I LOVE TAMIL


Thursday, January 1, 2009

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

வாகன விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அளித்துள்ள தீர்ப்பு சற்றே வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும், வாகனத்தில் "ஓசி'யில் உட்கார்ந்து செல்பவர்களும் ஒருங்கே கருத்தில் கொள்ள வேண்டிய தீர்ப்பு இது.

மோட்டார் சைக்கிள் (பைக்) சொந்தக்காரர் ஒருவர் தன்னுடைய மகனிடம் வண்டியை ஓட்டக்கொடுத்தார். அந்த இளைஞர் தனது நண்பனை பின்னால் உட்காரவைத்து ஓட்டிச் சென்றார். திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதனால் "பைக்' ஓட்டிச் சென்ற இளைஞர் படுகாயம் அடைந்து இறந்தார், பின்னால் உட்கார்ந்திருந்தவர் காயம் அடைந்தார்.

அந்த தகப்பனார் தன்னுடைய மகன் இறப்புக்கு இழப்பீடு கேட்டு மனுச் செய்தார். "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது. தந்தைக்கு மகன் சொந்த உறவு என்பதால், அவரை ""மூன்றாவது நபராக'' கருத முடியாது, எனவே இழப்பீடு தர முடியாது என்று கூறியது.

அவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவர் மீது பரிதாபப்பட்டு, இழப்பீடு தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம் உடனே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்தது. ""இன்சூர் செய்தவரின் மகன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது நடந்த விபத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமா?'' என்பதுதான் இப்போதைய கேள்வி என்ற பெஞ்ச், 2006-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டியது.

திலக் சிங் என்பவர் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அது. அந்த வழக்கில், இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருந்தவர் அடைந்த காயத்துக்கு நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் ஆகியிருந்தது. ""2 சக்கர வாகனத்தின் பின்னால் உட்காருபவர், ஓட்டுபவர் இரக்கம் காட்டி ஏற்றிச் செல்வதால் (ஓசியில்) பயணிப்பவர் ஆவார்; எனவே அவருக்கு இழப்பீடு பெற தகுதி ஏதும் கிடையாது'' என்று அந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது. இதையே உச்ச நீதிமன்ற "பெஞ்ச்' இந்த வழக்கிலும் தீர்ப்புக்கு முன்னுதாரணமாகப் பின்பற்றியிருக்கிறது.

2 சக்கர வாகனங்களை இன்சூர் செய்யும்போது அந்த வண்டியின் இழுவைத் திறன், அதன் வகை, அதன் விலை மதிப்பு ஆகியவற்றுடன் அதில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதிராக இருக்கிறது. 2 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று குறிப்பிட்டு இன்சூர் செய்வது எதற்காக?

""தற்செயலாக ஏற்படும் விபத்துகளுக்கு கம்பெனி ஜவாப்தாரியல்ல'' என்ற பழைய கண்ணோட்டமே இத்தீர்ப்பில் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் இத் தீர்ப்பானது முக்கியமான ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது. வாகன உரிமையாளரைத் தவிர மற்றவர்களுக்கு இழப்பீடு பெற உரிமையில்லை என்பதே அது.

வாகன விபத்துகளும் அதிகரித்து, வழக்குகளும் அதிகரித்துவரும் இந்நாளில் மத்திய சட்ட அமைச்சகமும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அமர்ந்து இத் தீர்ப்பின் அடிப்படையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். மருத்துவச் செலவு அல்லது மரணம் ஆகியவற்றால் வேதனைப்படும் நிலையில் இத்தகைய நிவாரண மறுப்பு வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.

மற்றொன்றையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம். வாகன விபத்து வழக்குகளில் வாகன ஓட்டிகளை மட்டும் போலீஸôர் எதிரிகளாகச் சேர்க்கின்றனர். சாலையை மோசமாக வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையினரையும், போதிய விளக்கு வசதி செய்யாத உள்ளாட்சிமன்ற அதிகாரிகளையும் விட்டுவிடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் பல இன்சூரன்ஸ் துறையில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்கி இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சட்டதிட்டங்களும், அரசின் கட்டுப்பாடும் இல்லாமல் போகுமானால், தீர்ப்புகள் மட்டுமல்ல, அரசாங்கமே வெகுஜன விரோத ஆட்சியாக மாறிவிடும் ஜாக்கிரதை! இதனால் விபத்துகளுக்கு வாகனங்களின் நிலையும் வாகன ஓட்டிகளும்தான் காரணம் என்ற பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதில் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவையும் சேர்ப்பது விரும்பத்தக்கது.

Thanks - www.dinamani.com - 31.12.2008

No comments: