I LOVE TAMIL


Saturday, July 31, 2010

வாசிப்போம்... சாதிப்போம்...!


நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின்.  

 நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.  

காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 

 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.  

இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். 

 ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி  அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.   

 நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.  

உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.  

நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். 

 ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன். 

அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை. 

 புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள். 

 இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது.  

புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.  

உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!  

 நன்றி: www.dinamani.com -   31 Jul 2010
 

No comments: