I LOVE TAMIL


Friday, June 25, 2010

ஒலி மாசுபாடு இல்லாத ரயில்வே ஸ்டேஷன்

தகவல் சுரங்கம்

ரயில்வே ஜங்ஷன் இருக்கும் பகுதிகளில், ரயில்கள் ஏற்படுத்தும் ஒலி மாசுபாடு, தவிர்க்க இயலாத மாசுபாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில்வே ஸ்டேஷன் 9 பிளாட்பார்ம்களையும், 10 ஆயிரத்து 994 சதுர அடி இடப்பரப்பையும் கொண்டு இருந்தாலும், உள் இருந்து ஒலி வெளியே வராதபடி, இதன் கட்டட அமைப்பு உள்ளது. அனைத்து சப்தங்களும், இரைச்சல்களும் சுவருக்குள்ளேயே தங்கி விடும் வகையில், இதன் அமைப்பு உள்ளது. அப்படியும் மீறி ஏதேனும் ஒலி வந்தால் அதனை தாவரங்கள், மரங்கள் ஈர்த்து விடும் என்பதால், ரயில்வே ஸ்டேஷன் நான்கு மூலைகளிலும் தோட்டங்கள் வைக்கப்பட்டன. "சார்' என்ற இந்திச் சொல்லுக்கு நான்கு என்பது பொருளாகும். "பாக்' என்பது தோட்டத்தைக் குறிக்கிறது. "சார்பாக்' என, லக்னோ ரயில்வே ஸ்டேஷனுக்கு பெயர் வந்ததற்கு காரணமே இந்த தோட்டங்களாகும்.
  
நன்றி:  www.dinamalar.com - 25-Jun-2010


Saturday, June 19, 2010

தலையங்கம்: இது என்ன முரண்?

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? இதற்கான பதில் நேற்றுவரை தஞ்சை என்பதுதான். ஆனால், இனிமேல் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா என்பதில் ஐயம் இருக்கிறது. ஏனென்றால், தஞ்சை டெல்டா பகுதியில் மிகக் குறைவாகவே குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.

இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து,  அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.

அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல்  கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக்  கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள்.  

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது. 

குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.

அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே. 

அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது)



தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார். இது என்ன முரண்?

நன்றி: www.dinamani.com - 18 Jun 2010  
 
         

காடு வளர்ப்போம்!

ஆர். தங்கராஜு

 தவறான வேளாண் சாகுபடி நுட்பங்கள், ரசாயன இடுபொருள்கள் தவிர பயிர் சாகுபடித் திட்டம் எனப் பல்வேறு அதிரடித் திட்டங்கள் மூலம் 1950-களில் விவசாயத்தில் வெற்றி காணச் செய்த முயற்சியின் விளைவு, சுற்றுச்சூழல் பாழ்பட்டுப்போய் விளையும் மண்ணே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது.

இந்த நிலையிலாவது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பயிரினங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காது, உணவுப் பொருள் உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்து போவதோடு, நச்சுத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கும்.

தட்பவெட்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு பூமியில் பிரளயம் நிகழும். நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்தச் சீர்கேடுகளையும், பேரழிவினையும் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பதுதான். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; வனம் வனமாய், தோப்புத் தோப்பாய் காணும் இடமெல்லாம் பச்சைப் போர்வை படரச் செய்ய வேண்டும்.

மொத்தமுள்ள நிலப்பரப்பில் 3-ல் ஒரு பங்கு மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்த தாவரப் போர்வையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் இப்போது 5-ல் ஒரு பங்குகூட தாவரப் போர்வை இல்லை. பசுமை இல்லை. வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வெப்பக்கொடுமை. முடிவு வறட்சி, பசி, பட்டினி, அழிவு.

மனித சமூகத்துக்கு இயற்கை கொடையாக வழங்கிய தாவரப் போர்வை அவரவரின் சுயநலப் போக்குக்காக அழிக்கப்பட்டது. அதன்மூலம் பொருளாதார ரீதியாக நொறுங்கிவிட்ட வேளாண்மையின் செயல்பாடுகள் குழம்பிப் போய்விட்டன. 

தாவரப் போர்வை நிலத்தில் இருந்தால், தாவரப் பொருள்களுடன் அங்குள்ள உயிரினக் கழிவுகளும் ஒன்று சேர்ந்து மண்ணை வளமாக்குவதுடன், மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால் மண் இறுக்கம் தளர்ந்து இளக்கமாகிறது. அதன்மூலம் மழைநீர் நிலத்தினுள் முழுமையாக ஊடுருவ முடிகிறது.

இந்த இயற்கை நிகழ்வுகளை நாம் அழித்துவிட்டதால் பெய்யும் மழைநீர் வளமான மண்ணையும் அரித்துக் கொண்டு விரைந்தோடி கடலில் கலந்து விடுகிறது. அதனால், மண் வளத்தை இழப்பதோடு, நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போகிறது. 

கூட்டம் கூட்டமாய் மரம் வளர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு. வறண்ட இடத்தில்கூட வளம் சேர்க்க மரங்களால் மட்டுமே முடியும். சில இன மரங்கள் மண் ஈரத்தையும், மழை நீரையும் விரும்புவதில்லை. ஏனெனில், அந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டுமே விரும்பும். அதனால், நிலத்தடி நீரைத் தேடி கடினமான பூமியாயிருப்பினும் அந்த மரங்களின் பலம் மிகுந்த வேர்கள் பூமிக்கடியில் போய் நிலத்தடி நீரை மேலே கொண்டு வந்து விடும்.

இன்னும் சில மரங்கள் பூமிக்குள் ஆழமாக வேரோடு உள்ளே புகுந்துபோய், நிலத்தடி நீரையே தொட்டு விடும். இதன்மூலம், பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நீரைக்கூட தனது ஈர்ப்பு விசை மூலம் இழுத்து அந்த இடத்தில் மேலும் மரங்கள் வளர்வதற்கு உதவும். 

இப்படித்தான் தாவரங்கள் பெருகி பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு, மாசற்ற சுற்றுப்புற மண்டலம் உருவாகிறது. இந்தச் சுற்றுப்புற மண்டலத்தை மையமாகக் கொண்டுதான் உயிர் மண்டலம் உருவாகிறது. இப்படி இயற்கையிலேயே உள்ள உயிரினத்தை வாழவைக்கும் மரங்களை இனியாவது வளர்க்க வேண்டும்.

அழிப்பதை நிறுத்திவிட்டு, மரங்களை வளர்க்க வேண்டும். ஏனெனில், இயற்கை தேர்வின் மூலம் இயற்கையாக விதைகள் தானாக விழுந்து முளைத்து, இலையாகி, செடியாகி, மரமாகி வளர்ந்து பயன்தர பல ஆண்டுகள் ஆகும். அதுவரை காத்திருக்காமல் உடனே தாமே முனைந்து திட்டமிட்டு காடுகள் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். 

அப்படித் திட்டமிட்ட இயற்கை வன வளத்தை தாவரப் போர்வையாக உருவாக்க முனையும்போது, ஒளி ஈர்க்கும் தாவரங்கள், மித ஒளி ஈர்க்கும் தாவரங்கள், வெயிலைச் சமாளிக்கும் தாவரங்கள், நிழலை விரும்பும் தாவரங்கள் மற்றும் குத்துச்செடிகள், கொடிகள் எனத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்தத் தாவரங்களை முதன்மைத் தாவரங்கள், ஆதாரத் தாவரங்கள், 2-ஆம் நிலைத் தாவரங்கள், சிறந்த தாவரங்கள் என 4 வகைகளாகப் பிரிக்கலாம்.

இந்தத் தாவர வகைகள் மண் தன்மை, மண் வளம், தட்ப வெட்பநிலை, கடல் மட்டம், சுற்றுப்புற உயிரின மற்றும் மனித இயக்கம் உயிரின பன்முகத்துக்கான தொடர் நிலைகள் ஆகிய காரண காரியங்களின் அடிப்படையில், தாவரப் போர்வையின் உயரம், வளர்ச்சிப் பெருக்கம் மற்றும் குற்று இனங்களைக் கண்டறிந்து, திட்டமிட்டு அவற்றின் சார்பு மற்றும் தோழமைத் தாவரங்களை உருவாக்கினால் 10 ஆண்டுகளில் 10 ஏக்கரில் விளைந்து கிடைக்கும் பயன்களை 4 ஏக்கரில் பெற முடியும்.

அண்மை ஆண்டுகளில் வனங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சாலை மேம்பாட்டுக்காகக் கணக்கில் அடங்காத மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.  அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்படுவதில்லை. உச்ச நீதிமன்றம் சாலை மேம்பாட்டுக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரக் கன்றுகளை நடவேண்டுமென்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு எத்தனை இடங்களில் பின்பற்றப்படுகிறது என்பது சந்தேகமே. எனவே, வன மரங்களை அழிப்பதைத் தவிர்த்து, மரம் வளர்ப்பில் ஈடுபட்டு, நாட்டுக்குப் பசுமை சேர்த்து, வீட்டுக்கு வளத்தைச் சேர்க்கலாம்.

நன்றி: www.dinamani.com - 18 Jun 2010 

               

Friday, June 18, 2010

இயற்கையைப் போற்றுவோம்!

கு. குமாரவேலு

கடந்த 7,000 ஆண்டுகளில் சிற்றூர்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன.

உலக வயதின் காலக்கணிப்பில், மற்ற உயிர்வகைகளை ஒப்பிட்டால், மனித இனம் தவழ்ந்திடும் மழலைதான். ஆனால், மனித இனம் அளவு கடந்த அறிவாற்றலால், மலைகளைப் பெயர்த்திடவும், நதிகளை நகர்த்திடவும், உயிர்ச் செல்களினுள் ஊடுருவி, அவைகளை உருமாற்றம் அடையச் செய்யவும் ஆற்றல் பல பெற்றுள்ளது.

இதே ஆக்க அறிவு, பல தாக்கங்களைப் பாரில் உள்ள பல்லுயிரின் பாலும் பாராமுகமாகப் பரப்பிக் கொண்டே உள்ளது. இப்பூவுலகில் தாவரங்கள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. பறவைகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. விலங்குகள் இன்றேல் மனிதன் வாழ இயலாது. ஏன், நுண்ணுயிர் வகைகள் இன்றேலும் மனிதன் வாழ இயலாது. 

ஆனால், மனிதன் என்ற இனம் இவ்வுலகத்தில் இல்லாவிட்டால் மற்ற உயிர் வகைகள் நிச்சயமாக வாழ முடியும் - வெறும் வாழ்வு அல்ல, மிக மகிழ்வாக வாழ இயலும்.

எனவே, மனித இனம் இவ்வுலகில் ஓர் இன்றியமையாத அங்கமன்று. மனித இனம் இயற்கை என்ற சிலந்தி வலையில் ஓர் இழை. இவ்விழை, தனித்து இருக்க முடியாது. பிரிந்தால் பஞ்சுபோல் பறந்து விடும்.
÷எனவே தான், நமது வளமான வாழ்வு, மற்ற உயிர் வகைகளின் நலமான வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்ப கூரறிவுடன் தமிழகத்துக்குத் தகுந்த இயற்கை மேம்பாட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றினால், அனைத்து உயிர்களின் வாழ்வு வளம் பெருகும். பல் உயிர் ஓம்பல்  திட்டம் மலைகள் நலம், மக்களின் வளம்  அனைத்து உயிர்வகைகளின் மகிழ்வான வாழ்வுதான், மனித இனத்தின் நலமான,வளமான வாழ்வுக்கு ஆதாரம். எனவே, பல்லுயிர்களும் பரவலாக வாழும் மலைப்பகுதிகள்,வனப்பகுதிகளிலே இவைகளின் மகிழ்வான வாழ்வை உறுதி செய்திடும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை, விதைகள் பரவுதல் போன்ற இயற்கைப் பணிகளை அனுதினமும் செய்து வரும் பறவைகள், பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள், பறவைகள் போன்ற விதைபரப்பும் உயிரினங்களுக்கு ஆண்டு முழுவதும், தேவையான அளவுக்கு, விருப்பமான உணவு தரும் மரவகைகளைக் கண்டறிய வேண்டும். கண்டறிந்து, தமிழக கிழக்குத் தொடர்ச்சிமலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொழில்நுட்ப அறிவுடன் திட்டம் தீட்டி வளர்க்க வேண்டும். இதனால் மலைகளின் நலம் பெருகும்; பல லட்சக்கணக்கான இளம் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மழைநீரை உறிஞ்சி வைத்து, சுனை நீராக மாற்றிடும் மலைகளின் மறைந்து போன மாபெரும் திறன் மீண்டும் மீண்டு வரும். இதனால் சமவெளிகளில் நீர்வள ஆதாரம் பெருகும். எனவே நீர் உயரும்.

மேலும், இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியானது இளம் தாவரங்களின் இலைப்பசுமை, காற்றிலுள்ள கரியமிலவாயுவை, தற்போதைவிட இருமடங்கு அதிக அளவில் கிரகித்து, தன்னகப்படுத்தும், அதிக அளவு பிராணவாயுவை வெளிவிட்டு, உலகம் வெப்பமாவதைக் குறைத்திடும். 

அன்றாடம் அதிகரித்து வரும் பொருளாதார, கலாசார, தொழில் வளர்ச்சியால் இணைந்து வளர்ந்து, விசுவரூபம் எடுத்துவரும் இயற்கைப் பாதிப்பின், தெளிவான வெளிப்பாடு தான் உலகம் வெப்பமயமாதல் ஆகும்.
 கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் உலகின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளும், இமயமலை போன்ற நெடிதுயர்ந்த மலைப்பகுதியில் அடர்ந்து, படர்ந்து படிந்துள்ள பனிக்கட்டிகளும், மிக வேகமாக உருகிக் கரைந்து குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகளில் பெருமளவு கடல்கொள்ளும் என உலக அறிவியல் வல்லுநர்கள் அனுதினமும் எச்சரித்துக் கொண்டே உள்ளனர்.
÷தமிழகத்தில் சுமார் 1000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப்பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்கள், விளைநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயம் மிக அதிகம். தமிழகத்தில் உள்ள சுமார் 6.2 கோடி மக்கள்தொகையில் 2.9 கோடி மக்கள் 13 மாவட்டங்களின் கடற்கரைப் பகுதியில் வாழ்கிறார்கள்.

இந்தக் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 810 பேர் வாழ்கிறார்கள். இது தமிழகத்தின் சராசரி மக்கள்தொகையான 512-ஐ காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். நாகை, கடலூர் மாவட்டங்கள் மிக அதிக சேதத்துக்கு உள்ளாகலாம்.
 நாகை மாவட்டத்தில் சுமார் 56 சதவீதம் பரப்பு கடல்மட்டத்துக்குத் தாழ்வான உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுதவிர, தமிழகத்தில் மாறிவரும் பருவமழை, குறைந்த மழைநாள்களில் நிறைந்த மழை பொழிந்திடும் பாதகத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வறட்சி அதிகரித்து, விளைநிலங்கள் பாலைநிலங்களாக வருங்காலங்களில் மாறிவிடும் அபாயமும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களின் மகசூல் குறைவதுடன் நோய் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும், அவைகளால் சேதாரமும் அதிகரிக்கும்.

இக்குறைகள் அனைத்தையும் மிக விரைவில் கட்டுப்படுத்த, காற்றில் உள்ள கரியமிலவாயுவின் அடர்த்தியை இனியேனும் அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்தவல்ல ஆக்கபூர்வமான திட்டங்கள் செயலாக்கப்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதன்  14 டன்  கரியமிலவாயுவை வான்வெளியில் பரப்பும் அளவுக்கு தனது நாகரிக, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறான். இந்தியாவில் சராசரி  இரண்டு டன்  கரியமிலவாயு மட்டுமே ஒருசராசரி மனிதன் பயன்பாட்டினால் வெளிப்படுகிறது.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்க தேவைப்படும்  எரிசக்தி, மின்சக்திக்காக  நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவைகள் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தப்படும் கட்டாயத்தால், அதிக அளவு கரியமிலவாயு வெளிப்படுத்தலை குறைக்க இயலாது.

ஆனால், இயற்கை வளங்களான தாவரங்களைக் கொண்டு தமிழகத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்த அதிக அளவு வாய்ப்புள்ளது. பொய்த்து வரும், மாறி வரும் பருவமழையையும், தொடர்ந்து வரும் வறட்சி, வளமிழக்கும் மண் போன்ற சோதனைகளைத் தாங்கி, சாதனை புரிய வல்ல தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளவை மரவகைகளே.

வறட்சியைத் தாங்கி, மிகவேகமாக வளர்ந்து அதிக அளவு மகசூல் வழங்கி, தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மூலப் பொருளாகவும் உள்ளவை அவையே, மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் சாதனமாகவும், விவசாயிகளுக்கு அதிக லாபம் தர சாதகமான பல இன, இந்நாட்டு, வெளிநாட்டு மரங்கள் தமிழகத்தின் வனத்துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

இவைகளைப் பெருமளவில் வளர்த்தால், ஒவ்வொரு சொட்டு நீரையும் ஒவ்வொரு துளி மண்ணையும் ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்து மாபெரும் சத்தியாக மாற்றலாம்.

அதைத் தமிழக மக்களின் வளமான, நலமான வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் அமைத்திடலாம். இத்திட்டங்கள் பொருளாதார ரீதியில் வளமானதாகவும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டுக்கான  மந்திரமாகவும் தமிழகத்தில் பரிமளிக்க வல்லவை.

தமிழக மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த வல்ல வரம் தரும் மரம் நடும் திட்டத்துடன், நலம் காத்திடும் நல்ல திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இப்பூவுலகம் நமது மூதாதையரிடமிருந்து பெற்ற சொத்து என்று கருதாமல், நமது பிள்ளைகளிடமிருந்து பெற்ற கடன் என்று கருதி, பொறுப்புடன், முதலுடன் வட்டியையும் சேர்த்து, வளமிக்கதாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இயற்கையே நமது எதிர்காலம் என்ற மாபெரும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நமது வருங்காலச் சந்ததிகள் மற்றும் அனைத்து உயிர்வகைகளின் வளமான, வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.
(கட்டுரையாளர்: முன்னாள் வனத்துறைத் தலைவர்). 

நன்றி: www.dinamani.com - 17 Jun 2010

        

          

அருகி வரும் உறவுகள்...


நம் நாட்டில் பெரும்பாலான குடும்பத்தினர் ஓரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதன் காரணமாகவும், உறவினர்களிடமிருந்து விலகிப் போகும் போக்கைக்  கடைப்பிடிப்பதாலும் உறவுகள் அருகி வருகின்றன.
 குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, மைத்துனன்  போன்ற உறவுகள் பல உண்டு. காதணி விழாவில் இருந்து, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா என எந்த  விசேஷம் என்றாலும்கூட, தாய்மாமன் சீர்வரிசை கொண்டுவந்து தனது உறவின் பலத்தை நிரூபிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது.

ஆனால், இன்று ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பிறப்பதாக  எடுத்துக்கொண்டால், அந்தக் குழந்தைக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவு  இல்லாமல் ஆகிவிடுகிறது. அது வளர்ந்து பெரியவளாகி, அதற்குத் திருமணமாகி குழந்தை  பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு தாய்மாமன், பெரியம்மா, பெரியப்பா, சித்தி,  சித்தப்பா போன்ற உறவுகளும் இல்லாமலே போய்விடுகிறது.

வருங்காலங்களில் இதே  நிலை நீடித்தால் தாய்மாமன் உள்ளிட்ட முக்கிய உறவுகள் எல்லாம் பல சந்ததியினருக்குத்  தெரியாமலே போய்விடும்.
 அண்ணன், தம்பிகளிடையே திருமணமான சில ஆண்டுக்குள்ளே சொத்துகள்  பிரிக்கப்படும்போது உறவுகளும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவர்கள் வெவ்வேறு  ஊர்களுக்குச் சென்றுவிட்டால், இரு வீட்டிலும் உள்ள சிறு குழந்தைகளுக்கு சித்தப்பா,  பெரியப்பா உறவு முறைகளுடன் பழகும் வாய்ப்புகள் இல்லாமலே போய்விடுகிறது.

முன்பெல்லாம் ஓர் இல்லத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அதற்கு  முந்தைய நாளே உறவுகள் எல்லாம் கூடி, அந்த வீடே களைகட்டிவிடும். ஆனால்,  இப்போது உறவுக்குள் உள்ள இடைவெளியாலும், உறவுகளின் குறைபாட்டாலும்,  நண்பர்களும், உடன் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களும் மட்டுமே, அதுவும்  குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் வருங்காலச் சந்ததியினரிடம் பணம் இருக்கும். பாசம்  இருக்காது; பண்பாடு தெரியாது. உறவினர்கள் யாரேனும் அருகிலே இருந்தாலும்கூட அவர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். உறவுமுறைகளும் மறைந்து போய்விடும்.  நம் கலாசாரம், பண்பாட்டின் அடையாளங்கள் மறைந்து போய்விடும்.

இன்று பழைய அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் காட்சிப் பொருளாகவும், நினைவுச்  சின்னங்களாகவும்தான் உள்ளன. அதன் மறுசுழற்சி மிக்சியாகவும், கிரைண்டராகவும்  மாறிவிட்டதால், அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் புதிய சந்ததியினருக்குத் தெரியாமலே  ஆகிக் கொண்டிருக்கிறது. இதே நிலைதான் உறவுகளுக்கும் ஏற்படும்.

முன்பெல்லாம் பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகளுக்கு, கோயில் திருவிழா அழைப்புக்கு என வெளியூரில் இருக்கும் உறவுகளுக்கு கைப்பட கடிதம் எழுதுவர். அதில் ஓர் உயிரோட்டம் இருக்கும். ஆனால், இன்று இ-மெயில்,  குறுந்தகவல் என எத்தனை வந்தாலும் அடுத்த விநாடியே சிந்தையில் இருந்து மறைந்து விடுகிறது.
 கடிதத்தில் தனது உறவு முறைகள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் எப்படி  இருக்கிறார்கள் என நலம் விசாரிப்பதால் உறவுகள் பலப்பட்டு வந்தன. அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஊரில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்து சேர்வர். திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் உறவினர்களுக்கு விருந்து அளிப்பர். இதன்மூலம் உறவுகள் பலம் பொருந்தியதாகக் காணப்படும். இதெல்லாம் இன்றும் கிராமத்து அளவில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், படித்தவர்கள் மத்தியில்தான் இந்த உறவில் விரிசலே ஏற்படுகிறது. அவசர  யுகத்தில், கணவன் மனைவியேகூட, முழுமனதோடு நேரம் ஒதுக்கித் தங்கள் கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எந்த உறவினர் வீட்டுக்குச் சென்றாலும்கூட, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் சென்றுவிட்டு, உடன் அவசர அவசரமாகச் சென்றுவிடுவதால், அங்கு வந்திருக்கும் உறவினர்கள்  பலருக்கு யார் இவர் என்ற விவரங்கள்கூட தெரியாமலே போய்விடுகிறது.  குழந்தைகளுக்கும் உறவுகளைப் பற்றி தெரியாமலே போய்விடுகிறது.
 உறவுகள் சிறக்க வழிதான் என்ன? நம் நாட்டில் உள்ள மக்கள்தொகையைக் கருத்தில்  கொண்டு, கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதேசமயத்தில், இருக்கும் உறவு முறைகளை எப்படிப் புதுப்பிக்கலாம் என்று நமது சந்ததியினருக்குக் கற்றுக்  கொடுக்கலாம்.

மூடநம்பிக்கையாகத் தோன்றும் சில விஷயங்களுக்குகூட (சிவப்பு சேலை எடுத்துக்  கொடுத்தல்) சுமார் ரூ. 200 செலவழித்து, சகோதரியின் இல்லத்தில் கொண்டுபோய் சேலை  கொடுப்பதன் மூலம், அந்த இல்லத்தில் எவ்வளவு சந்தோஷம் பெருகும். பொங்கல்  சீர்வரிசை கொடுத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதன்மூலம் உறவுகள் மேம்படும்.
 அதிக பாடச்சுமையைக் காரணம் காட்டி குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டுமே செல்ல  வலியுறுத்தாமல், உறவினர்கள் வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்  செல்வதோடு, உறவினர்களை உறவு முறை சொல்லி அறிமுகம் செய்ய வேண்டும்.

முன்பெல்லாம் தலைமுறை தாண்டினாலும் வரப்புகள் பிரிக்கப்படாமல் இருந்தது.  அந்த அளவுக்குப் பெருந்தன்மை ஓங்கியிருந்தது. காரணம், பணம் பின்னால் நின்றது. உறவுகள் முன்னால் நின்றன. அதே நிலை நீடிக்கக்கூடிய மனப்பக்குவம் வளர வேண்டும்.

 முக்கிய விழாக்காலங்களில் இருந்து, பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து,  தேர்வில் வெற்றி பெற்றால் வாழ்த்து என அனைத்து விஷயங்களுக்கும், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுங்கள். அதில் உயிரோட்டம் இருக்கும்.

நன்றி: www.dinamani.com - 17 Jun 2010

Thursday, June 10, 2010

முறைமையில் திரியும் நீர்மேலாண்மை!


 நாளுக்குநாள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீருக்கான தேவைகளும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

சரி,​​ இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?​ மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில்,​​ யானை வந்தது,​​ பயிர்களை நாசம் செய்தது,​​ மனிதர்கள் விரட்டினர்,​​ அவர்களை யானையும் விரட்டியது,​​ சிறுத்தை வந்தது,​​ அதை வனத்துறையினர் பிடித்தனர்;​ மிருகங்களின் அட்டகாசம் மக்கள் அச்சம்!​ என்ற செய்தி வராத நாளே இல்லை என்ற நிலைக்கு நாம் வாழும் இந்த மாநிலப்பகுதி வெகுவிரைவில் வந்து சேர்ந்துவிட்டது.​ முறைமையில் திரிந்ததன் விளைவு இது.


மலைக்காடுகளில் போதுமான நீர் வசதி இல்லாததாலும்,​​ உணவுத்தேவை ஏற்படுவதாலும் மிருகங்கள் தங்களின் வாழிடம் விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துவிடுகின்றன என்ற விளக்கம் சரியாக இருந்தாலும்,​​ ஏன் நீர் வசதி இல்லை?​ மிருகங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க இயலுமா?

காடுகளில் மட்டுமல்ல,​​ முற்றிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் தான் நீர் குறித்தான பற்றாக்குறை அம்சங்கள் கணக்கிலடங்காமல் பெருகிவிட்டன.​ சுற்றிலும் தண்ணீரைத் தடைசெய்து தன்பலம் காட்டும் மனிதாபிமானமில்லாத மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புற வாழ வேண்டிய வழிமுறைகள் நீர் மேலாண்மையில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.

நமக்கு அளிக்கப்பட்டுள்ள-நமக்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நீர் ஆதாரங்களையும்,​ அதன் பாரம்பரியக் கட்டமைப்புகளையும் சிதிலமடையாமல் பாதுகாப்பதும்,​​ சிதிலமடைந்தவைகளைப் புனரமைப்பதுமான கடமை நமக்கும் இருக்கிறது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்று.
    
இயற்கையான நீர்வழிப் பாதைகளின் பாதுகாப்புக்கு அரசும்,​​ சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களும்தான் காவலாளிகள்.​ நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று நன்னீர் பெறுவது.​ மேலும் நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நாம் தரக்கூடிய வெகுமதி சரியான,​​ தேவையான அளவு நீர்கிடைக்கச் செய்வதாகும்.​ இது தலைமுறைகளின் தவிர்க்கவியலாத கடமை.​ எனவே நீர் நிர்வாகத்தில் சற்றும் பின்தங்கி விடாத கொள்கையுடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.​ இதில் மாற்றுக் கருத்து இருக்க​ முடியாது.​ இவ்விதமாக இருப்பதுதான் இன்றுள்ள நீர் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உழவுத் தொழிலுக்கு இயற்கையான நீர்வளம் போதாது எனும் நிலையில்,​​ அரசர்களால் செயற்கையான நீர்வள அமைப்புகள் உருவாக்கப்பட்டன.​ வெள்ளச்சேதம் நேராதவாறும்,​​ வேளாண் தொழிலுக்கு ஏற்ப பாய்ச்சலுக்கு நீர் ஓடுமாறும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆறுகளுக்குக் கரைகள் ஏற்படுத்தலும்,​​ நீரைத் தேக்க வேண்டிய இடத்தில் அணை கட்டுவதும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன.​ பேராற்றின் மூலம் கண்ணாறும்,​​ கண்ணாற்றில் இருந்து கால்வாயும்,​​ கால்வாயில் இருந்து வாய்க்கால் வெட்டலும் நிகழ்ந்தன.​ இவை ​ செய்ய இயலாத இடங்களில் ஏரி,​​ குளங்களும் அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன.​ கண்ணாறுகளும்,​​ கால்வாய்களும் பெரும்பாலும் சோழநாட்டில் உருவாக்கப்பட்டன.​ ஏரி குளங்கள் அதிகமாகப் பாண்டிய நாட்டில் வெட்டப்பட்டன.​ இவ்விதமாக உருவாக்கப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தகுந்த பயனைத் தந்தன.​ வேளாண்தொழில் பெருமை தரும் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.​ ​

தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாக இருக்கிறது.​ ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் 3-ல் ஒரு பாகம்தான் தமிழகத்தில் வாழும் குடிமகனுக்குக் கிடைக்கிறது.​ தற்போதுள்ள நீர்வளத்தைச் செம்மையாகக் கையாளவும்,​​ பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை உரியமுறையில் சேமிக்கவும் தகுந்த திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுக்க வேண்டும்.​ வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி வருங்கால சமுதாயத்துக்குக் காத்துத் தர வேண்டும்.

ஏரிகளும்,​​ குளங்களும்,​​ கண்மாய்களும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கூடிய தாய்மடிகள்.​ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் வெறும் எழுச்சி முழக்கமாக மட்டுமே பார்க்கப்படும் நிலை மாற வேண்டும்.​ வேதனையைத் தீர்க்கும் மருந்து ​ அரசிடம் மட்டுமே இருக்கிறது என்பது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கும் அதில் பங்கிருக்கிறது.​ ​

குளங்களும்,​​ ஏரிகளும்,​​ ஊருணிகளும்,​​ கண்மாய்களும் தனிநபர்களின் லாபநோக்கத்துக்காக,​​ மெகா விளம்பரங்கள் மூலம் விலைக்குப் பிரித்தளிக்கப்படும் ரியல் எஸ்டேட்டுகளுக்காக அமைக்கப்பட்டவை அல்ல.

அரசுத் துறைகளின் அட்டகாசமான அலுவலகங்கள் எழுவதற்குத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவைகளும் அல்ல.​ வேளாண்பெருக்கத்துக்கும்,​​ உழுதுண்டு வாழ்வோரை உய்விக்கவும்,​​ மக்களின் நலன்மீது கொண்டுள்ள மேன்மையான அக்கறையின் வெளிப்பாடாகவும் அமைக்கப்பட்டவை.​ வெட்டப்பட்டவை.​ 

ஆனால் நமது மாநிலத் தலைநகரம் சென்னையில் ஏரிகளைத் தூர்த்து மேடாக்கிக் கட்டப்பட்ட நகரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?​ இதுபோலவே வளம்பல தந்த ஏரிகளும்,​​ குளங்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன!​ கட்டடக் காடுகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றன.

தமிழகத்தின் மொத்த ஆற்றுப்படுகைகள் -​ 33 மொத்த நீர்ப்பாசனத் தேக்கங்கள் 52,​ மொத்த ஏரிகள் 39,000,​ இதில் வானம் பார்த்த ஏரிகள் 25,600.​ 18,26,906 கிணறுகளில் 13 லட்சத்துக்கு மேற்பட்ட கிணறுகள் மின்மோட்டார் வசதி கொண்டவை.​ மேற்கண்ட நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள் 95 விழுக்காட்டுக்கு மேல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளன.​ ​

பருவமழையால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு சராசரியாக 2,400 கோடி கனமீட்டர்.​ அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வரும் நீரின் அளவு சுமராக 1,200 கோடி கனமீட்டராக இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வாய்ப்புள்ள மொத்த நிலத்தடி நீர் 2,640 கோடி கனமீட்டர்.​ இதில் 1,320 கோடி கனமீட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது.​ இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு அபாயகரமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

ஆறுகளிலும்,​​ நீர் வழிப்பாதைகளில் ஓடிவரும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும்,​​ நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும்;​ நிற்கும் தண்ணீரை பூமியின் உள்ளே செலுத்த வேண்டும் என்கிற செயல்முறைகளால் மட்டுமே நீர் பற்றாக்குறை அபாயத்தில் இருந்து மீளமுடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை ஆர்வலர்கள் குரல் கொடுப்பது எவ்வளவு பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன.​ ​

ஆற்றில் வருகிற நீர் மற்றும் குளம்,​​ குட்டைகள்,​​ ஏரிகள் போன்ற இன்னபிற நீர் ஆதாரக் கட்டமைப்புகளின் மீது அவசியமான அவசரமான,​​ அலட்சியமற்ற கவனம் கொள்ள வேண்டிய காலமிது.​ ​

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள காட்டு வளங்களை அதிகரிக்கச் செய்யத் தேவையான திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.​ அத்திட்டங்களில் அப்பகுதி மக்களின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தின் நதிகள் அனைத்தும் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தே இருக்கின்றன.​ நீர்வளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் காடுகளைப் பாதுகாப்பது,​​ காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது என்பது தான் தேவைக்கு ஏற்ப நீர் பெறுவதற்கான ஒருவழியாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்த்துச் செயல்படுவது நல்லது.

ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு தன்மையுள்ளதாக உருவாக்குவது,​​ அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது,​​ அரசு நிலங்கள் மட்டுமல்ல,​​ தனியார் நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக் கூடிய சூழலை ஏற்படுத்துவது,​​ மேலும் புதிய புதிய நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும்.​ வீடுகள்,​​ கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' எனும் திருக்குறளும்,​​ "அமுதூறு மாமழை நீரதனாலே அமுதூறும்' எனப் பேசிய திருமந்திரமும் தொடங்கி வைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் பயணிப்போம்.

மழை நீர் சேகரிப்புச் செயல்பாடுகளில் இயன்ற பங்களிப்பை நல்குவது,​​ இருக்கின்ற நீர்வள ஆதாரங்களை அழியாமலும் மாசடையாமலும் தடுப்பது போன்ற செயல்களை வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வது நமது நல்வாழ்வுக்கு உத்தரவாதமளிக்கும்.

புதிய வாழ்க்கை முறை,​​ பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்;​ அது அவசியமும் கூட.​ இது அரசுக்கும் புரியும்;​ எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்!​ மாமழை போற்றுதும்!''

 நன்றி: www.dinamani.com - 08 Jun 2010
    

Monday, June 7, 2010

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காதுக்​குக் கடி​வா​ளம் தேவை!

மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் பேருந்தில் திரும்பி வரும்போது, செல்போன் ஒயரைக் காதில் சொருகி பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டே வீடு வந்து சேர்கிறேன். இரவு 11 மணி வரை செல்போன் எஃப்எம் ரேடியோவில் பாட்டுக் கேட்கிறேன். இதனால் எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால் என் வீட்டில் கூடுதல் நேரம் காதில் ஒயரைக் காதில் சொருகி பாட்டுக் கேட்பதை ஆட்சேபிக்கின்றனர். நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?  ராகேஷ், சென்னை-17. 

பாட்டுக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான். தொலைக்காட்சி, ஒலிபெருக்கி, ரேடியோ போன்றவற்றின் மூலம் நாம் பாடல்களைக் கேட்கும்போது மேம்போக்காகக் கேட்டு ரசிக்கிறோம். காதினுள் ஒயரைச் சொருகி பாட்டு கேட்கும்போது, அந்தப் பாடல் வரிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்பதால், அந்த வரிகளிலுள்ள அர்த்தம் புரிவதால், உங்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படலாம். தொடர்ந்து ஒலி காதினுள் எழுப்பப்படுவதால், காதிலுள்ள நரம்புகள், நுண்ணிய எலும்புகள், ஒலியின் வழியாகச் சீற்றமடையும் வாயுவினால் வறண்டு துவண்டு விடுகின்றன.  

பாடல் வரிகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவதால், மனம் அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப செயல் வடிவம் கொடுத்துவிட்டால், வாழ்க்கையின் பாதையே மாறும்படி செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஆக,இன்று எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதுவே பின்னாளில் துயரத்திற்குக் காரணமாகலாம்.  

நம் முன்னோர், மனித உடலை ஒரு தேராகவும் புலன்களை அதில் பூட்டிய குதிரைகளாகவும், ஆன்மாவைச் சாரதியாகவும் விளக்கியுள்ளனர். குதிரையை அடக்குவது கடினம். அது சதா துள்ளிக் கொண்டேயிருக்கும். அதற்குக் கடிவாளம் தேவை. உங்களுடைய செவிப்புலன் எனும் குதிரைக்கு உங்கள் உறவினர்கள் "அதிகம் கேட்காதே' எனும் கடிவாளம் போடப் பார்க்கின்றனர். பாட்டை அதிகம் கேட்காமல் அவர்கள் கூறும் நல்ல உபதேசத்தைக் கேட்டால் உங்களுடைய மூளை நரம்புகள் பாதிப்படையாமல், செவிப்புலனின் செயல்பாடு இறுதிவரை தொய்வை அடையாமல் பாதுகாக்கலாம். 

 சிலர் பாட்டை ரசித்துக் கேட்கும்போது தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுகின்றனர். தலையைத் தாங்கும் கழுத்துப் பகுதியிலுள்ள முதுகுத் தண்டு வட எலும்புகளின் இடையே அமைந்துள்ள சவ்வுகள் இதனால் இடம் பெயர்ந்துவிடலாம். கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் காது மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர்கள் எந்நேரமும் படுபிஸியாக இருக்கிறார்கள். வேறு சிலர் இரவில் காதினுள் ஒயரைச் சொருகி பாட்டைக் கேட்டுக் கொண்டே குறட்டை விட்டு உறங்குகின்றனர். புலனும் மனமும் சோர்வுற்று உறங்கினாலும், காதினுள் இசை வழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் காது நரம்புகள் பலவீனமாகக் கூடும்.

 இதற்கு மாற்று வழிதான் என்ன?  
செல்போனிலுள்ள ஸ்பீக்கர் பகுதியைக் குறைந்த அளவில் ஆன் செய்துவிட்டால், நீங்கள் பெறும் இன்பத்தை அருகிலுள்ளவர்களும் பெறக் கூடும். உங்களுக்கும் உடல் மனப் பாதிப்பு குறைந்துவிடும்.   

நெய்ப்பு எனப்படும் எண்ணெய்ப் பசையினால்தான் காதினுள்ளே உள்ள நரம்புகளும் எலும்புகளும் துடிப்புடன் செயல்படுகின்றன. எண்ணெய்க் குளியலை மறந்துவிட்டு இந்நாளில் காதினுள் நெய்ப்பு ஏற்படக் காரணமாக நெய், பால், வெண்ணெய், மாமிசங்கள், மீன் வகையறாக்களைக் குறிப்பிடலாம். அதாவது ஒரு வகையில் குறைவுபடும் எண்ணெய் இன்னொரு வகையில் வெண்ணையாகவும் மாமிசமாகவும் மீன் தினுசுகளாகவும் உடலில் அளவுக்கு மிஞ்சி ஈடு கட்டப்படுகின்றது. வறட்சி தரும் உணவைச் சாப்பிட்டு, எண்ணெய்யும் தேய்த்துக் குளிக்காமல், தொடர்ந்து காதினுள் ஒயரைச் சொருகிப் பாடல்களைக் கேட்கும் நபர் விரைவில் டமாரச் செவிடாக ஆகிவிடுவார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.   

அதனால் நீங்கள் செவிப்புலனைப் பாதுகாக்க, வாரம் இருமுறையாவது நல்லெண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்து, வெதுவெதுப்பாக பொறுக்கும் சூட்டில் இதமாகக் காதுகளினுள்ளே நிரப்பி, காதுகளைச் சுற்றி எண்ணெய்யைத் தடவித் தேய்த்து, அரை மணி நேரமாவது காலையில் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். அன்றைய தினங்களில் முடிந்தவரை ஏஸி அறையில் அமர்வதைத் தவிர்க்கவும். உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். ஏஸி அறையில் அமர வேண்டிய கட்டாயம் இருந்தால், காதுகளில் மெலிதான பஞ்சை அடைத்து வைக்கலாம்.  

காதுகளைப் பாதுகாக்க வசாலசுனாதி எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலம் உபயோகிக்கச் சிறந்தது. பொறுக்கும் சூட்டில், இதமாக இருக்கும்படி காதினுள் இந்த மூலிகைத் தைலத்தை நிரப்பி சுமார் 3-5 நிமிடங்களுக்குப் பிறகு, தலையை ஒருக்களித்து மூலிகைத் தைலத்தை வடித்துவிட்டு, பஞ்சினால் காதுகளைத் துடைத்துவிடலாம். காதினுள் நெய்ப்பைப் பாதுகாத்து, வாத தோஷத்தின் வறட்சி மற்றும் அதன் சீற்றத்திலிருந்து இந்த மூலிகைத் தைலம் நல்ல பாதுகாப்பைத் தருகின்றது. காலையில் பல் தேய்த்த பிறகு இந்தத் தைலத்தைப் பயன்படுத்தலாம்.

நன்றி: www.dinamani.com - 06 Jun 2010 (Dinamani Kathir - Supplement)

Saturday, June 5, 2010

Two years of Service

Dear all,

         vital-resource.blogspot.com rededicate to THIRD YEAR.


THANKS FOR YOUR SUPPORT

Today is WORLD ENVIRONMENT DAY

Save Water/Save Energy/Save Nature 

K. Prakash






Thursday, June 3, 2010

தலையங்கம்: வீணாகும் வரிப்பணம்...

கடந்த 63 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன. அவை மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலவிடப்படுகின்றன. மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் வேறு. இவ்வளவெல்லாம் செய்தும் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டாதது ஏன் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை.

1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை, அன்றைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தபோது, நமது மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? வெறும் 171.15 கோடி ரூபாய். மொத்தப் பற்றாக்குறை 26.24 கோடி ரூபாய். அரசின் மொத்தச் செலவினங்களின் வகையில் உள்ள 197.39 கோடி ரூபாயில், ராணுவத்துக்கான செலவு மட்டுமே 92.74 கோடி ரூபாய்.

2010-ல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி நமது மொத்த வருமானம் 10,20,838 கோடி ரூபாய். இதில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் 1,11,276 கோடி ரூபாய். இந்த அளவுக்கு வருவாய் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, வளர்ச்சித் திட்டங்களுக்கும், பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கும், நலிந்த பிரிவினருக்கான உதவிகளுக்குத் தரப்படும் மானியங்களும் பெருமளவில் நமது செலவினங்களில் பங்கு பெறுகின்றன.

பல்லாயிரம் - தவறு... பல லட்சம் கோடிகள் கடந்த பல ஆண்டுகளாகச் செலவு செய்யப்பட்டும், எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டிய பிறகும், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி என்கிற பெயரில் ஒதுக்கீடுகள் தொடர்ந்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது கண்கூடு. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதார மருத்துவ வசதிகள் போன்றவை குறைந்தது 20 விழுக்காடு இந்திய மக்களுக்கு இன்னும் தலையாய பிரச்னையாகத் தொடர்கிறது என்பதுதான் நிஜம்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்றத் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி ஹைதராபாதில் ஒரு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியிருப்பது மேலே சொன்ன பிரச்னைக்கான அடிப்படைக் காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைகிறது.

மத்திய அரசின் பல திட்டங்கள் சேர வேண்டியவர்களை முறையாகப் போய்ச் சேர்வதில்லை என்பது இணையமைச்சர் நாராயணசாமியின் கருத்து. மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், மாநில அரசின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. முறையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் மத்திய அரசால் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 60 விழுக்காடு மட்டுமே, பயனாளிகளைச் சென்றடைகிறது என்பதுதான் இணையமைச்சரின் வருத்தம்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம், ஒரு விளையாட்டு அரங்கத்தைச் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் வேலை செய்தவர்களைச் சென்றடையாமல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற ஊழல்கள் ஒருபுறம் இருக்க, பல முறைகேடுகளும் பல்வேறு திட்டங்களில் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் பல முறைகேடுகள் நடப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தும், அதை யாரும் பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றமே இந்த முறையற்ற திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில், யாரிடம் போய் முறையிடுவது?

கால் நூற்றாண்டுக்கு முன்னால் மும்பை நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி கூறியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் பத்தே காசுகள்தான் பயனாளிகளைச் சென்றடைவதாகக் கூறினார் அவர். இப்போது, மத்திய இணையமைச்சரின் கூற்றுப்படி 60 விழுக்காடு பயனாளிகளைச் சென்றடைகிறது. அந்தவகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

இணையமைச்சர் நாராயணசாமி மேலும் கூறுகையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாகப் பயனாளிகளைச் சென்றடையாமல் போவதற்குக் காரணம் மத்திய அரசு இந்தத் திட்டங்களை மாநில அரசுகளின் மூலம் நிறைவேற்றுவதுதான் என்றும் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

இதுபோன்ற திட்டங்களை மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் துணையில்லாமல் மத்திய அரசால் ஒருநாளும் நிறைவேற்ற முடியாது என்பது அமைச்சருக்குத் தெரியாதா என்ன? அவர் கூறுவதுபோல, ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்தால் கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்களே! மத்திய அரசால் அதை எதிர்கொள்ள முடியுமா?

பல நிதி ஒதுக்கீடுகள், திசைதிருப்பி விடப்படுவது என்பது இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் சகஜமாகி விட்டிருக்கிறது. முறையான நிதிநிர்வாகம் இல்லாமல் இருப்பதும், பொதுப்பணம் என்பது கேள்வி கேட்பாரற்ற பணம் என்பதுபோன்ற மனப்போக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்கள் மத்தியில்கூட ஏற்பட்டிருப்பதுதான் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.

முறையான திட்டங்கள், கண்காணிப்பான அரசு, நேர்மையான அதிகாரிகள், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட அரசியல்வாதிகள், விழிப்புடன் செயல்படும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள்... இவையெல்லாம் இருந்தால் ஒரே ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியா இமாலயச் சாதனைகளைச் செய்துகாட்ட முடியும். தெரிந்தும் செய்யத் தயாராக இல்லையே, ஏன்? தீர்வு இதிலிருந்து தொடங்க வேண்டும்!           

நன்றி: www.dinamani.com  03-Jun-2010