I LOVE TAMIL


Wednesday, January 21, 2009

ஊருக்குத்தான் உபதேசமா!

ஊருக்குத்தான் உபதேசமா!

மக்கள் மன்றம் பல விசித்திரமான வழக்குகளை சமீபகாலமாகச் சந்தித்து வருகிறது. அதில் ஒன்றுதான் நீதித்துறைக்கும், தலைமைத் தகவல் ஆணையத்துக்கும் இடையில் நடைபெறும் ஒரு விவாதம். நீதிபதிகள் மக்கள் மன்றத்தின் பார்வைக்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டவர்கள் என்கிற பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது இந்தப் பிரச்னை.

1997-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடந்த அகில இந்திய நீதிபதிகள் மாநாட்டில், எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கைத் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி எல்லா நீதிபதிகளும் தங்களது சொத்து விவரங்களைத் தந்திருக்கிறார்களா? அப்படியென்றால், அந்த விவரங்கள் தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு ஒன்றைச் சமர்ப்பித்தார் எஸ்.சி. அகர்வால் என்பவர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருக்கும் இந்தத் தகவலை யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை நீதிபதி தர மறுத்துவிட்டது முதல், விவாதம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

தலைமைத் தகவல் ஆணையர் இந்த விஷயத்தில் மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருக்கும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களை மனுதாரருக்குத் தரும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதை எதிர்த்து, இப்போது உச்ச நீதிமன்றப் பதிவகம், தலைமைத் தகவல் ஆணையரின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் அல்ல என்றும், அதனால் நீதிபதிகள் பற்றி விவரங்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மனுதாரருக்குத் தர வேண்டிய அவசியம் கிடையாது என்றும், அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றப் பதிவகமும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகமும் வேறு வேறு என்றும் முன் வைக்கப்பட்ட வாதங்களைத் தலைமைத் தகவல் ஆணையர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது பொதுநன்மை குறித்த தகவல்களைப் பெறுவதற்காகத்தானே தவிரத் தனிநபர் பற்றிய விவரங்களைப் பெறுவதற்காக அல்ல என்பது நீதிமன்றத்தின் வாதம். மேலும், தன்னிடம் தனது சக நீதிபதிகள் நம்பிக்கையின் பேரில் அளித்த தகவல்களைப் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்வது நம்பிக்கைத் துரோகம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் சட்டத்தின்படியும், நீதிபதிகள் நியமனம் மற்றும் செயல்முறை சட்டப்படியும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கையோ, ஏனைய விவரங்களையோ தலைமை நீதிபதியிடம் தரவேண்டிய அவசியம் கிடையாது என்பது நீதிபதிகள் தரப்பு வாதம். அகில இந்திய நீதிபதிகள் மாநாட்டில் அதிகாரபூர்வமற்ற தீர்மானமாகத்தான் சொத்துக் கணக்கைத் தலைமை நீதிபதிக்கு சமர்ப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதே தவிர எந்தவிதத் தீர்மானமோ சட்டமோ நீதிபதிகளைக் கட்டுப்படுத்தாது என்பது நீதித்துறையினரின் வாதம்.

இதெல்லாம் சரி. அரசியல் சட்டம் கூறவில்லை, சட்டத்தில் இடமில்லை, சம்பிரதாயம் சம்மதம் தரவில்லை, எங்களைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் இனியும் எத்தனை நாள்கள்தான் நீதித்துறை கூறிக்கொண்டு மக்களின் கண்காணிப்பு வளையத்துக்கு உள்படாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனநிலையில் தொடரப் போகிறது?

அரசியல்வாதிகளின், அதிகார வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் அழுக்கையெல்லாம் அலசிப் பிழிந்து, குற்றம் காணும்போது துணிந்து குட்டி, தடம் புரளும்போது தடுத்து நிறுத்தித் தட்டிக் கேட்கும் நீதித்துறைமீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம்.

கையும் களவுமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டிருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டது. ஊழல் நீதிபதிகளை என்ன செய்வது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே கையைப் பிசைந்து கொண்டு பரிதாபமாகத் தனது இயலாமையை வெளிப்படுத்திய காட்சியும் அரங்கேறியது.

நீதிபதியின் நேர்மை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் நீதிபதியின் தீர்ப்பு விமர்சனத்துக்கு உட்பட்டதுதான். ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், ஒழுக்கசீலர்களாகவும், உத்தமர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் உத்தமர்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடந்து காட்டவும் வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கூடத் தனது சொத்துக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைத்தாக வேண்டும் எனும்போது, பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் மட்டும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது என்ன நியாயம்?

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும் என்பார்கள். அதேபோல, நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு உட்படுத்தி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? ஊருக்குத்தானா உபதேசம்?

Thanks - www.dinamani.com - Monday January 19 2009

Thursday, January 1, 2009

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

இன்சூரன்ஸின் நோக்கம் என்ன?

வாகன விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அளித்துள்ள தீர்ப்பு சற்றே வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும், வாகனத்தில் "ஓசி'யில் உட்கார்ந்து செல்பவர்களும் ஒருங்கே கருத்தில் கொள்ள வேண்டிய தீர்ப்பு இது.

மோட்டார் சைக்கிள் (பைக்) சொந்தக்காரர் ஒருவர் தன்னுடைய மகனிடம் வண்டியை ஓட்டக்கொடுத்தார். அந்த இளைஞர் தனது நண்பனை பின்னால் உட்காரவைத்து ஓட்டிச் சென்றார். திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதனால் "பைக்' ஓட்டிச் சென்ற இளைஞர் படுகாயம் அடைந்து இறந்தார், பின்னால் உட்கார்ந்திருந்தவர் காயம் அடைந்தார்.

அந்த தகப்பனார் தன்னுடைய மகன் இறப்புக்கு இழப்பீடு கேட்டு மனுச் செய்தார். "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது. தந்தைக்கு மகன் சொந்த உறவு என்பதால், அவரை ""மூன்றாவது நபராக'' கருத முடியாது, எனவே இழப்பீடு தர முடியாது என்று கூறியது.

அவர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவர் மீது பரிதாபப்பட்டு, இழப்பீடு தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம் உடனே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா, சிரியாக் ஜோசப் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்தது. ""இன்சூர் செய்தவரின் மகன் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது நடந்த விபத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமா?'' என்பதுதான் இப்போதைய கேள்வி என்ற பெஞ்ச், 2006-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டியது.

திலக் சிங் என்பவர் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அது. அந்த வழக்கில், இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருந்தவர் அடைந்த காயத்துக்கு நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் ஆகியிருந்தது. ""2 சக்கர வாகனத்தின் பின்னால் உட்காருபவர், ஓட்டுபவர் இரக்கம் காட்டி ஏற்றிச் செல்வதால் (ஓசியில்) பயணிப்பவர் ஆவார்; எனவே அவருக்கு இழப்பீடு பெற தகுதி ஏதும் கிடையாது'' என்று அந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது. இதையே உச்ச நீதிமன்ற "பெஞ்ச்' இந்த வழக்கிலும் தீர்ப்புக்கு முன்னுதாரணமாகப் பின்பற்றியிருக்கிறது.

2 சக்கர வாகனங்களை இன்சூர் செய்யும்போது அந்த வண்டியின் இழுவைத் திறன், அதன் வகை, அதன் விலை மதிப்பு ஆகியவற்றுடன் அதில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதிராக இருக்கிறது. 2 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று குறிப்பிட்டு இன்சூர் செய்வது எதற்காக?

""தற்செயலாக ஏற்படும் விபத்துகளுக்கு கம்பெனி ஜவாப்தாரியல்ல'' என்ற பழைய கண்ணோட்டமே இத்தீர்ப்பில் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் இத் தீர்ப்பானது முக்கியமான ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறது. வாகன உரிமையாளரைத் தவிர மற்றவர்களுக்கு இழப்பீடு பெற உரிமையில்லை என்பதே அது.

வாகன விபத்துகளும் அதிகரித்து, வழக்குகளும் அதிகரித்துவரும் இந்நாளில் மத்திய சட்ட அமைச்சகமும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அமர்ந்து இத் தீர்ப்பின் அடிப்படையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். மருத்துவச் செலவு அல்லது மரணம் ஆகியவற்றால் வேதனைப்படும் நிலையில் இத்தகைய நிவாரண மறுப்பு வேதனையை அதிகப்படுத்தவே செய்யும்.

மற்றொன்றையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம். வாகன விபத்து வழக்குகளில் வாகன ஓட்டிகளை மட்டும் போலீஸôர் எதிரிகளாகச் சேர்க்கின்றனர். சாலையை மோசமாக வைத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையினரையும், போதிய விளக்கு வசதி செய்யாத உள்ளாட்சிமன்ற அதிகாரிகளையும் விட்டுவிடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் பல இன்சூரன்ஸ் துறையில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்கி இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சட்டதிட்டங்களும், அரசின் கட்டுப்பாடும் இல்லாமல் போகுமானால், தீர்ப்புகள் மட்டுமல்ல, அரசாங்கமே வெகுஜன விரோத ஆட்சியாக மாறிவிடும் ஜாக்கிரதை! இதனால் விபத்துகளுக்கு வாகனங்களின் நிலையும் வாகன ஓட்டிகளும்தான் காரணம் என்ற பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதில் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவையும் சேர்ப்பது விரும்பத்தக்கது.

Thanks - www.dinamani.com - 31.12.2008

Monday, December 29, 2008

மக்கள் சக்தி

மக்கள் சக்தி

மக்கள் சக்தி மக்கள் சக்தி என்கிறார்களே, அது உண்மையாகவே எப்படிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திவிட்டனர் திருவண்ணாமலை மக்கள்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை எனப்படும் இரண்டு மலைகளையும் இரும்புத் தாது எடுப்பதற்காக வெடிவைத்து தகர்க்கும் திட்ட அனுமதிக்காக டிசம்பர் 27-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில்தான் இந்த மக்கள் சக்தி வெளிப்பட்டது.

மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த மலைகள் உள்ளன. இந்த இரு மலைகளிலும் 41 சதவீதம் அளவுக்கு இரும்புத் தாது இருப்பது உண்மையே. தமிழ்நாடு இரும்புத் தாது கனிமக் கழகம், தொழில்வளர்ச்சிக் கழகம், ஜே.எஸ். டபிள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த இரு மலைகளையும் தகர்த்து இரும்புத் தாது பெறும் திட்டத்துக்கு அரசுக்கு கருத்துரு கொடுத்துள்ளன.

இந்த இரு மலைகளில் வேடியப்பன் மலையும் இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. மலையில் உள்ள வேடியப்பன் கோயிலின் மூலிகைத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தவிர, மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையை ஆன்மிக உணர்வுடன் மாதம்தோறும் சுமார் 5 லட்சம் பேர் கிரிவலம் வருகின்றனர்.

கிரிவலம் வருபவர்களின் வசதிக்காக மலையையொட்டி இன்னொரு சுற்றுப்பாதை அமைத்தால், கிரிவலப் பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டபோது, "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்று அனுமதி மறுத்த வனத்துறைதான் இப்போது இந்த இரு மலைகளிலும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும் 2 லட்சம் மரங்களை வெட்டவும் அனுமதிக்கிறது. இது எப்படி?

இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் 9.2 கோடி டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும்; மலையை தொடர்ந்து வெடிகள் வைத்து தகர்ப்பதும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களைக் கொண்டு செல்ல தொடர்ந்து லாரிகள் இயக்கப்படுவதும் திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை மோசமானதாக்கிவிடும் என்பது நிச்சயம்.

தமிழக மக்களின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவண்ணாமலை கோயிலை "பாரம்பரிய நகரமாக' அறிவிக்கச் செய்து, அந்த நகரத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த நகரின் சூழலை அடியோடு அழிக்கத் துணை நிற்பது எதனாலோ?

திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுமார் 800 பேர் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில் அங்கே இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்-எம்பி, எம்எல்ஏ-க்கள்- யாருமே இல்லை. திமுக பிரதிநிதிகள் கட்சிப் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பாமக-1, காங்கிரஸ்-3, அதிமுக-1 எம்எல்ஏ-க்களும் இந்தக் கருத்துக்கேட்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த மாவட்ட மண்ணின் மைந்தரான உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு (தண்டராம்பட்டு), முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திருவண்ணாமலை) திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு தெரியாமல் இந்தத் திட்டம் கருத்துக்கேட்பு வரை வந்துவிட்டது என்றால், யாரால் நம்ப முடியும்? அவர்கள் நினைத்திருந்தால் அரசுத் துறை அளவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?

""இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன'' என்று ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலர் சமாதானம் செய்தபோது ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: ""நீங்க அம்பாசமுத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா?''

அவள் ரத்தம் கொதிக்கிறது; ஏனென்றால், அவளால் வேறு நகரத்துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது; தன் பிள்ளைக்கு பெரியபடிப்பு கொடுத்து, வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ "செட்டில்' ஆகிவிட முடியாது; அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப் போகிறவள் என்பதால்தான் அந்தத் துடிப்பு.


Thanks to www.Dinamani.com on 29.12.2008 - தலையங்கம்

Saturday, December 20, 2008

வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!

மு. முரளீதரன்

""அன்றாட வாழ்வில், நாம் காண்போர் அனைவருமே மகிழ்வுடன் வாழ்கிறார்களா?'' என்று திடீரென்று எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டது! ஒவ்வொருவரின் முகத்திலும், ஏதோ ஒரு கவலை தெரிகிறது! நேற்றைய விஷயங்கள், இன்றைய நிகழ்வுகள் பற்றித்தான் நம்மவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்களே தவிர, "நாளைக்கு என்ன செய்வது'? என்ற எதிர்காலச் சிந்தனை பெரும்பாலோர்க்கு இல்லை! சிலரிடம் உண்டு! ஏனெனில், "இன்று நல்லபடியாக நாள் முடிந்தால் போதும்'! என்ற எண்ணமே மேலோங்குகிறது! அவ்வளவு இடர்ப்பாடுகள்!

நான் அண்மையில் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஓர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியிலிருக்கும் போதே, முதல் தேதி சம்பளம் பெறும் நாளில் இருக்கும் முகமலர்ச்சி, மாதக் கடைசியான முப்பதாம் தேதியிலும் மாறாது! "இது எப்படி அவருக்குச் சாத்தியமாகிறது?' என்று நெடுநாள்களாக அவரைக் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது!

அவர் சொன்னார். ""நாம் படிக்கும் நீதி நூல்களும், நம்மைச் சுற்றி வாழ்வோரின் செயல்பாடுகளும் நம்மை மிகவும் எச்சரிக்கின்றன. ஆனால், நாம்தான் அதைக் கண்டுகொண்டு, நம் அன்றாட வாழ்வோடு பொருத்திக் கொள்வதில்லை! நாமும் சிந்தித்து, நம் குடும்பத்தினரையும் சிந்திக்கச் செய்துவிட்டால், அமல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்! இதுவே சத்தியம்!

ஊரைத் திருத்தப் புறப்படுவதற்கு முன்பு, உன்னை நீ திருத்திக் கொண்டாலே போதும்! பிறருக்கு உபதேசிக்க உனக்கொரு தகுதி வந்தாலும்கூட, யாராவது கேட்டாலொழிய நீயாகச் சென்று ஆலோசனை தரவேண்டியிராது'' - என்றதும், நான் என்னுள்ளே மெதுவாக ஒரு மாற்றம் தோன்றுவதை உணர்ந்தேன்!

வேண்டாத விஷயங்களிலும்கூட, நாமே முந்திக்கொண்டு, பிறர்க்கு அறிவுரை கூறுவோர் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? வீண் பகட்டாக வாழ்ந்து, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல், ""வாய்தா'' வாங்கிக் கொண்டு, ஒரு கடனை வாங்கி, மற்றொரு கடனை அடைத்து, எந்தக் கடனிலிருந்தும் மீளாமல், விழிகள் பிதுங்கி, மொழிகள் பதுங்கி, அவதிப்படுகிறோமே, இதற்கு மாற்றாக நல்வழி ஏதுமில்லையா? நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ""இல்லறத்தில் துறவறம்'' என்று வாழ்ந்து பாருங்கள்; எந்தக் கவலையும் யாருக்கும் எப்போதும் இல்லை! உங்கள் அவசியமான தேவைகளுக்காக மட்டும் செலவிடுங்கள். அனாவசியமான ஆசைக்காக உங்களை அடிமையாக்கிக் கொள்ளாதீர்கள். ""இவை இல்லாமலும்கூட நம்மால் வாழ இயலும்'' என்ற மனப்பக்குவம் நமக்கு வளர்ந்துவிட்டால், நமது வருவாய்க்குள்ளே வாழ முடியும். சிக்கனமாய் வாழ்வதால், சிறுதொகை மீதமாகும். அதைப் பெருந்தொகையாக மாற்றுவதே சேமிப்பு'' என்றார்.

எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை இவ்வளவு அனாயசமாகச் சொல்கிறாரே! என்று வியந்தேன்! என் நண்பர் தொடர்ந்தார். ""வங்கியில் Term Deposit என்று குறுகியகால வைப்பும்; Fixed Deposit என்று நீண்டகால வைப்பும் உள்ளன. அதைப்போல நம்மிடம் "நேரமேலாண்மை' என்ற TIME DEPOSITm, ‘Financial Discipline என்ற "பண ஒழுங்கும்' இருக்க வேண்டும். இதுவே மனிதனின் TD, FD ஆகும்!

""உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்வது காலத்தினை நாம் மதிப்பதாகும். உரியவற்றுக்கு மட்டுமே செலவிடுவது பணத்தை நாம் மதிப்பதாகும். இவை இரண்டும்தான் நம் "நாநயத்திற்கு உதவும் நாணயங்கள்'' என்றதும், எனக்கு ஆயிரம் வாட்ஸ் பல்ப் ""பளிச்'' என்று என் உள்ளத்தில் ஒளியேற்றியதைப் போல உணர்ந்தேன்! சிலரின் வாக்கு, இருள் நீக்கும் ஒளிவிளக்கு!

"நமக்கு உபதேசிப்பதுபோல, வாழ்ந்து காட்டுவார் எவருமில்லையே!' என்று இதுவரை தவறாக எண்ணினேன்! ஆனால் அவரைச் சந்தித்த பின்பு, ""நாமே ஏன் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டக்கூடாது?'' என்ற திடமான மன உறுதி எனக்கு ஏற்பட்டது! சிந்தனையும் செயலும் இரட்டைத் தண்டவாளங்கள் அல்லவா!

Thanks - www.dinamani.com - Monday June 5 2006 00:00 IST

Sugarcane - Issue




Thanks - www.dinamalar.com - 19.12.2008

Monday, December 8, 2008

Petrol Price





Source : www.dinamalar.com - 07.12.2008

மழை இனிது! மனிதன்..?

மழை இனிது! மனிதன்..?

அண்மையில் பெய்த பலத்த மழையினால் சென்னை மாநகரமே நாறிக் கொண்டிருக்கிறது. காரணம் - மழை அல்ல; அது கலந்த மண்ணும் அல்ல. மனிதர்தம் வாழ்க்கை முறைதான் இந்த நாற்றத்துக்கும், அதைத் தொடரும் நோய்களுக்கும் காரணம்.

சென்னை மாநகர் மட்டுமன்றி, புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ள எல்லா நகரங்களிலும் மழைநீர் வடிவதற்கு முன்பே நாற்றமெடுத்து கிருமிகளை உற்பத்தி செய்வது ஏன் என்றால், குடியிருப்புகளின் அனைத்து மலஜலக் கழிவுகளும் புதை சாக்கடையில் கலக்கப்படுவதுதான்.

ஒரு நகரவாசி குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுதற்குப் பயன்படுத்தும் தண்ணீர் புதை சாக்கடையில் கலப்பதால் தீங்கு ஏற்படுவதில்லை. இதில் கழிவறைக் கழிவுகளைச் சேர்ப்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது.

மாநகர, நகரக் கட்டடங்களில் உள்ள கழிப்பறைகள் இரண்டு வகைதான். ஒன்று, நிரம்பிய கழிவுத் தொட்டியை (செப்டிக் டேங்க்) மோட்டார் வைத்து இறைத்து புதை சாக்கடையில் சேர்த்துவிடுவது. இரண்டாவது, நேரடியாக புதை சாக்கடையில் கலக்கச் செய்வது. பலத்த மழையின்போது மழைவெள்ளமும் புதை சாக்கடையும் கலந்து நகரம் முழுவதும் திறந்தவெளி செப்டிக் டேங்க்-ஆக மாறிவிடுகிறது.

வீடுதோறும் கழிவறைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் நிறைவேற்றியபோது, புதை சாக்கடைகள் இல்லாத சிறுநகரங்களில் ஒரு நல்ல, எளிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வீட்டின் கழிவறைக்கு இரண்டு கழிவுத்தொட்டிகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. ஆறு அடி உயரம், ஒரு மீட்டர் விட்டமுள்ள இரண்டு உறைகிணறுகள்தான் இந்தத் தொட்டிகள். மலஜலத்தால் ஒரு தொட்டி நிரம்பியவுடன் அதற்கான வழியை மூடிவிட்டு அடுத்த தொட்டிக்குள் கழிவுகள் சேரும்படி செய்வதும், நிரம்பிய தொட்டியானது இரண்டு, மூன்று மாதங்களில் காய்ந்து உரமாக மாறியதும் அதை விவசாயத்துக்கு விற்றுவிடுவதும்தான் அந்த எளிய தொழில்நுட்பம். இப்போதும்கூட, சாக்கடைவசதி இல்லாத கிராமங்களில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம்தான் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

ஆனால் நகரவாசிகள்தான் எப்போதுமே "ஸ்பெஷல்' ஆயிற்றே. அவர்களுக்கு இத்தகைய தொழில்நுட்பத்தை அரசும் உள்ளாட்சிகளும் அறிமுகம் செய்யக்கூட முயற்சிக்கவில்லை.

ஓர் ஆண்டு காலத்தில் ஒரு மனிதனின் மலஜலக் கழிவுகளிலிருந்து 4.56 கிலோ நைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாஷியம் கிடைக்கின்றன. இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஓர் ஆண்டுக்கு 60 லட்சம் டன் உரம் (நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம்) கிடைக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் உரத்தின் அளவே 20 லட்சம் டன்தான். எவ்வளவு வீணடிக்கிறோம் என்பது இப்போது புரியும்.

மனிதனின் நாற்றமெடுத்த உடல் இயந்திரத்தைக்கூட சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில்தான் இயற்கை படைத்திருக்கிறது. ஆனால் மனிதன்தான் தன்னைப் படைத்த இயற்கையை சுயநலத்தாலும் வன்மத்தாலும் நாசப்படுத்துகிறான்.

நிலத்தடி நீர் கீழே இறங்கிக்கொண்டே செல்லும் ஆபத்து தலைக்கு மேலாக வந்தபோதுதான், அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம் என்ற விதிமுறையை அரசு கொண்டுவந்தது. அதேபோன்று கழிவுத் தொட்டிகளிலும் அரசு விதிமுறைகளை புகுத்த வேண்டும்.

நகரங்கள், மாநகரங்களில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் உள்ள கழிப்பறைக் கழிவுகள் புதை சாக்கடையில் கலக்கும்படி செய்யக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கழிவுத் தொட்டிகள் கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க ஒரேயொரு அரசாணை போதுமானது. குடியிருப்பு, அடுக்ககம், அலுவலகம் எதுவானாலும் அங்குள்ள கழிப்பறை வசதிகளுக்கு ஏற்ப கழிவுத் தொட்டிகளின் அளவை அரசு தீர்மானிக்க வேண்டும். நிரம்பும் கழிவுகள் காய்ந்ததும் விவசாய உரமாக விற்பனை செய்வது எளிது.

மாநகரத்தில் இதை நடைமுறைப்படுத்துவதால் யாருக்கும் தீங்கு இல்லை; மாநகர சுற்றுச்சூழல் கெடாது; நாற்றமின்றி மழைநீர் வடியும்; தேங்கினாலும் உடனே கிருமிகள் உற்பத்தியாகாது; நோய்கள் பரவாது; மாநகரிலும் மழை இனிதாகவே இருக்கும்.

Source: www.dinamani.com - Monday December 8 2008