I LOVE TAMIL


Saturday, April 11, 2009

கடமையைச் செய்! பலனை எதிர்பார்!!

ஐந்து ஆண்டுகள் முழுவதுமாக முடிந்து அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

எவர் வந்து வேப்பிலை அடித்தாலும் இறங்கப் போவதில்லை விலைவாசி விஷம். எனவே ஒற்றையா, இரட்டையா போட்டுப் பார்த்து வாக்களிக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்குச் சிலர் வந்திருப்பர். சிலரோ குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என முன்பே தீர்மானித்திருப்பர்.

இந்த ஆண்டும் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் வயது பதினெட்டு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு வகை வாக்காளர்களின் முடிவாக இருக்கும்.

தேர்தலில் தகுதியற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நல்லவர்கள் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழப்பதற்கும் இதுபோன்ற வாக்காளர்களே காரணம்.

குறிப்பிட்ட கட்சிக்குத்தான் நமது வாக்கு என முதலிலேயே முடிவு செய்துவிடாமல், வேட்பாளர்களின் தகுதி, இதுவரை தொகுதிக்கு அவர்களது கட்சி ஆற்றிய பணி, தொகுதி மக்களுக்குப் பாடுபடுபவரா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

ஒருமுறை நன்கு உண்டுவிட்டால் இரண்டு, மூன்று நாள்களுக்குப் புலி உணவு உண்ணாது. அரசியல்வாதிகள் சிலரும் அப்படித்தான். எப்பாடு பட்டாவது தொகுதியில் நின்று வென்றுவிட்டால் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குக் கவலையில்லை என்ற கணக்கில் எப்படியாவது சீட்டைப் பெற்று, வென்றும் விடுகின்றனர்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அத்தகையோர் அரசியலுக்கு வந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அல்லது வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு அரசியல் குறித்து விழிப்புணர்வும், சமூகக் கண்ணோட்டமும் அவசியம் இருக்க வேண்டும்.

யோசித்து வாக்களிப்பதைக் "கடமை'யாகக் கருதாமல் தேர்தல் நாள் வந்தது, சென்றோம், வாக்களித்தோம் என ஏதோ "கடமைக்கு' வாக்களித்தால் பின்னர் உரிமைகளுக்காக ஓயாமல் குரல் கொடுத்து ஏமாற வேண்டிய நிலைமையே ஏற்படும்.

இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கைகளுக்கும், தேர்தல் கால அன்பளிப்புகளுக்கும் மயங்கி, வாக்காளர்கள் தங்களை அடகு வைத்தால் பலனாகக் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கிடைக்க வேண்டிய உரிமைகள் மீட்கப்படாத பொருளாக மூழ்கிப்போய்விடும்.

மற்ற விஷயங்களில் எப்படியோ தேர்தல் விஷயத்தில், வெற்றிபெறும் வேட்பாளரால் தொகுதிக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பலனை எதிர்பார்த்தே கடமையைச் செய்ய வேண்டும்.

நல்ல, நாணயமான, பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வில் நாட்டமுள்ள தொண்டராக உழைக்கும் வேட்பாளரையே வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அதிகம் படித்த மேல்தட்டு மக்கள் "வாக்காளர் பட்டியலில்' தங்கள் பெயர் இடம்பெற வேண்டும் என விரும்புவர். ஆனால், வாக்களிப்பதை கடமையாகவோ உரிமையாகவோ கூட அவர்கள் நினைப்பதில்லை.

வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பது என்பது வெட்கப்படும்படியான செயலாகவும், தங்களது தகுதிக்குக் குறைவான செயலாகவும் அதிகம் படித்தோரால் கருதப்படும் நிலை உள்ளது.

இதுவே பல நேரங்களில் வேட்பாளர்களின் வெற்றியும், தோல்வியும் படிக்காத, அதிகம் படிக்காத வாக்காளர்களால் நிர்ணயிக்கப்பட காரணமாக அமைந்துவிடுகிறது.

தேர்தல் வெற்றியை பணப்பெட்டிகள் தீர்மானிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனில் வாக்குப்பெட்டிகள் தங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும்.

நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது இதுவரை எந்தத் தேர்தலும் காணாத ஒன்று. அது இயலாத காரியமும்கூட. என்றாலும் முடிந்தவரை அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

எல்லோரும் வாக்களிப்பதன் மூலம் கள்ள ஓட்டுகளைத் தடுக்கலாம்.

நல்லவரைத் தேர்ந்தெடுத்தலே, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, சந்தர்ப்பவாத அரசியலுடன் கொள்ளையடிக்க நினைப்போருக்கு விழும் முதல் அடி. அதுவே ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கான முதல்படி.

ஜெயிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்து அதற்கு வாக்களிப்பதற்குப் பெயர்தான் வாக்குரிமை. இந்த அடிப்படை உண்மையை நமது வாக்காளர்கள் புரிந்து கொண்டால் போதும், ஜெயிக்க வேண்டிய கட்சி ஜெயித்து விடும். வாக்குச் சீட்டின் மதிப்பும் மரியாதையும் காப்பாற்றப்படும்.


Thanks - www.dinamani.com - April 9 2009

No comments: