I LOVE TAMIL


Thursday, October 30, 2008

உடல்நலனுக்கு உணவுப் "பிரமிடு'!

உடல்நலனுக்கு உணவுப் "பிரமிடு'!

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்

அந்தக்காலத்தில் சக்கைப் போடுபோட்ட திரைப்படம் ""மாயாபஜார்''.

இந்தத் திரைப்படத்தில் மறைந்த நடிகர் ரங்காராவ் தம்முன் மலைபோல் குவிந்திருக்கும் உணவு வகைகளை ""கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், இது கௌரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும், ஹஹஹஹா! ஹஹஹஹா!'' என்று ஆர்ப்பாட்டமாகப் பாடியவாறே அத்தனை உணவு வகைகளையும் ""லபக், லபக்'' என விழுங்குவார்.

இக் காட்சி காண்பதற்கு நகைச்சுவையாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கும். அத்தகைய பெருந்தீனிக்காரர்களுக்கும், உடல்நலனை உண்மையாகவே பேண விரும்பும் உடல்நல ஆர்வலர்களுக்காகவும், எவ்வுணவை, எம்முறைப்படி, எவ்வளவு உண்ண வேண்டும் என்பதைக் குறிக்கும் "உடல் ஆரோக்கிய உணவுப் பிரமிடை' மருத்துவ உலகம் உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரமிடில் உள்ளதைப்போல கீழே உள்ள உணவு வகைகளை அதிகமாகவும், படிப்படியாக மேலே உள்ளவற்றைக் குறைவாகவும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.

இந்தப் பிரமிடில் முதலிடத்தைப் பிடிப்பது காய்கறி, கீரைகள்தான். அதுவும் தினம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உண்ணச் சொல்கிறது இப்பிரமிடு. இதைத்தான் தற்போது மேலைநாட்டு மருத்துவர்கள் ""நீங்கள் ஆகாரத்திற்கு காய்கறிகளைத் தொட்டுக் கொள்வதற்குப் பதிலாக, காய்கறி, கீரை சார்ந்த பொறியலுக்கு ஆகாரத்தைத் தொட்டுக் கொள்ளுங்கள்'' என்று நோயாளிகளுக்குத் தினமும் அறிவுறுத்தி வருகிறார்கள். இல்லையேல் ""சாதம் பாதி, காய்கறி பாதி'' என்ற அளவிலாவது தினமும் காய்கறிகளைச் சேர்க்கச் சொல்கிறார்கள்.

இவ்வாறு உண்பதன் மூலம் அவற்றில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சத்து போன்றவை அப்படியே கிடைப்பதால் உடல் ஆரோக்கியமுடன் விளங்குகிறது.

உதாரணமாக கேரட்டைத் தினமும் உண்பதால் கண்நோய், வயிறு, குடல்நோய், ரத்தக்குழாய் அடைப்பு, ஞாபகமறதி, வறட்சியான சருமம், மாதவிலக்கு வலி, ரத்த சோகை, மூட்டுவலி தீரும். பீன்ஸில் இரும்புச்சத்தும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அதிகம் உள்ளதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

முட்டைக்கோஸில் நார்ச்சத்துடன் பொட்டாசியம் உப்பும் உள்ளதால் ரத்த சுத்தியும், உடல் சுத்தியும் கிடைக்கிறது. நார்ச்சத்துடன் போலிக் அமிலம் அதிகமிருப்பதால் புற்றுநோய், இதயநோய் முதலியவற்றுக்கு அவரைக்காய் அருமருந்து.

ஏதாவது புதிதாகக் கண்டுபிடித்து புகழ் பெற வேண்டும் என விரும்புபவர்கள் பசலைக்கீரையை உண்ண வேண்டும். இது புதுப்புது யோசனைகளை மூளைக்கு அள்ளித் தருமாம்.

வெண்டைக்காய் கண்கள், கால்கள் எரிச்சலைப் போக்கி உடம்பைக் குளிர்விக்கும். நீங்கள் அழகான உடல்வாகு பெற வேண்டுமானால் வைட்டமின் பி2 நிரம்பியுள்ள முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிடவும். முருங்கை, புதினா, கொத்தமல்லி ஆகியவை ரத்தவிருத்தி செய்யும். ""யானையின் மதம் அடக்க வாழைத்தண்டு, மனிதனின் திமிர் அடக்க கீரைத்தண்டு'' என்பார்கள்.

பிரமிடில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவை பழவகைகள். உண்ண வேண்டிய அளவு தினசரி 250 கிராம் முதல் 300 கிராம் வரை. நமது ரத்தம் இயற்கையில் காரத்தன்மை உடையது. இது அமிலத்தன்மை உடையதாக மாறும்போதுதான் பலவித நோய்களும் உருவாகின்றன. பழஉணவுகள் காரத்தன்மையுள்ள உணவுகள். இவைகள் சளியை உண்டாக்குவதில்லை. சளியையும், ரத்தத்திலுள்ள கழிவையும் வெளியேற்றி ரத்தத்தின் அமில காரத்தன்மையைப் பாதுகாக்க பழங்கள் பெருமளவு உதவி புரிகின்றன.

இதன் சிறப்பை உணர்ந்துதான் நீரிழிவு நோயாளிகள் தினமும் 250 கிராம் வரை பழங்களை உண்ணச் சொல்லி நீரிழிவு சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்ய ஆப்பிள் பழத்தைத் தோலுடன் சாறு எடுத்து அருந்துங்கள். தினமும் மது அருந்துபவர்கள் அதிலிருந்து விடுபட விரும்பினால் பப்பாளி சாப்பிடுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவரா, தினமும் நெல்லிக்கனி சாப்பிடுங்கள். அதிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

புற்றுநோய், இதயநோயால் பாதிக்கப்பட்டவராயிருந்தால் மாதுளம் பழத்தைத் தினமும் சாப்பிடுங்கள். மேலும் ரத்தத்தை விருத்தியடையச் செய்து அடிக்கடி ஏற்படும் தலைவலி, பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிலக்கு, இதய படபடப்பு முதலியவற்றை இது நீக்குகிறது.

பழவகைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவை பயறு வகைகளும் (தினமும் 400 கிராம்) தானியங்களும் (தினமும் 250 கிராம்).

முளைவிட்ட கோதுமை, வறுத்த வேர்க்கடலை இவற்றில் "பைரிடாக்சின்' எனும் வைட்டமின் பி6 சத்து இருப்பதால் இவை ரத்தக்குழாய்கள் தடிமனாவதைத் தடுக்கிறது. உங்களின் குழந்தை பிடிவாதக் குழந்தையா? ""பருப்புகளின் அரசன்'' என்றழைக்கப்படும் பாதாம்பருப்பை சிறிதளவு தினமும் கொடுத்துப் பாருங்கள். செல்லக்குட்டி சமர்த்துக் குட்டியாகிவிடும்.

மனித மூளையிலுள்ள ""லிம்பிக் சிஸ்டம்'' என்ற அமைப்பே நம்மை எப்போதும் மனமகிழ்வுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த முறையைப் பாதுகாக்க உதவும் ஓர் எளிய உணவு ஓட்ஸ். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, புகைப்பிடிப்பதில் ஆர்வம், உடற்பருமன், புற்றுநோய் முதலியவற்றையும் ஓட்ஸ் கட்டுப்படுத்துகிறது. தவிர ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட கோலை ஊன்றி நடப்பவரும் கோலை வீசி நடக்கலாம்.

பச்சைப்பயறு, நிலக்கடலை, வெல்லம் சேர்ந்த ""நிலக்கடலை பால்பாயாசம்'' வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், மூளை தெளிவிற்கும் அதிகப் பயன் அளிக்கிறது. உலகிலேயே அழகான தலைமுடியைப் பெற்றவர்கள் சுவிட்சர்லாந்து மக்களாம். காரணம் பாஸ்பரஸ், சிலிக்கான் தாது உப்புக்கள் அடங்கிய தானியம் மற்றும் பல வகைகளை உணவில் நிறைய சேர்த்துக் கொள்வதுதானாம்.

பிரமிடில் அடுத்த இடத்திலுள்ள பால், தயிர், மோர் இவைகள் புரதச்சத்துக்காகவும் எலும்புகளின் கால்சியத் தேவைக்காகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. ""நீர் சுருக்கி, நெய் உருக்கி, மோர் பெருக்கி உண்'' என்பது நோயற்ற வாழ்விற்காக நம் முன்னோர்கள் கூறிய பொன்மொழி. தயிரை நன்கு கடைந்து சிலுப்பி மோராக்கி அருந்த உஷ்ண நோய்கள் பலவும் தீரும். இவைகளின் அளவு சராசரியாக 1 நாளைக்கு 250 மிலி.

அடுத்த இடத்திலுள்ள மாமிசம், எண்ணெய் இவைகளை கூடுமானவரை மிதமாகப் பயன்படுத்தல் நலம். ஆக, ""வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே'' என்ற நம் முன்னோர்களின் பொன்மொழியை நாம் அனைவரும் அவசியம் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது.

ஏனெனில் புதுப்புது நோய்களால் மனிதகுலம் அல்லலுறும் இவ்வேளையில் செல்வம் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். உடல்நலம் போனால்?

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை & நீர் உணவு மருத்துவ மையம், கோபி.)

Source : www.dinamani.com - Friday January 12 2007

No comments: