயிர்களையும் நேரடி விதைப்பாக நெல்லையும், பலவிதமான புஞ்சைத் தானியங்களையும் மானாவாரியில் பயிரிட்டு உற்பத்தியை உயர்த்தப் பல்லாயிரம் கோடி ரூபாய் விவசாயத்துக்கு ஒதுக்கிச் சரியான முறையில் செலவிட வேண்டும்.

அரிசி, கோதுமை, பருப்பு விலை உயர்ந்த அளவில் எண்ணெய் வித்துகளின் விலை உயரவில்லை. நிலக்கடலைப்பருப்பு, தேங்காய் விலைகள் மந்தமாயுள்ளன. தேங்காய் விலை 30 ஆண்டுக்கு முன் விற்ற விலைதான் இன்றும். திண்டுக்கல் அய்யம்பாளையம், சோழவந்தான் பகுதிகளில் விவசாயிகளுக்கு சராசரி ரூ. 2.50 என்ற விலைக்குத்தான் உரிக்காத தேங்காய்கள் இறக்கியவுடன் கிட்டுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் தேங்காயில் லாபம் எடுத்துத் தங்கள் குழந்தைகளை நகரங்களில் நல்ல படிப்புக்குச் செலவு செய்தார்கள். இன்று தென்னந்தோப்புகளையே விற்றுத்தான் படிப்புச் செலவும், மருத்துவச் செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பொதுவாக பருப்புகளாகட்டும் எண்ணெய்வித்துகளாகட்டும் அங்காடிகளில் அவற்றுக்குரிய லாபமான விலை கிடைத்தால் விவசாயிகளுக்கு எந்த உதவியும் தேவையில்லை. எவ்வளவுதான் அரசு திட்டங்கள் போட்டு பருப்பு - எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தி உயர்வுக்கு என்று பணம் செலவழித்தாலும்கூட உற்பத்தி உயராது. அங்காடியில் நல்ல விலைக்கு விவசாயிகளின் சரக்கு விலை போனால்தான் அந்த விவசாயி தாக்குப்பிடிப்பான்.

பணவீக்கத்தால் விலை உயர்கிறது. பணவீக்கம் என்பது நுகர்வோருக்கு மட்டும் பிரச்னை இல்லை. விவசாயிகளுக்கும் பிரச்னைதான்.

கடந்த முப்பது ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி உயரவும் சமையல் எண்ணெய்க்குரிய எண்ணெய் வித்து உற்பத்தி உயரவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏன் எந்தப் பயனும் இல்லாமல் போனது? மக்களை வாழ வைக்க வேண்டிய விவசாயம் நிலை தடுமாறிச் செல்கிறது.

மண்ணை விஷமாக்காமல் வளப்படுத்தி நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய விவசாயமே நோய்க்குறிகளுடன் காட்சியளிக்கிறது. விவசாயத்தை மேலும் நோயாக்க பசுமைப்புரட்சி கிழக்கு இந்தியாவுக்குப் புறப்படுகிறதாம். இது மேலும் அழிவுக்கு வழிகாட்டுவதாயுள்ளது.

இந்தியா முழுவதுமே மண் விஷமாகிவிட்டது. பஞ்சாப் - ஹரியாணாவில் மட்டுமே ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கும் பணி நிகழ்கிறதாம்! எல்லா இந்திய மாநிலங்களிலும் மண்வளப் பாதுகாப்புக்குரிய இயற்கை இடுபொருள் பயன்பாடுகளுக்கும், இயற்கைப் பூச்சி விரட்டி உற்பத்திப் பயன்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு மானியம் வழங்காமல் ரசாயன உரங்களுக்கும் விஷமான பூச்சி மருந்துக்கும் வழங்கப்படும் மானியங்கள் இறுதியில் விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடும் ஆபத்து உள்ளது.

நன்றி: www.dinamani.com - 15 Jul 2010 

           

         

Tuesday, July 6, 2010

காலத்திற்கு ஏற்ற உணவுகள்

கோடை காலத்தின் முழுமையான நிறைவாக, மழைக்காலத்தின் முன் துவக்கமாக ஆடி மாதம் உள்ளது. வெப்பத்தில் இருந்து குளிர்ச்சிக்கு என்பதே ஆடி மாதத்தின் பருவ நிலையாகும். எனவே வெப்பம் சார்ந்த நோய்கள், ஆடி மாதத்தில் தான் ஏற்படுகின்றன. வெப்பத்தில் இருந்து, மழைக்கு மாறும் போது மழைக்காலத்திற்கு ஏற்ப, தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. இந்த தகவமைப்பு  ஆடி மாதத்தில் தான் நடைபெறுகிறது. இந்த தகவமைப்பு காலத்தில் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்கும் பண்பு, உணவு வகைகளில் கேப்பைக்கும், முருங்கைக் கீரைக்கும் தான் உள்ளது. எனவே தான் கோயில்களில்,  ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுகின்றனர். காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உண்ண  வேண்டும் என்பதில் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் கவனம் செலுத்துகிறது. அலோபதி மருத்துவம் இதனை நம்புவதில்லை.
 

Source: www.dinamalar.com 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2010,00:00 IST