I LOVE TAMIL


Thursday, August 25, 2011

தலையங்கம்: பாழாகும் விளைநிலங்கள்!

சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.


உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.


ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.


உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.


இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்! 

நன்றி: www.dinamani.com  -  23-Aug-2011






No comments: