I LOVE TAMIL


Friday, July 25, 2008

விவசாய வளர்ச்சி வீழ்ந்தது ஏன்?

விவசாய வளர்ச்சி வீழ்ந்தது ஏன்?

என். முருகன்

விலைவாசி உயர்வு நம் நாட்டின் சராசரி மக்களை வெகுவாகப் பாதித்துள்ள இந்த வேளையில் உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு பற்றியும் அவற்றின் விலை ஏற்றம் குறித்தும் கவலையுடன் பல விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

விலைவாசியும் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடும் இரண்டு தனிப்பட்ட விஷயங்கள்.

சமீப காலத்தில் அரிசி, கோதுமை ஆகிய இரண்டு அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு உலகெங்கிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவற்றின் விலையும் சர்வதேச மார்க்கெட்டில் வெகுவாக உயர்ந்துவிட்டது. அதற்கு ஒரு காரணம் ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவிய வறட்சியே!

அந்த நாட்டில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகள் எல்லோரும் சேர்ந்து சன்ரைஸ் எனும் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். அமோகமாக அரிசி உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த அமைப்பினர் இப்போது 98 சதவிகிதம் உற்பத்தியைக் குறைத்துவிட்டனர்.

ஒரு நாளைக்கு இரண்டு கோடி மக்களுக்குத் தேவையான அளவு அரிசி உற்பத்தி செய்யும் ஓர் அரிசி ஆலை, தெற்கு ஆஸ்திரேலியாவில் டெனிஸிக்கின் என்னும் ஊரில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இந்த அரிசி ஆலை தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. இதன் விளைவாக கேமரூன், எகிப்து, எத்தியோப்பியா, ஹெய்ட்டி, இந்தோனேசியா, இத்தாலி, ஐவரிகோஸ்ட், மாரிட்டானியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து மற்றும் ஓமன் போன்ற பல நாடுகள் அரிசி சரியான விலைக்கு சரியான தருணத்தில் கிடைக்காமல் அவதியுறுகின்றன.

சென்ற ஆண்டு ஒரு டன் அரிசி ரூ.12,000 என்றிருந்த சர்வதேச விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.34,000 முதல் ரூ.50,000 வரை உயர்ந்துவிட்டது. அரிசி கிடைக்காததால் ஹெய்ட்டியில் மக்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரிசி உற்பத்தி குறைவதற்கான பல காரணங்களில் மழை பொய்த்துப்போனது முதன்மையான காரணம். அதற்குக் காரணம் நமது பூமியின் வெப்பநிலை அதிகரித்ததுதான். சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் கரியமில வாயு பூமியில் இருந்து அதிகம் ஆகாயத்துக்குச் சென்றடைந்து நமக்குப் பழகிவிட்ட சீதோஷ்ண நிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருப்பது நமக்குத் தெரியும். தேவைக்கு அதிகமான மழை பொழிந்து வெள்ளமும், தேவையான மழை வராமல் வறட்சியும் இனிவரும் காலங்களில் அதிகமாகும் என்பது சுற்றுப்புறச் சூழல் நிலைமையைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், இந்தியா போன்ற முதன்மை விவசாய நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உருவாகக் காரணம் நாம் விவசாயத்தின் மீது தேவையான அளவு கவனம் செலுத்தாதது தான். உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்குப் பயன்படும் நிலங்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாவே. நமது நிலங்களை சரியான முறையில் உபயோகித்தால் நமது உணவுத் தேவையையும் பூர்த்தி செய்துவிட்டு உணவு தானியங்களை ஏற்றுமதியும் செய்யமுடியும்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நாம் நடைமுறைப்படுத்திய பசுமைப்புரட்சி நமது நாட்டிலிருந்து பசியையும் பஞ்சத்தையும் விரட்டியடித்தது. ஆனால் அதன் பின்விளைவுகளை கணக்கில் எடுக்காமலும், அவ்வப்போது தேவையான நீராதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமலும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அரசு விவசாயத்தை முழுமையாகக் கவனிக்காமலும் விட்டுவிட்டதால் நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

பழைய காலங்களில் ஒரு விவசாயி கோதுமை அல்லது உருளைக்கிழங்கு பயிரிட கிராமத்தில் மாட்டுச் சாணத்தையும் மக்கிய குப்பையையும் வானம் பார்த்த தனது பூமியில் உரமாக இட்டு பயிர் செய்து வந்தார். பசுமைப் புரட்சி வந்தவுடன் மெக்சிகோவிலிருந்து வந்த குட்டை கோதுமைப் பயிரை விவசாயம் செய்தார் அதே விவசாயி. ரசாயன உரங்கள் வாங்க மானியங்கள், கிணறுவெட்ட குறைந்த வட்டியில் கடன் எல்லாம் கிடைக்க எல்லாமே வெற்றி! ஆனால் முப்பது ஆண்டுகளின் செழிப்பான விவசாயத்தின் பலனாக விவசாயக் கிணற்றில் தண்ணீர் மட்டம் 100 அடி கீழே சென்றுவிட்டது. ஏனென்றால் நிறைய நீர்வசதி இருந்தால்தான் புதிய பயிர்களை பயிர் செய்ய முடியும்.

பழைய காலங்களில் அரசுகள் நிறைய அணைகளைக் கட்டி, வாய்க்கால்களையும் குளம்குட்டைகளையும் தூர்வாரி நீராதாரங்களைப் பெருக்கிக் கொண்டே வந்தன. 1980-ஆம் ஆண்டுவாக்கில் இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லா அரசுகளுமே குறைத்துக் கொண்டன. இதனை மேலும் சிக்கலாக்க ஓட்டுவங்கி அரசியலைக் குறிவைத்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால் சகட்டுமேனிக்கு நிலத்தடி நீர் உபயோகம் அதிகரித்து நீராதாரம் குறைந்து கொண்டே போயிற்று.

நீராதாரம் குறைந்ததால் விவசாயிகள் அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் அல்லாமல் அதிக நீர் தேவையில்லாத மற்ற பயிர்களை விவசாயம் செய்ய ஆரம்பிக்கின்றனர். மக்காச் சோளம் பயிரிட்டு அது நம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் "பேபி கார்ன்' என விலை உயர்ந்த நவநாகரிக உணவாக மாறி அரிசி, கோதுமை பயிர்களைவிட அதிக வருமானத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகின்றன. அதிக தண்ணீர் தேவையுமில்லை.

நவீன சாகுபடி முறைகளைப் பின்பற்றி நிலத்திலிருந்து அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் சிறிய அளவிலான நிலங்களில் எடுபடாது. மேலை நாடுகளில் விவசாயம் பெரிய தொழிற்சாலைகள் போல் நடைபெறுவதை நாம் காணலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மூன்று பேர் விவசாய வேலை செய்வதை நேரில் பார்த்தேன். அங்கு நிலத்தை விவசாயத்திற்குத் தயார் செய்வது ஒரு பெரிய வேலை. 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் டிராக்டர், புல்டோசர் வைத்து செப்பனிட்டு சிறிய சாய்மானத்துடன் உருவாக்கி ஒரு பெரிய குழாயில் சிறிய துவாரங்கள் செய்து மேல் மட்டத்தில் பதிக்கிறார்கள். குழாயில் உள்ள சிறிய துவாரங்களில் நீர் கசிந்து முழு நிலத்திற்கும் பாய்கிறது. வரப்பு கிடையாது. சிறிய நீர் ஓட்டங்கள் இல்லாமல் முழு நிலமும் நீரில் நனைந்து விடுகிறது. தாழ்வாகப் பறக்கும் ஹெலிகாப்டர் விதைகளைத் தூவுகிறது.

அங்கு வியாபார கன்சல்டன்ட்போல் விவசாய கன்சல்டன்ட்டுகள் உண்டு.

ஒரு விவசாயி தற்போது ஏக்கருக்கு இருபது டன் தக்காளி விளைவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் ஒரு கன்சல்டன்ட் ஓர் ஒப்பந்தம் செய்கிறார். தனது விஞ்ஞான முறையிலான விவசாய யோசனையைக் கேட்டு பயிர் செய்தால் ஏக்கருக்கு எண்பது டன் தக்காளி கிடைக்கும். அறுவடை வெற்றியுடன் நடந்தால் ஓர் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் கன்சல்டன்சி கட்டணம்! இது துல்லியமாக வெற்றி அடைகிறது.

நமது நாட்டில் நிலச்சீர்திருத்த விதிகளைக் கடைப்பிடித்த காரணத்தால் மேலை நாடுகளின் விஞ்ஞான முறையிலான விவசாயம் இங்கு எடுபடாது. நமது தேவை சிறிய நில உடைமைகளில் சாகுபடியை நவீனப்படுத்துதல்தான். ஆனால் இதற்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிறைய நிதி ஆதாரங்களை அளிக்க வேண்டும்.

2001 - 2002 ஆம் ஆண்டு நமது திட்டச் செலவு ரூ. 4 லட்சத்து 47 ஆயிரத்து 448 கோடிகள். அதில் விவசாயத்துக்கு ரூ. 48 ஆயிரத்து 215 கோடிகள். (10.2 சதவிகிதம்). ஆனால் 2006-2007-ஆம் ஆண்டு திட்டச் செலவு ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 323 கோடிகள். அதில் விவசாயத் திட்டங்களுக்கு ரூ.60 ஆயிரத்து 762 கோடிகள்தான் ஒதுக்கப்பட்டன (5.8 சதவிகிதம்). விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் 10.2 சதவிகிதத்திலிருந்து 5.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்ட காரணத்தால் விவசாய வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் விளைபொருள்களுக்கு சரியான விலை பயிரிடுபவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பது மற்றொரு பிரச்னை. இதனை வினியோக சங்கிலிப் பிரச்னை என்கிறோம். உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவில் பழங்கள், காய்கறிகள் போன்ற விவசாயப் பொருள்களின் விலையில் ஐந்தில் ஒருபங்கு விவசாயிக்கும், மீதம் இடையில் உள்ள வியாபாரிகளுக்கும் இதர செலவுகளுக்கும் போய்விடுகிறது.

நிறைய இடங்களில் இவற்றைச் சேமித்து வைக்கும் குளிர்சாதன வசதிகளும், கூட்ஸ் லாரிகளில் இவை இடமாற்றம் செய்யப்பட வேண்டிய வசதிகளும் தேவை. தாய்லாந்து போன்ற ஒரு நாட்டில்கூட இது மாதிரி வசதிகள் நிறைய செய்யப்பட்டு விவசாயி ஐந்தில் மூன்று பங்கு விலையைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் விவசாயத்துக்கு நாம் செலுத்தும் கவனம் சமீப காலங்களில் மிகவும் குறைந்து வந்துள்ளது திண்ணம்.1990 - 91-இல் நம் நாட்டில் விவசாயத்தின் வளர்ச்சி சராசரி 4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் ஒன்பதாவது, பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலமாகிய 1997 முதல் 2007 வரை விவசாயத்தின் வளர்ச்சி சராசரி 2 சதவிகிதமாகக் குறைந்தது.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பண்டித ஜவாஹர்லால் நேரு 1963-ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சிக்கூட்டத்தில் முதலமைச்சர்களை நோக்கிக் கூறியது நினைவுக்கு வருகிறது. "விவசாயம் நம் நாட்டுக்கு முதலமைச்சர்களை விட மிகவும் முக்கியம்'' கவனிப்பார்களா இன்றைய ஆட்சியாளர்கள்?

Source : www.dinamani.com
Tuesday July 22 2008 00:00 IST

Friday, July 11, 2008

உலக மெகா திட்டங்கள் - ஒரு பார்வை

Thursday July 10 2008 00:00 IST

உலக மெகா திட்டங்கள்-ஒரு பார்வை

நெல்லை சு. முத்து

உலக அளவில் இன்று அதிகம் பேசப்படும் பெரிய திட்டங்களில் இந்தியாவின் சர்ச்சைக்கு உரிய அல்லது உள்ளான திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. "கான்வே டேட்டா இன்கார்ப்பரேசன்' என்கிற அமைப்பு அட்லான்டாவில் இயங்கி வருகிறது. அது தொகுத்து வைத்துள்ள 2,000 உலகளாவிய திட்டங்களில் முதல் பத்து இடங்களில் அமெரிக்கா (550), ஜப்பான் (190), சீனா (186), கனடா (95), தாய்வான் (83), ஜெர்மனி (59), இங்கிலாந்து (56), இந்தோனேசியா (51), ஆஸ்திரேலியா (49), ரஷியா (44) ஆகிய நாடுகள் பல திட்டங்களுடன் இடம்பெறுகின்றன.

முதலில் அமெரிக்காவும் ரஷியாவும் இணைந்து உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத்தான் பெரும் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளன. அணுக்கழிவுகள் அப்புறப்படுத்தும் திட்டம். அமெரிக்காவில் ஓக் ரிட்ஜ் (தென்னஸி) மற்றும் சாவன்னா ஆறு (தென் கரோலினா) ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்களை அகற்றுவதற்கு 10,000 கோடி டாலர்கள். நம் கணக்கில் நாலு லட்சம் கோடி ரூபாய். அவ்வாறே, ராக்கி ஃப்ளாட்ஸ் (கொலொராடோ) அணுமின் உலையைப் பிரித்து அகற்ற 2,200 கோடி டாலர்கள். அணுசக்தித் துறையின் டெக்சாஸ் பான்டெக்ஸ் நிலையத்துக்காக 1,500 கோடி டாலர்கள். இப்படிப் போகிறது பணக்கார நாடுகளின் செலவு வீச்சு.

1986-ஆம் ஆண்டு 8,000 உயிர்களைப் பலி வாங்கிய செர்னோபிள் நிலையத்தைக் கழற்றி அகற்றுவதற்கு ரஷியாவின் செலவு மதிப்பீடு 5,000 கோடி டாலர்கள். இவை தவிரவும், அமெரிக்காவில் பெரும் ஏரிகள், துறைமுகங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தவும் கடலிலும் நிலத்திலும் எண்ணெய்க் கசிவுகளைத் துடைப்பதற்கும் எல்லாம் 2,500 கோடி டாலர்கள். பாருங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது கையைக் கடிக்கும் சமாசாரம்.

சீனா உலகின் மகத்தான ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. எரிபொருள் துறையில் புதிய சக்தி மூலங்கள் தேடும் ஏறத்தாழ 50 திட்டங்கள் சீனா வசம் உள்ளன. இவ்வகையில் 2020-ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 30 அணுமின் நிலையங்கள் நிறுவும் பணியில் ஈடுபட்டு உள்ளது. 2040-ஆம் ஆண்டிற்குள் 100 நிலையங்கள் அதன் இலக்கு. 1000 மெகாவாட் உற்பத்திக்கு 100 கோடி டாலர் மட்டுமே செலவாகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா தனது அணுமின் நிலையங்களை கழற்றி வரும் வேளையில் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அணுமின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எப்படியோ, கனடாவின் இன்னொரு சக்தித் திட்டம் - லா கிராண்டே ஜேம்ஸ் வளைகுடா கூட்டமைவுத் திட்டம். அதாவது லா கிராண்டே நதியில் மான்டரீல் நகருக்கு 960 கிலோமீட்டர் வடக்கே 6000 கோடி டாலர் நீர்மின் சக்தித் திட்டம். பிரேசிலில் பிரேசில் - பராகுவே ஆகிய இடங்களுக்கு இடையே 2000 கோடி டாலர் செலவில் பரானா நதியின் குறுக்கே இத்தாய்ப்பு அணைத் திட்டம் (Itaipu project).

தண்ணீர்த் தட்டுப்பாடு இன்று சர்வதேசப் பிரச்னை. இதனைச் சமாளிக்க கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெரிய அளவில் சவூதி அரேபியா வசம் உள்ளது. குவைத் முதல் ஓமன் வரை பாலைவனம் நெடுகிலும் குடிநீர்க் குழாய்கள்.

எகிப்து நாட்டிலும் அஸ்வான் நீர்த் தேக்கத்தில் இருந்து 320 கிலோமீட்டர் நீளத்திற்கு "இரண்டாவது நைல்' என்ற பெயரில் புதியதோர் ஆறு பாய விடுகிறார்கள். நாமோ ஆற்றையே மணலாக அள்ளி வருகிறோம்.

துருக்கியில் தென்கிழக்கு அனடோலியா திட்டம் 2500 கோடி டாலர்கள் செலவில் நடைபெற்று வருகிறது. அதனால் 40 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். லிபியாவில் ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டி சகாரா பாலைவனம் முதல் கடலோரப் பகுதிகள் வரை நீர்பாய்ச்சவும் திட்டம்.

நம் நாட்டில் தேசிய நதிநீர் இணைப்பு குறித்துக் கோடை கால "ரே பான்' நடிகர்களும், பாதிக் குளியலில் அரை ஆடையுடன் மேடை ஏறிய நடிகைகளும் கூடி அறிவித்தால் போதுமா? வட இந்திய நதிகள் இணைப்பு குறித்து மத, கட்சி, மொழி மாச்சரியங்கள் இன்றி விவாதிக்கப்பட வேண்டிய சிக்கல்கள் நான்கு.

ஒன்று, கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் உயரத்துக்கு மேடான தக்காண பீடபூமிக்கு வடக்கே இருந்து தண்ணீர் கொண்டு வருவது. ஒரு நொடியில் 1500 கனசதுர மீட்டர் தண்ணீரை மேட்டில் ஏற்ற வேண்டும். நாலு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகச் செலவு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இரண்டாவது பிரச்னை - அங்கு 300 நீர்த்தேக்கங்களும் 1000 கால்வாய்களும் வெட்ட வேண்டும். கால்வாய் வெட்டுவதிலும் அணைகள் கட்டுவதிலும் 8000 சதுர கிலோமீட்டர் பரப்பைச் சீர்படுத்த வேண்டும். அங்கிருந்து 20 லட்சம் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டி வரும். அதுவும் பல மாநிலங்களின் பல்வேறு மொழி, இன மக்களை அப்புறப்படுத்த வேண்டுமே. இது நடக்கிற காரியமா?

மூன்றாவதாக, தேசிய ஒருமைப்பாடு என்று பேசினால் போதுமா? நம்மைச் சுற்றியுள்ள மாநிலங்கள் வெவ்வேறு நதிநீர்த் திட்டங்களில் தமிழகத்தைத் தனித்தீவாக மாற்றிவிட்டன. அந்நிலையில் அத்தகைய மாநிலங்கள் ஊடாகக் கடந்து நதி நீர் பாதுகாப்பாக நம்மை வந்து அடைய என்ன வழி?

அத்தனைக்கும் மேலாக இன்னொரு தீவிரப் பிரச்னை - மாசு. வழியில் பல்வேறு விதத்தில் நதிநீர் மாசு அடையும். காசியில் கங்கையில் கரைத்து விடப்படும் பாதிப் பிணங்களும், மத்தியப் பிரதேசத்தின் ஆலைக்கழிவுகளும், தொழிற்சாலை அழுக்குகளும் நமக்குத் தீங்கு தராதபடி இங்கே சுத்திகரிக்கவும் வேண்டி வருமே.

போகட்டுமே. மற்றொரு உலக மெகா திட்டம் - பெரும் உலகளாவிய நெடுஞ்சாலை. ஏறத்தாழ 100 நாடுகளை இணைக்க இருக்கிறது. ஸ்காண்டிநேவியா - ஐரோப்பா, ஜிப்ரால்டர் - ஆப்பிரிக்கா, இஸ்தான்புல் - தூரக் கிழக்கு நாடுகள், கனடா - வட அமெரிக்கா - மெக்சிக்கோ - மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா - பனாமா வரை சாலையிலேயே ஜம்மென்று சென்று வரலாம்.

இன்னொன்று - ரயில் போக்குவரத்து. பிரான்சில் பாரீஸ் முதல் மார்செல்லி வரையிலான "பெருவேகத் தொடர்வண்டி' திட்டம், ஜப்பானின் "ஷிங்கான்சென்' என்கிற சீறிப்பாயும் தொடர்வண்டி எனத் திட்டங்கள் பல.

அன்றி, வான்வழிப் போக்குவரத்திலும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் மகத்தானது. சேக் லாப் கோக் எனும் இடத்தில் உலகின் மிகப் பிரதான விமானத்தளம் அது.

ஒரு நாளில் 24 மணிநேரமும் இயங்கும் இந்த நிலையத்தில் மட்டும் ஓராண்டில் சராசரி நாலரை கோடி பயணிகள் வந்து போகிறார்கள் என்றால் சும்மாவா?

துறைமுகங்களை எடுத்துக் கொண்டால் ஹாங்காங் சரக்குத் துறைமுகம் மிகப் பிரமாண்ட உருவெடுத்து வருகிறது. இங்குதான் உலகின் மூன்றில் இரண்டு சரக்குக் கப்பல்கள் பொருள்களை ஏற்றி இறக்குகின்றன. சீனாவில் ஷாங்காய் துறைமுகம் 2000 கோடி டாலர்கள் செலவில் அதி நவீன விசுவரூபம் எடுத்து வருகிறது.

சூயஸ் கால்வாய்க்கும் ஓரியன்ட் துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தும் சுறுசுறுப்பாகி வருகிறதாம். ஓமன், ஜெபல் அலி துறைமுகங்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய சிங்கப்பூர் துறைமுகத்துடன், மலேசியாவின் ஜோஹோர், இந்தோனேசியாவின் பதாம் தீவு என சமர்த்தான துறைமுகங்கள் வேறு கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

நம் நாட்டில் சேது சமுத்திரத்தில் 35 கி.மீ. தொலைவுக்கு 12 மீட்டர் ஆழத்துக்குத் தோண்ட வேண்டும். அதில் 20 கி.மீ. தூரத்துக்கு 10 மீட்டர் ஆழம் தோண்டி ஆயிற்றாம்.

ஆனால் வங்காள விரிகுடா கடலும், இந்துமகா சமுத்திரமும் சந்திக்கும் இந்த ஜலசந்தியில் மீண்டும் இரு பக்க அலைகள் மோதி மண் திட்டு மீண்டும் உருவாக வாய்ப்பு உண்டே. அதாவது தோண்டப்பட்ட கடல் மீண்டும் தூர்ந்து போகும் அபாயம்.

ஆதம் பாலம் என்பது மனிதனால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையால் மணல் திட்டாக எழுந்து உயர்ந்ததா என்பது இருக்கட்டும். இந்தியத் தொலையுணர்வு செயற்கைக்கோள் படத்தில் இந்தியா - இலங்கைக்கு இடையே அகலமான திட்டாகத் தெரிகிறது. பேசாமல் சேதுவை மேடுறுத்தி வீதி சமைத்துவிடலாம். கால்நடையாய் அகதிகளாக இந்தியாவிற்குள் வருபவர்களுக்காவது உதவியாகி இருக்கும். பாரதி பாடியது போல மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.

ஜப்பானின் அக்காஷி கெய்க்யோ பாலம் குறிப்பிடத்தக்கது. இது சேதுராம் பாலம் மாதிரி இல்லை. 1998-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தப் பாலம் 1991 மீட்டர்கள் நீளம். செலவோ 4,200 கோடி டாலர்கள் என்றால் பாருங்களேன். அதற்கு அடுத்தபடி டென்மார்க்கில் 1624 மீட்டர் நீளப்பாலம்.

நம் நாட்டில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் எதிரிக் கட்சிகளால் தடுக்கப்படுகின்றன. அதனைச் சமாளிக்கப் "பேச்சுவார்த்தை' நடக்கும். ஆனால், அரசியல் அகராதியில் "பேச்சுவார்த்தை நடக்கிறது' என்றால் "பெட்டி கைமாறுகிறது' என்று அர்த்தமாமே!

Source : www.dinamani.com