I LOVE TAMIL


Monday, November 16, 2009

அபாயத்தின் அறிகுறி!

வளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். நிலத்தில் வாழும் உயிரினங்களைவிட மிகஅதிகமாகப் பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக் கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.


அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.

கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.

குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.

துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.

வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.

இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


Thanks to : www.dinamani.com - 16 Nov 2009

No comments: