I LOVE TAMIL


Wednesday, August 3, 2011

ஆக., - 2 ஆடிப்பூரம், 3-ஆடிப்பெருக்கு!



குருஷேத்ர போர்க்களத்தில், தன் உறவினர்கள் மீது, அர்ஜுனன் அம்பு விட தயங்கிய நேரத்தில், "அர்ஜுனா... தர்மம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அங்கே உறவுகளுக்கு இடமில்லை. இந்த உலகமே நான் தான். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே! உடல் தான் அழியும், அதற்குள் இருக்கும் ஆத்மா, தன் வினைகளுக்கேற்ப இன்னொரு பிறவியை எடுக்கும். எவனொருவன் என்னைச் சரணடையும் சரணாகதி தத்துவத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனே பிறவியைக் கடந்த நிலையை அடைவான்...' என்றெல்லாம் போதித்தார்.
இந்த நிகழ்வு நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால், உலக மக்களிடையே மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சரணாகதி தத்துவத்தை அவர்களுக்கே உரித்தான எளிய நடையில் கற்பிக்க, திருமால் முடிவெடுத்தார். அதற்காக, தன் மனைவி லட்சுமியிடம், "நீ பூலோகம் சென்று, இறைவனைச் சரணடைந்தால் தான் முக்தி நிலை கிடைக்கும்...' என்ற தத்துவத்தைப் போதிக்கும் வகையில் ஒரு பிறப்பை எடு...' என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். "ஏற்கனவே, சீதையாக அவதாரம் எடுத்து, என்னைத் தாங்கள் படுத்திய பாடு போதாதா... இனியும் மனிதப் பிறவியா? வேண்டாம் சாமி; ஆளை விடுங்கள்...' என, ஒதுங்கிக் கொண்டாள். தன் இன்னொரு மனைவி பூமாதேவி பக்கம் சுவாமி திரும்பினார்; அவர் பார்வைக்கென்றே அவள் காத்திருந்தது போல், உடனே சம்மதித்து விட்டாள்.
"எங்கே போய் பிறக்கப் போகிறாய்?' என்று கேட்டதற்கு, "உங்கள் முடிவுப்படி தான் எல்லாம் நடக்கப் போகிறது; எனவே, அதெல்லாம் உங்கள் கையில்...' என்று பிறக்கும் முன்பாகவே, திருமாலிடம் சரணடைந்து விட்டாள் அவள்.
பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் அழகிய தலத்திலுள்ள துளசி வனத்தில், விஷ்ணுசித்தர் எனும் பக்தரின் பார்வையில் படும்படி குழந்தையாகப் படுத்திருந்தாள். இவரையே, "பெரியாழ்வார்' என்கிறோம். அவர், அவளைத் தன் மகளாக ஏற்று, "கோதை' என பெயர் சூட்டி வளர்த்தார். "கோதை' என்றால், "நல்வாக்கு தருபவள்' என்று பொருள். ஆம்... அவள் திருமாலை வணங்க, "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' எனத் துவங்கும், "திருப் பாவையை' நமக்கெல்லாம் அருளியிருக்கிறாள்; இதை, "வேதத்தின் சாரம்' என்பர். வேதத்தைக் கற்றுக் கொள்ளும் தகுதி எல்லாருக்கும் இல்லை. அதை எளிமைப்படுத்தி, முப்பது பாடல்களுக்குள் அடைத்து விட்டாள் கோதை.
எல்லாருக்கும் நல்ல பெயரை சூட்டியுள்ளனர் நம் பெற்றோர்; அந்த பெயருக்கேற்றாற் போல் நாம் நடந்து கொள்ள வேண்டும். அரிச்சந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டவன், பொய் சொன்னால் நன்றாக இருக்குமா? ஆனால், கோதை, தன் பெயரின் பொருளுக்கேற்ப, நல்வார்த்தைகள் கொண்ட பாடல்களைத் தந்து, உலகமே இறைவனை அடைய வழிகாட்டினாள். அவளது அவதார நாளே ஆடிப்பூரம். இந்த நன்னாளில், ஆண்டாளைப் போல நாமும், நம் பெற்றோரின் பெயர் காக்க உறுதியெடுக்க வேண்டும்.
இவ்வாண்டில், ஆடிப்பூரத்திற்கு மறுநாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதுண்டு. குறிப்பாக, புதுமணத் தம்பதியர் காவிரியில் நீராடி, அந்த அன்னைக்கு பூ, பழம் முதலானவை அளித்து வழிபட்டு வருவர்.

அகத்தியரால் நமக்கு அளிக்கப்பட்ட வரமே காவிரி. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பர். அகத்தியர் உருவத்தில் சிறியவர் என்றாலும், நமக்கு அவர் அளித்த நதியோ மிக நீண்டது. ஏராளமான மக்களுக்கு உணவளித்து தாகம் தீர்க்கும் புண்ணிய நதி இது. நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே, ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னோர் உருவாக்கினர்.
இந்த திருவிழாவை தமிழகமே கொண்டாட வேண்டும். காவிரி மட்டுமல்ல, தமிழகத்தின் பிற நதிகளும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை. நதிகளை அழிப்பதன் மூலமே எதிர்கால சந்ததிக்கு நாம் இன்னலை ஏற்படுத்திய பாவத்திற்கு ஆளாவோம். ஆடிப்பூர நன்னாளில், அவதரித்த பூமித் தாயையும், ஆடிப்பெருக்கு நன்னாளில், பெருக்கெடுக்கும் காவிரி தாயையும் வணங்கி, அவர்களின் நல்லருள் பெறுவோம்.
 
நன்றி: www.dinamalar.com - ஜூலை 31,2011

No comments: