I LOVE TAMIL


Thursday, August 25, 2011

சுனாமி பாதிப்பை சமாளிக்க ஜப்பானில் புதுமையான திட்டம்!

சமீபத்தில், ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும், சுனாமியும், அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. அணு மின் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், அங்கிருந்து கதிர் வீச்சு பரவி, சுற்றுச் சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில், மற்ற நாடுகளுக்கு எப்போதுமே முன் மாதிரியாக செயல்படும் ஜப்பானியர்கள், இந்த விஷயத்திலும் அந்த போக்கை பின்பற்றத் துவங்கி விட்டனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், மின்சாரத்தை சேமிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குளிர்சாதன வசதி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குளிர்சாதன வசதி இல்லாத நேரத்தில், எப்படி இருப்பது என்பதற்கும், சில ஆலோசனைகளை ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான, காற்றோட்டமான உடைகளை அணிந்து வரும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுக்கம் இல்லாத டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில், "டை' அணிந்து வருவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பெண் ஊழியர்கள், கால்களை முழுவதும் மறைக்கும் வகையிலான, "ஷூ'க்களை அணிய வேண்டாம் என்றும், சாதாரண செருப்பு மற்றும் ஷூக்களை அணிந்து வரும்படியும் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, "கேட்வாக்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், 15 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கின்றனர், ஜப்பான் அதிகாரிகள். தங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்ட போதே, அசராமல் எழுந்து நின்று, சாதித்துக் காட்டிய தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஜப்பானியர்கள். அவர்களை இந்த சுனாமி என்ன செய்து விடும்?
— ஜோல்னா பையன். 



No comments: