I LOVE TAMIL


Friday, August 27, 2010

தலையங்கம்: பாவம், கறவை மாடுகள்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது. 

ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து. 

இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது. 

பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். 

பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.  

பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம். 

எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய  5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்? 

மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை. 

வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.  

ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை. 

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப்  பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும். 

இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது. 

என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது. 

 நன்றி: www.dinamani.com -   26 Aug 2010

Wednesday, August 18, 2010

OLD RICE



நன்றி: திரு. செந்தில் (இ-மெயில்) - 18-Aug-2010 

Tuesday, August 17, 2010

தலையங்கம்: நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...


சிறு,குறு விவசாயிகளின் பம்புசெட்டுகளில் உள்ள பழைய மின்மோட்டார்களை நீக்கிவிட்டு அரசின் சார்பில் புதிய மின்மோட்டார்கள் இலவசமாகப் பொருத்தித் தரப்படும் என்பதும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புதிய பம்புசெட்டுகள் பொருத்தித் தரப்படும் என்பதும் தமிழக முதல்வரின் விடுதலை நாள் விழா அறிவிப்பு. 

திறன் இல்லாத பழைய மோட்டார்களைப் பயன்படுத்துவதால், விவசாயத்துக்கான மின்சாரத்தில் 20 விழுக்காடு வீணாகிறது, இத்தகைய புதிய, தரமான மின்மோட்டார்களை இலவசமாகப் பொருத்தித் தருவதால் (இலவசமாக வழங்குவது மட்டுமல்ல, கிணற்றில் பொருத்தித் தருவதும்கூட இலவசம்தான்) இந்த மின்இழப்பைத் தவிர்த்துவிடலாம் என்பது முதல்வர் இதற்குக் கூறியிருக்கும் காரணம்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 19 லட்சம் விவசாயிகள் தங்கள் கிணறுகளுக்கு மின்இணைப்புப் பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். ஆக இப்போது முதல்வரின் அறிவிப்பின்படி 15 லட்சம் விவசாயிகளுக்கு மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் 4 லட்சம் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் பொருத்தித் தர வேண்டும். அதாவது மொத்தம் 19 லட்சம் மின்மோட்டர்களுக்கான செலவினத்தை தமிழக அரசு ஏற்றாக வேண்டும். ஒரு மின்மோட்டார் குறைந்தது | 40 ஆயிரம் ஆகும். இந்தக் கணக்கின்படி இத்திட்டத்தின் மொத்த நிதித்தேவை ஏறக்குறைய | 6,800 கோடி. 

இந்தத் திட்டத்தை இத்தனை செலவில் அமல்படுத்தி, அனைத்து மின்மோட்டார்களையும் இலவசமாக மாற்றிப் பொருத்தினால், முதல்வர் கூறுவதைப்போல 20 விழுக்காடு வீணாகும் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுமா என்றால், அதுவும்கூட மிகப் பெரிய கேள்வியாகத்தான் இருக்கும். மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம் இலவச மின்சாரம் கூடாது என்று சொல்லி வந்தபோதிலும், பொதுவாக ஆண்டுக்கு | 3,000 கோடி என்று மின்வாரியத்துக்கு அரசு ஒரு தொகையை மானியமாக வழங்கும் போதும், ஒவ்வொரு பம்புசெட்டில் உள்ள மீட்டரையும் ரீடிங் எடுத்து, அதன்படி உள்ள கட்டணத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த ஆணையம். ஆனால் தமிழக அரசோ, இலவசம் என்றான பின்பு எவ்வளவு மீட்டர் ரீடிங் இருந்தால் என்ன என்று சொல்வதோடு, ஆணையம் எதற்காக இதனை வலியுறுத்துகிறது என்கிற சிந்தனைக்கே திரும்பவில்லை. மின்வாரிய ஊழியர்கள் வயலுக்குப் போய், பம்புசெட்டுகளில் ரீடிங் எடுக்கும் வழக்கமே மறைந்தொழிந்துவிட்டது. 

மத்திய மின்சார ஒழுங்காற்று ஆணையம், இலவச மின்சாரத்தையும் ரீடிங் செய்து கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறையானது, தமிழ்ப் பழமொழி சொல்வதைப்போல, "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பதைத் தவிர வேறில்லை. 

ஒரு பம்புசெட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்பட்டிருக்கிறது என்பதை வைத்து, அந்த நிலத்தில் நடைபெற்ற விவசாயத்தின் வீச்சு, விளைச்சல் எல்லாவற்றையும் தோராயமாகக் கணக்கிட முடியும். மேலும், இந்த மின்சாரம் அந்த நிலத்தின் அளவுக்குத் தகுந்தபடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கணிப்பதன் மூலம், அவர்கள் தவறாக மின்சாரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வாய்ப்புகளும்கூட உண்டாகும். மேலும், ஒவ்வோராண்டும் இந்த மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் குறைதல் இருக்கிறதா என்பதைக் கொண்டு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுமான மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்க மறுத்துவிட்டது தமிழக அரசு. 

இதனால், பம்புசெட் மின்சாரம் பல நேரங்களில் பண்ணை வீடுகளுக்கும் போகிறது. சில இடங்களில் கரும்பு பிழிவதற்கும் போகிறது. சில நேரங்களில் வெறுமனே லாரிகளில் தண்ணீர் நிரப்பவும் பயன்படுகிறது. வணிக ரீதியில் இவ்வாறு இலவச மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசியல் தலைவர்களை வரவேற்க சாலைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்படும் குழல்விளக்குகளுக்கும்கூட, கட்சி பேதமின்றி, சாலையோரம் இருக்கும் பம்புசெட்டுகளிலிருந்து இலவசமாக மின்சாரத்தை இழுத்துக் கொள்கிறார்கள். 

நிலைமை இப்படி இருக்க, தற்போது தரமான புதிய மின்மோட்டார்களை மாற்றிக் கொடுத்தால் அதனைப் பயன்படுத்தும் நேரம் அதிகரிப்பதுடன், மின்சாரத்தின் அளவும் அதிகரிக்குமே தவிர, குறையாது.  அதாவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நாற்கர சாலைகள் அமைத்தால் வேகம் அதிகரித்து வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விபத்துகளும் அதிகரிப்பதைப் போலத்தான் இதுவும். நல்ல மின்மோட்டார்களை நன்றாகப் பயன்படுத்தி, நிறைய மின்சாரத்தை உறிஞ்சுவார்கள். வீணடிப்பார்கள், வேறென்ன? 

கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக அண்மையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டது. அதேபோன்று மின்மோட்டார்களின் தரம் உயர்த்த மானியம் அளிக்கப்படுவது என அரசு முடிவு செய்திருந்தால் அதனைப் பாராட்டியிருக்கலாம். 

ஒரு டன் கரும்புக்கு மேலும் | 500 அதிகரிக்கப்படும் என்றாலோ அல்லது நெல்லுக்கு விலை | 500 அதிகம் என்றாலோ விவசாயிக்கு நன்மை கிடைக்கும். விவசாயத்துக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும். 

விதை நெல்லுக்கு மானியம் இல்லை என்று சொல்லும் அரசு, மின்மோட்டாரை இலவசமாக வழங்குவதால், மின்மோட்டார் உற்பத்தியில் ஈடுபடும் ஒரு சில நிறுவனங்கள் இதற்கான அனைத்து ஆர்டர்களையும் பெற்று வளம்பெறப் போகின்றன. 

மக்கள் பணத்தை முறைப்படி செலவிடுவதில் தவறில்லை. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி சாதாரண விவசாய மின்மோட்டார் வரை, திட்டங்கள் உண்மையான நோக்கத்தைத் தாண்டி, வீணாகின்றன என்பதும், யாரோ சிலர் அதனால் சில ஆயிரம் கோடி ரூபாய் பார்க்கிறார்கள் என்பதும் தான் நமது ஆதங்கம்.

"வயலுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்பது புரிகிறது. ஆனால் புல்லுக்கு மட்டுமே வாய்க்கால் நீர் ஓடி, நெல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றால்... 
 
 நன்றி: www.dinamani.com -   17 Aug 2010

Friday, August 13, 2010

சூரிய சக்தியில் இயங்கும் ஏடிஎம்

மும்பையில் ஒபரா ஹவுஸ் அருகில், இன்டஸ் இன்ட் வங்கியால் நிறுவப்பட்டுள்ள ஏடிஎம் மெஷின், இந்தியாவில் சூரிய ஒளியினால் இயங்கும் முதல் ஏடிஎம் மெஷினாகும். சூரிய ஒளி சக்தியில், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. இது தவிர மீதி நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் சூரிய ஒளி சக்திக்கு தானாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் பெற்றுள்ளது. சூரிய ஒளியினால் ஏடிஎம் மெஷின் இயங்கும் போது, ஒரு மணி நேரத்தில் 6 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஒரு ஆண்டில், 355 நாட்கள் முழுமையான சூரிய ஒளி கிடைக்கிறது. இதனால் 2 ஆயிரத்து 10 யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. 1.42 டன் கார்பன் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக ஏடிஎம் மெஷினை நிறுவுவதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் சூரிய ஒளி ஆற்றல் மூலமாக ஏடிஎம் மெஷினை நிறுவுவதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகிறது. சோலார் முறையில் இயங்கினால், 5 ஆண்டுக்குள் ஏடிஎம் நிறுவிய செலவுத்தொகையை பெற்று விடலாம்.

நன்றி: www.dinamalar.com -  13 Aug 2010

Monday, August 2, 2010

Central Govt. & Supreme Court



நன்றி: www.dinamalar.com -  01 Aug 2010 

உலக எண்கள் தமிழ் எண்களே!



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான  திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள்  கோரிக்கையின் வெற்றியே. 

ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர். 

 இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே! 

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. 

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன்.  "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது. 

""இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996). 

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை. 

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. 

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார்.

""அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார். 

 டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). 

அவர் எழுதுகிறார்: ""1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. 

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.  

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார்  (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358). 

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.  

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம். 

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.  

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே! 

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே! 

 நன்றி: www.dinamani.com -   02 Aug 2010